5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

`ஒன்பது' முன் ஆயிரம்

470.ஒன்பா னிறுதி உருபுநிலை திரியாது
இன்பெறல் வேண்டுஞ் சாரியை மரபே.

இதுவும் அது.

ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது சாரியை மரபு இன்பெறல் வேண்டும் - ஒன்பது என்னும் எண்ணின் இறுதிக் குற்றியலுகரம் தன் வடிவுநிலை திரிந்து கெடாது சாரியையாகிய மரபினையுடைய இன்பெற்று முடிதல் வேண்டும்.

எ - டு :: ஒன்பதினாயிரம் என வரும்.

உருபு என்றும் , நிலை என்றும் , சாரியை மரபு என்றும் கூறிய மிகுதியான் , ஆயிரமல்லாத பிற எண்ணின் கண்ணும் பொருட் பெயரிடத்தும் , இன்னும் உகரமும் வல்லெழுத்தும் பெற்று முடியும் முடிபும் கொள்க.

ஒன்பதிற்றுக்கோடி, ஒன்பதிற்றொன்று, ஒன்பதிற்றுத்தடக்கை, ஒன்பதிற்றெழுத்து என வரும்.

இன்னும் அவ்விலேசானே , மேல் எண்ணாயிரம் என்றவழி ஒற்றிரட்டுக் கொள்க.

(64)