3.வேற்றுமை மயங்கியல்

வேற்றுமையுருபுகள் மயங்குதல்

முதற்பெயர் சினைப்பெயர்களில்

88முதல்முன் ஐவரின் கண்ணெண் வேற்றுமை
சினைமுன் வருதல் தெள்ளி தென்ப.
 

அம் முதற்சினைக் கிளவிக்கண், முதற்சொல் முன் ஐகார வேற்றுமை வரின், சினைச்சொல்முன் கண்ணெண்னும் வேற்றுமை வருதல் தெள்ளிது; எ-று.

எ - டு:யானையைக் கோட்டின்கட் குறைத்தான் என வரும்.

தெள்ளிது என்றதனான், யானையைக் கோட்டைக் குறைத்தான் எனச் சிறுபான்மை ஐகார வேற்றுமையும் வருமென்பதாம்.

சினைக் கிளவிக்கண் மயக்க முணர்த்துகின்ற சூத்திரத்திடைக் `கன்றலுஞ் செலவும்' என்னுஞ் சூத்திரம் வைத்த தென்னை யெனின் :- ஐயுங் கண்ணுமென்பது அதிகாரத்தான் வரச் சூத்திரஞ் சுருங்குமாகலின், `சினைநிலைக் கிளவிக்கு' என்னுஞ் சூத்திரத்தின் பின் அதனை வைத்தாரென்பது.

(5)