1.கிளவியாக்கம்

2.பால்

இயல்புவழக்கும் தகுதிவழக்கும் அமையும் வகை.

22ஆக்கக் கிளவி காரண மின்றியும்
போக்கின் றென்ப வழக்கி னுள்ளே.
 

காரணமுதற்றெனப்பட்ட ஆக்கச் சொல்காரணமின்றி வரினுங் குற்றமின்று வழக்கினுள்; எ-று.

எ - டு: மயிர் நல்லவாயின, பயிர் நல்லவாயின எனவரும்.

வழக்கினுட் காரணமின்றியும் வருமெனவே, செய்யுளுட் காரணம் பெற்றே வருமென்பதாம்.

எ - டு: `பரிசிலர்க் கருங்கல நல்கவுங் குரிசில்
வலிய வாகுநின் தாள்தோய் தடக்கை'

(புறம்-14)
எனவும்,

தெரிகணை யெஃகம் திறந்தவா யெல்லாம்
குருதி படிந்துண்ட காகம்-உருவிழந்து
குக்கிற் புறத்த சிரல்வாய செங்கண்மால்
தப்பியா ரட்ட களத்து."

(களவழி நாற்பது-5)

வருமழைய வாய்கொள்ளும் வாடாச்சீர் வண்கைக்
கருமுருகன் சூடிய கண்ணி-திருநுதலால்
இன்றென் குரற்கூந்தல் பெய்தமையால் பண்டைத்தன்
சாயல வாயின தோள்"

எனவும் காரணம் பெற்று வந்தவாறு கண்டுகொள்க. குக்கிற் புறத்த, சிரல்வாய என ஆக்கமின்றி வந்தனவா லெனின்:- தொகுக்கும் வழித் தொகுத்தல் என்பதனான் ஆண்டாக்கந் தொக்கு நின்றதென்பது.

அரிய கானஞ் சென்றோர்க்
கெளிய வாகிய தடமென் றோளே" (குறுந்-77)

நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு" (குறள்-305)


எனவும், செயற்கைப் பொருள் செய்யுளுள் காரணமின்றி வந்தனவாலெனின்:-களவுக்காலத் தரியன இக்காலத்து எளியவாயின என்பது கருத்தாகலான், இக்காலங் காரண மென்பது பெறப்படுதலானும், ஊழாலென்பது அதிகாரத் தான் வருமாகலானும், அவை காரணமின்றி வந்தன எனப்படாவென்பது.

(22)