5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

அவற்றுடன் உயிர் முதல் மொழியும் யகரமும்

479.அதனிலை உயிர்க்கும் யாவரு காலையும்
முதனிலை ஒகரம் ஓவா கும்மே
ரகரத் துகரந் துவரக் கெடுமே.

இஃது, ஒன்று முதல் ஒன்பான்களோடு பொருட்பெயருள் உயிர் முதன்மொழி முடியுமாறும் மேற்கூறிய யகரம் வேறுபட முடியுமாறும் கூறுகின்றது.

அதன் நிலை உயிர்க்கும் யா வருகாலையும் முதல் நிலை ஒகரம் ஓ ஆகும் - அவ்வொன்று முதல் ஒன்பான்களோடு புணருமிடத்து உயிர் முதன்மொழி வந்த இடத்தும் யா முதல் மொழி வந்த இடத்தும் முதல் நிலை எண்ணாகிய ஒன்று என்பதன்கண் ஒகரம் ஓகாரம் ஆம் , ரகரத்து உகரம் துவரக் கெடும் - (அவ்விடத்து) ரகரத்து உகரம் முற்றக்கெட்டு முடியும்.

எனவே, வழிநிலை யெண்களுள் உயிர்நிலை முதன்மொழி வந்த இடத்து முன் கூறியவாறே இருவாற்றானும் முடியும்.

எ - டு : ஓரடை, ஓராடை எனவும் ; இருவடை, இருவாடை,இரண்டடை ; இரண்டாடை எனவும் உயிர் முதல் மொழிகளை ஒட்டிக்கொள்க.

யா முதல் மொழி ஓர் யாழ் என வரும்.

`துவர' என்றதனான், இரண்டு என்னும் எண்ணும் மூன்று என்னும் எண்ணும் செய்யுளகத்து ஈரசை எனவும் மூவசை எனவும் முதல் நீண்டு வேறுபட முடியுமாறு கொள்க.

`அதனிலை' என்றதனான், முதனிலை நீளாதே நின்று உகரம் கெட்டு ஓரடை, ஓராடை ஓர்யாழ் என வரும் முடிபும் கொள்க.

(73)