9.எச்சவியல்

எச்சச் சொற்களின் வகை

வினையெச்சம்

432வினையெஞ்சு கிளவிக்கு வினையுங் குறிப்பும்
நினையத் தோன்றிய முடிபா கும்மே
ஆவயிற் குறிப்பே ஆக்கமொடு வருமே.
 

வினையெச்சத்திற்குத் தெரிநிலை வினையுங் குறிப்பு வினையும் முடிபாம்; ஆண்டைக் குறிப்புவினை ஆக்க வினையோடு வரும்; எ - று.

எ - டு : உழுது வந்தான்; மருந்துண்டு நல்ல னாயினான் என வரும்.

உழுது வருதல்; உழுது வந்தவன் என வினையெச்சம் வினைப்பெயரோடு முடிதல் நினையத் தோன்றிய வென்றதனாற் கொள்க.

வினையெச்சத்திற்கு முடிபு வினையியலுட் கூறப்பட்டமையான் இச்சூத்திரம் வேண்டா வெனின்;- இதற்கு விடை ஆண்டே கூறினாம்.

`வேங்கையுங் காந்தளு நாறி யாம்பன் மலரினுந் தான்றண்ணியளே;' (குறுந் - 84) `வில்லக விரலிற் 1பொருந்தியவாறு நல்லகஞ் சேரி னொருமருங் கினமே' (குறுந் - 370) எனவும்; கற்றுவல்லன் பெற்றுடையன் எனவும் வினைக்குறிப்பு ஆக்கமின்றி வந்தனவாலெனின்:- ஆக்கமொடு வருமென்றது பெரும்பான்மை குறித்ததாகலிற் சிறுபான்மை ஆக்கமின்றியும் வருமென்பது.

(36)

1. பொருந்தியவர் எனவும் பாடம்.