5.பெயரியல்

விரவு பெயர்கள்

விரவுப் பெயரின் தொகை, வகை

174இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற் பெயரே
முறைப்பெயர்க் கிளவி தாமே தானே
எல்லா நீயிர் நீயெனக் கிளந்து
சொல்லிய அல்ல பிறவு மா அங்கு
அன்னவை தோன்றின் அவற்றொடுங் கொளலே.
 

விரவுப்பெயர் பால்தெரிய நிற்குமா றுணர்த்தி, இனி அவை தம்மையுணர்த்துவா னெடுத்துக் கொண்டார்.

இயற்பெயர் முதலாக நீயென்ப தீறாக எடுத்துச் சொல்லப்பட்டனவல்லாத அன்னபிறவும் ஆண்டு வருமாயிற் சொல்லப்பட்டவற்றொடுங் கூட்டுக : எ-று.

இயற்பெயராவன சாத்தன் கொற்றன் என வழங்குதற் பயத்தவாய் நிமித்தமின்றிப் பொருளேபற்றிவரும் இடுபெயர். இயற்பெயரெனினும் விரவுப் பெயரெனினு மொக்குமாயின் அவற்றுள் ஒருசாரனவற்றிற்கு அப்பெயர் கொடுத்த தென்னையெனின்:- அவற்றது சிறப்பு நோக்கி அப்பெயர் கொடுத்தார் ; பாணியுந் தாளமும் ஒரு பொருளவாயினும் இசை நூலார் தாளத்துள் ஒருசாரனவற்றிற்குப் பாணி யென்னும் பெயர் கொடுத்தாற் போல வென்பது.

சினைப்பெயராவன பெருங்காலன் , முடவன் என அச் சினையுடைமையாகிய நிமித்தம்பற்றி முதன்மேல் வரும் பெயர். சினைமுதற் பெயராவன சீத்தலைச்சாத்தன். கொடும்புறமருதி என்ச் சினைப்பெயரோடு தொடர்ந்து வரும் முதற்பெயர் - சாத்தன், மருதியென்னு முதற்பெயர் சினைப்பெயரொடு தொடர்ந்தல்லது பொருளுணர்த் தாமையிற் சினை முதற் பெயராயின. முறைப்பெயராவன தந்தை தாயென முறைபற்றி முறையுடைப் பொருண்மேல் வருவன. முறையாவது பிறவியான் ஒருவனோடொருவதற்கு வருமியைபு. அல்லன வைந்துந் தம்மையுணர்த்தி நின்றவாகலான் , தாமென்பது முதலாகிய சொல்லேயாம்.

பிறவுமென்றதனான், மக, குழவி போல்வன கொள்க. இவற்றை உயர்திணைப் பெயரென்றாரால் உரையாசிரிய ரெனின் - மரபியலுள்.

` மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும்
அவையும் அன்ன அப்பா லான ' (மரபிய - 14)


எனவும்,

` குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை ' (மரபியல் -19)


எனவும், அவை அஃறிணைக்காதல் கூறி,

` குழவியும் மகவும் ஆயிரண் டல்லவை
கிழவ அல்ல மக்கட் கண்ணே ' (மரபியல் - 23)

என வுயர்திணைக்கு மோதிவைத்தாராகலின், அவை விரவுப்பெயரேயாம்; அதனான் அது போலியுரை யென்க.

ஒரு நிமித்தத்தான் இரண்டுதிணைப் பொருளுமுணர்த்துதலின் விரவுப் பெயர் பொருடோறு நிமித்தவேறுபாடுடைய பலபொருளொரு சொலன்மை யறிக.

(20)