5.பெயரியல்

4.அஃறிணைப் பெயர்கள்

167அதுஇது உதுவென வரூஉம் பெயரும்
அவைமுத லாகிய ஆய்தப் பெயரும்
அவைஇவை உவையென வரூஉம் பெயரும்
அவைமுத லாகிய வகரப் பெயரும்
யாதுயா யாவை யென்னும் பெயரும்
ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும்
பாலறி வந்த அஃறிணைப் பெயரே.
 

நிறுத்தமுறையானே உயர்திணைப் பெயருணர்த்தி, இனியஃறிணைப் பெயருணர்த்துகின்றார்.

அது, இது, உதுவென் வரூஉம் பெயரும் , அப்பெயர்க்கு முதலாகிய சுட்டே முதலாக ஆய்தத்தோடு கூடி அஃது, இஃது, உஃது என வரூஉம் பெயரும் ; அவை, இவை, உவையென வரூஉம் பெயரும், அச் சுட்டே முதலாக அவ் , இவ் , உவ் என வரூஉம் வகரவீற்றுப் பெயரும் , யாது , யா, யாவை என்னும் வினாப்பெயருமென இப் பதினைந்து பெயரும், பால் விளங்க வரூஉம் அஃறிணைப் பெயராம் ; எ-று.

சுட்டு முதலாகிய ஆய்தப் பெயரும் அவை முதலாகிய வகரவீற்றுப் பெயரும் அவையல்லதின்மையின், அவ்வாறு கூறினார்.

(13)