இத் தலைச்சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், எழுத்துக்களது பொதுப் பிறப்பு உணர்த்துதல் நுதலிற்று. எல்லா எழுத்தும் நெறிப்பட நாடி சொல்லும் காலை-தமிழெழுத்துக்க ளெல்லாம் ஒருவன் முறைப்பட ஆராய்ந்து தம்மைச் சொல்லுங்காலத்து, உந்தி முதலா முந்துவளி தோன்றி-கொப்பூழ் அடியாக மேலே கிளர்கின்ற உதானன்2 என்னும் பெயரையுடைய வாயுத் தோன்றி, தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ - தலையின்கண்ணும் மிடற்றின்கண்ணும் நெஞ்சின்கண்ணும் நிலைபெற்று. பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் உறுப்பு உற்று அமைய - (தலையும் மிடறும் நெஞ்சும் என்னும் மூன்றனோடும்) பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எட்டாகிய முறைமையையுடைய இடங்களில் ஓர் உறுப்போடு ஓர் உறுப்புத்தம்மிற் பொருந்தி அமைதி பெற, பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல-பிறப்பினது ஆக்கம் வேறு வேறு புலப்பட்டு வழங்குதலுடைய, திறப்படத் தெரியும் காட்சியான - கூறுபாடுள்ளதாக ஆராயும் அறிவிடத்து. இதழ்போறலான் வாய் இதழெனப்பட்டது. எல்லா எழுத்தும் என்னும் எழுவாய்க்குப் ` பிறப்பினாக்கம் வேறுவேறு இயல ' என்பதனை ஒரு சொன்னீர்மைப்படுத்திப் பயனிலை யாக்குக.
1. எழுத்தைப் பிறப்பித்தற்கு இடமும் உறுப்பும் என இரண்டு வேண்டும். எழுத்தின் இனத் தன்மையைத் தோற்றும் நெஞ்சு தொண்டை முதலியவை இடம்; தனித்தனி எழுத்தைத் தோற்றும் நா பல் முதலியவை உறுப்பு. மூக்கைத் தொல்காப்பியர் உறுப்பென்றார்; நன்னூலார் இடமென்றார். இருவரும் தலையை ஓர் இடமாகக் கொண்டனர். இஃது உடல் நூலுக்கும் ஒலி நூலுக்கும் பொருந்துவதாய்த் தோன்றவில்லை. (பாவாணர்) 2. உதானன் - ஒலிக்காற்று.
|