இருதிணைச் சொல்லாதற்கு மொத்த உரிமையவாதலின் உயர்திணைக்கட் சென்றுழி உயர்திணைப் பெயராயும் அஃறிணைக்கட் சென்றுழி அஃறிணைப் பெயராயும் வேறுபடும் விரவுப் பெயரெல்லாம், ஆராயுங்கால், தத்தம் மரபின் வினையோடியைந் தல்லது, திணைவிளங்க நில்லா ; எ-று. வினையோடல்லதெனவே, திணைக்கேற்றவாற்றான் ஈறு வேறுபடாது ஓரீற்றவாய் நிற்றலின்,பெயர்தாமே நின்று தத்தமரபினென்ற தனாற் பொதுவினையொடு வந்த திணைவிளக்கா வென்பது பெறப்படும். இனி அவை, தத்தம் மரபின் வினையொடு பால் விளக்குமாறு :- சாத்தன் வந்தான், சாத்தன் வந்தது; முடவன் வந்தான், முடவன் வந்தது1 என வந்தவாறு கண்டு கொள்க. தத்தம் மரபின் வினையாவன உயர்திணைக்கும் அஃறிணைக்கு முரிய பதினோரீற்றுப் படர்க்கைவினை.2 எல்லாப் பெயரு மென்பதனை ஆறு போயினாரெல்லாருங் கூறை கோட்பட்டார் என்பது போலக் கொள்க . இருதிணைக்கும் பொதுவாகிய சொல், வினையாற் பொதுமை நீங்கி ஒருதிணைச்சொல்லா மென்பது கருத்தாகலின் ஈண்டுப் பாலெனெப்பட்டது திணையேயாம். `சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல் ' என்பதனால் தத்தம் மரபின் வினையோடல்லது பால்தெரிபில என்றரேனும் சாத்தனொருவன் சாத்தனொன்று எனத் தம்மரபின் பெயரொடுவந்து பால்விளக்குதலுங் கொள்க. (18)
1. இருதிணை மருங்கின் , என்ற (கிளவியாக்கம் -10) சூத்திரவுரையிற் காண்க. 2. பழந்தமிழர் ஆவையும் எருதையும் அவற்றின் பயன்பாடும் உழைப்பும் பற்றி அருமையாய்ப் பேணி அவற்றுக்குச் சாத்தி சாத்தன் என்னும் மக்கட் பெயரையே இட்டு அழைத்து வந்திருக்கின்றனர். முடவன் என்பது முட எருதையும் முடத்தி என்பது முட ஆவையுங் குறிக்கும். |