6.வினையியல்

விரவு வினை

வினையெச்ச வாய்பாடுகள்

228செய்து செய்யூச் செய்பு செய்தெனச்
செயியர் செய்யிய செயின்செயச் செயற்கென
அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி.
 

பொதுவகையா னெய்தியவற்றுள், வியங்கோட் கிளவிக்குஞ் செய்யுமென்னுங் கிளவிக்கும் எய்தாதன விலக்கி இனி நிறுத்த முறையானே வினையெச்சத்தினது பாகு பாடுணர்த்துகின்றார்.

செய்தென்பது முதலாகச் சொல்லப்பட்ட ஒன்பதும் வினையெச்சமாம்; எ - று.

அவ்வகையொன்பது மென்றது இறுதி நின்ற இடைச்சொல்லான் வேறுபட்ட ஒன்பது மென்றவாறு. அவ்விடைச் சொல்லாவன உகரமும் ஊகாரமும் , புகரமும் எனவும் இயரும், இயவும், இன்னும், அகரமும், குகரமுமாம்.1

`செய்கென் கிளவி வினையொடு முடியினும்' (சொல் - 204) எனவும் , `செய்யா யென்னு முன்னிலை வினைச்சொல்' (சொல் - 450) எனவும் இறுதியிடைச்சொ லேற்றவாற்றாற் பிரித்துணர வாய்பா டோதினாற்போல ஏற்றவாற்றான் இறுதியிடைச்சொற் பிரித்துணர்ந்து கொள்ள ஈண்டும் வாய்பாடுபற்றி யோதினார்.

உகரம் , கடதறவூர்ந்து இயல்பாயும் , ஏனையெழுத்தூர்ந்து இகரமாய்த் திரிந்தும் , நெடிலீற்று முதனிலை முன்னர் யகரம் வரத் தான் கெட்டும் , இறந்த காலம் பற்றி வரும் . இவ்வுகரவீறு இகரமாதலும் , யகரம் வரக் கெடுதலும் `வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய' (சொல் 457) என்பதனாற் பெறப்படும்.

எ - டு :நக்கு, உண்டு , வந்து , சென்று எனவும் ; எஞ்சி உரிஞி ஓடி எனவும் ; ஆய் , போய் எனவும் வரும் . சினைஇ , உரைஇ , இரீஇ , உடீஇ , பராஅய் , தூஉய் , தாஅய் என்பனவோவெனின் ;- அவை செய்யுண்முடிபென்க. ஆகி , போகி , ஓடி, மலர்த்தி , ஆற்றி என்புழி , முதனிலை குற்றுகரவீறாதலின் , ஏனையெழுத்தாத லறிக.

கடதறவென்பன குற்றுகரத்தொடு வருமிடமும் தனிமெய்யாய் வருமிடமும் தெரிந் துணர்க.

அஃதேல் , ஆய் என்பதனை யகரவீறென்றும் , ஓடியென்பதனை இகரவீறென்றுங்கொள்ளாது , உகரவீறென்ற தென்னையெனின் ;- நன்று சொன்னாய் : இகரவிறுதி இடைச்சொல்லாயின் , இறுதியிடைச்சொல் எல்லாத் தொழிலும் பற்றி வருதலிற் செலவு வரவென்பனவற்றோடும் வரல் வேண்டும் . இனிச் செய்தெனச்சத் துகரமும் இறுதியிடைச் சொல் லாதலின் ஆகுதல் , ஓடுதலென்னுந் தொழில் பற்றியும் வரல் வேண்டும் , செலவு வரவு பற்றி இகரம் வாராமையானும் , ஆகுதல் ஓடுதல் பற்றி உகரம் வாராமையானும் , இறுதியிடைச் சொல் இகரமேயாக உகரமேயாக ஒன்றாவதல்லது இரண்டெனப் படாதாம். உகரம் ஒன்றாய் நின்று கடதற வூர்ந்த விதிவினைக்கட் பயின்று வருதலானும் , எதிர்மறை யெச்சமெல்லாம் பெரும்பான்மையும் உகரவீறாயல்லது வாராமையானும் , உகரம் இயல்பாக இகரம் அதன் றிரிபென்றலே முறைமை யென்க. யகரவீற்றிற்கும் இஃதொக்கும்.

ஊகாரம் உண்ணூவந்தான் , தின்னூவந்தான் எனப் பின் வருந்தொழிற்கு இடையின்றி முன்வருந் தொழின்மேல் இறந்தகாலம் பற்றி வரும் . அஃது உண்ணா என ஆகாரமாயும் வரும்.

பகரவுகரம் நகுபு வந்தான் என நிகழ்காலம் பற்றி வரும். நகா நின்று வந்தான் என்றவாறு. ஈண்டு நிகழ்காலமென்றது முடிக்குஞ் சொல்லுணரப்படுந் தொழிலோடு உடனிகழ்தல், உரிஞுபு என உகரமும், கற்குபு எனக் குகரமும் , ஏற்றவழிப் பெறுதல் கொள்க.

எனவென்பது , கடதற வூர்ந்து இறந்த காலம் பற்றி முடிக்குஞ் சொல்லா னுணர்த்தப்படுந் தொழிற்குத் தன் முதனிலைத் தொழில் காரணமென்பதுபட வரும்.

எ - டு : சோலைபுக்கென வெப்ப நீங்கிற்று ; உண்டெனப் பசி கெட்டது ; உரைத்தென உணர்ந்தான்; மருந்து தின்றெனப் பிணி நீங்கிற்று என வரும் . எஞ்சியென எனவும் , உரிஞியென எனவும் , ஏனை எழுத்தோடும் வருமாறறிந் தொட்டிக் கொள்க.

இயர் , இய என்பன , எதிர்காலம் பற்றி , உண்ணியர் , திண்ணியர் ; உண்ணிய , திண்ணிய என வரும் . போகியர் , போகிய என ஏற்றவழிக் ககரம் பெற்று வருதலுங் கொள்க.

இன் எதிர்காலம் பற்றிக் காரணப்பொருட்டாய் வரும்.

எ - டு : மழைபெய்யிற் குளநிறையும் ; மெய்யுணரின் வீடெளிதாம் என வரும். நடப்பின் , உரைப்பின் என ஏற்ற வழிப் பகரம் பெற்று வருதலுங் கொள்க.

அகரம் , மழை பெய்யக் குளம் நிறைந்தது ; ஞாயிறு பட வந்தான் ; உண்ண வந்தான் என மூன்று காலமும் பற்றி வரும். உரைப்ப , உரைக்க என ஏற்றவழிப் பகரமுங் ககரமும் பெறுதல் கொள்க.

குகரம் உணற்கு வந்தான்; தினற்கு வந்தான் என வெதிர் காலம் பற்றி வரும்.

புகரமும் குகரமும் உகரத்தின் கண்ணும் , எனவும் இயவும் அகரத்தின் கண்ணும் அடங்குமெனின் ;- ஆரீற்றின் மார் அடங்காமைக்கு உரைத்தாங் குரைக்க.

2செயற்கென்னும் வினையெச்சம் நான்கனுரு பேற்று நின்ற தொழிற்பெயரின் வேறாதல் கிளவியாக்கத்துட் கூறினாம்.

திரியாது நிற்கும் ஊகாரமும் , புகரமும், எனவும் , இயரும் இயவுமென்னும் ஐந்தீற்றுவினையெச்சமும் வழக்கினுள் இக்காலத்து வாராவாயினும் , சான்றோர் செய்யுளுள் அவற்றது வாய்பாட்டு வேற்றுமையெல்லாங் கண்டு கொள்க.

(31)

1. செய்து செய்தென செயற்கு என்னும் வினையெச்சங்களின் விகுதி `உகர' மும் எனவும் `குகர' மும் எனவும் கொள்வது பொருந்தாது. இவற்றைத் துகரமும் துவ்வோ டெனவும் அல்லொடு குகரமும் எனக் கொள்வதே பொருந்தும்.

இறுதியிடைச்சொல் - விகுதி.

நக்கு, உண்டு , வந்து , சென்று என்பவற்றில் உகரம் கடதறவூர்ந்து இயல்பாயிற்று; எஞ்சி , உரிஞி , ஓடி என்பவற்றில் ஏனையெழுத் தூர்ந்து இகரமாய்த் திரிந்தது ; ஆய் போய் என்பனவற்றில் நெடிலீற்று முதனிலை முன்னர் யகரம் வரத்தான் கெட்டது என்பது சேனாவரையர் கருத்து.

2. செயற்கென்னும் வினையெச்சம் நான்கனுருபேற்று நின்ற தொழிற்பெயரின் வேறென்று சேனாவரையர் கூறினும்; அதை நான்காம் வேற்றுமைத் தொழிற் பெயரே எச்சப் பொருள் பட வந்ததாகக் கூறவது பொருந்தும்.