9.எச்சவியல்

சில மரபு வகை

`ஈ' `தா' `கொடு' என்னுஞ் சொற்கள்

444ஈதா கொடுவெனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி யாகிட னுடைய.
 

ஈ , தா , கொடு எனச் சொல்லப்படும் மூன்றும் ஒருவன் ஒன்றை யிரத்தற்கண் வருஞ்சொல்லாம்; எ-று.

அவை பிறபொருண்மேல் வருதலுமுடைமையான், `இரவின் கிளவி யாகிட னுடைய' வென்றார்.

வழங்கல், உதவல், வீசல் முதலாயின பிறவு முளவாக இவற்றையே விதந்தோதிய தென்னையெனின் : - அவை கொடைப் பொருளவாய் வருவதல்லது இவைபோல இரத்தற் குறிப்பு வெளிப்படுக்கும் இரவின் கிளவியாய்ப் பயின்று வாராமையானும், இன்னார்க்கு இன்ன சொல்லுரித்தென்று வரையறுத்தலும் வழுவமைத்தலுமாகிய ஆராய்ச்சி ஆண்டின்மையானும் இவற்றையே விதந்தோதினாரென்பது.

அஃதேல், `ஈயென்கிளவி' (சொல் - 445) என்னுஞ்சூத்திர முதலாய நான்கும் அமையும் ; இச்சூத்திரம் வேண்டா வெனின் :- இவை இரவின் கிளவியாதலும் மூன்றென்னும் வரையறையும் அவற்றாற் பெறப்படாமையின் வேண்டுமென்பது.

முன்னிலைச் சொல்லாய் வருவழியல்லது பிறாண்டு இன்ன சொல் இன்னார்க் குரித்தென்னும் வரையறை யில்லென்ப துணர்த்துதற்கு ஈதா கொடுவென முன்னிலை வாய்பாடுபற்றி யோதினார்.

(48)