களவியல்

112நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும்
செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும்
புணர்ச்சி எதிர்ப்பா டுள்ளுறுத்து வரூஉம்
உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை,
மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது,
பல்வேறு கவர் பொருள் நாட்டத் தானும்
குறையுறற் கெதிரிய கிழவனை மறையுறப்
பெருமையிற் பெயர்ப்பினும் உலகுரைத் தொழிப்பினும்
அருமையின் அகற்சியும் அவளறி வுறுத்துப்
பின்வா1 வென்றலும் பேதைமை யூட்டலும்
முன்னுறு புணர்ச்சி முறைநிறுத் துரைத்தலும்
அஞ்சியச் சுறுத்தலும் உரைத்துழிக் கூட்டமொடு
எஞ்சாது கிளந்த இருநான்கு கிளவியும்
வந்த கிழவனை மாயஞ் செப்பிப்
பொறுத்த காரணங் குறித்த காலையும்;
புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற் கண்ணுங்
குறைந்தவட் படரினும் மறைந்தவ ளருகத்,
தன்னொடும் அவளொடும் முன்னமுன் தளைஇப்2
பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்
நன்னயம் பெற்றுளி நயம் புரி இடத்தினும்3
எண்ணரும் பன்னகை கண்ணிய வகையினும்
புணர்ச்சி வேண்டினும் வேண்டாப் பிரிவினும்
வேளாண் பெருநெறி வேண்டிய இடத்தினும்
புணர்ந்துழி உணர்ந்த அறிமடச் சிறப்பினும்
ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும்
செங்கடு மொழியான் சிதைவுடைத் தாயினும்
என்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ
அன்புதலை அடுத்த வன்புறைக் கண்ணும்;
ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்
காப்பின் கடுமை கையற வரினும்
களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக்
காதல் மிகுதி உளப்படப் பிறவும்
நாடும் ஊரும் இல்லும் குடியும்
பிறப்புஞ் சிறப்பும் இறப்ப நோக்கி,
அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ
அனைநில4 வகையான் வரைதல் வேண்டினும்5
ஐயச் செய்கை தாய்க்கெதிர் மறுத்துப்
பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினும்
அவள்விலங் குறினுங் களம்பெறக் காட்டினும்
பிறன்வரை வாயினும் அவன்வரைவு மறுப்பினும்
முன்னிலை அறன்னெனப் படுதலென் றிருவகைப்
புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்
வரைவுடன் பட்டோர்க் கடாவல் வேண்டினும்6
ஆங்கதன் தன்மையின் வன்புறை 7 உளப்படப்
பாங்குற வந்த நாலெட்டு வகையினும்8
தாங்கருஞ் சிறப்பின் தோழி மேன.

என்றது, களவொழுக்கத்தின்கண் தோழிக்குரிய கிளவியெல்லாம் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று.

நாற்றமு ....... நாட்டத்தானும் என்பது - நாற்ற முதலாகச் சொல்லப்பட்ட ஏழினானும் புணர்ச்சிக்கு முந்துற்ற நிலைமையை உட்கொண்டுவரும் மனநிகழ்ச்சி யேழினும் புணர்ச்சியுண்மை யறிந்த பின்றை மெய்யினானும் பொய்யினானுந் தலைவி குலத்தினுள்ளார் நிலைமையிற் பிழையாது பலவாகி வேறுபட்ட கவர்த்த பொருண்மையுடைய ஆராய்தற் கண்ணும் என்றவாறு.

நாற்றம் என்பது - பூவினானும் சாந்தினானும் தலைவன் மாட்டுளதாகிய கலவியால் தலை விமாட்டுளதாய நாறுதல்.

தோற்றம் என்பது - புணர்ச்சியான் வரும் பொற்பு.

ஒழுக்கம் என்பது - ஆயத்தாரொடு வேண்டியவாறொழுகுதலன்றித் தன்னைப் பேணியொழுகுதல்.

உண்டி என்பது - உண்ணும் அளவிற் குறைதல்.

செய்வினை மறைத்தல் ஆவது - பூக்கொய்தலும் புனலாடலும் போலும் வினைகளைத் தோழியை மறைத்துத் தனித்து நிகழ்த்துதல் அன்றியும் தலைவன் செய்த புணர்ச்சியாகிய கருமத்தினைப் புலப்படவிடாது தோழியை மறைத்தலும் என்றுமாம்.

செலவினும் என்பது - எத்திசையினும் சென்று விளையாடுவாள் ஒரு திசையை நோக்கிச் சேறல்.

பயில்வினும் என்பது - ஓரிடத்துப் பயிலுதல்.

புணர்ச்சி எதிர்ப்பாடு ஆவது - புணர்வதற்கு முந்துற்ற காலம்.

உள்ளுறுத்தல் ஆவது - உட்கோடல்.

உணர்ச்சி ஏழாவது - நாற்ற முதலாகச் சொல்லப்பட்டவற்றால் வரும் மன நிகழ்ச்சி ஏழும்.

பல்வேறு கவர்பொருள் நாட்டம் என்பது - ஒன்றொடொன்று ஒவ்வாது வேறுபட்டனவாகி இருபொருள் பயக்கும் சொற்களாலே யாராய்தல்.


அவற்றுள் சில வருமாறு :

"கண்ணுஞ் சேயரி பரந்தன்று நுதலும்
நுண்வியர் பொறித்து வண்டார்க் கும்மே
வாங்கமை மென்றோள் மடந்தை
யாங்கா யினள்கொல் என்னும்என் நெஞ்சே."

(சிற்றெட்டகம்)

இது தலைவி தோற்றங்கண்டு பாங்கி கூறியது. பிறவும் அன்ன.

குறையுறற் கெதிரிய கிழவனை மறையுற என்பது - களவொழுக்கத்தின் கண்ணே யுறுதற்காகத் தனது குறையைச் சொல்லவேண்டி எதிர்ப்பட்ட தலைவனை யென்றவாறு.

மறையுற என்பதனை முன்னே கூட்டுக.

பெருமையிற் பெயர்ப்பினும் என்பது - தலைவனது பெருமையான் நீக்கலும் என்றவாறு.

"இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல்நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீனெறி பரதவர் மகளே நீயே
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே
நிணச்சுறா அறுத்த உணக்கல்9 வேண்டி
இனப்புள் ஒப்பும் எமக்குநலன் எவனோ
புலவு நாறுதும் செலநின் றீமோ
பெருநீர் விளையுள்எம் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே
எம்ம னோரிற் செம்மலும் உடைத்தே".

(நற்றிணை. 45)

என வரும்.

உலகுரைத் தொழித்தல் என்பது - உலகத்தார் மகட்கொள்ளுமாறு கொள்ளெனக் கூறுதல்.

"கோடீர் எல்வளைக் கொழுமடற்10 கூந்தல்
ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயின்
தெண்கழிச் சேயிறாற்11 படூஉந்
தண்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ."

(ஐங்குறு.199)

இன்னும் உலகுரைத் தொழித்தல் என்றதனாற் கையுறை மறையுங் கொள்க.

"நீடுநீர்க் கானல் நெருநலும் நித்திலங்கொண் டைய வந்தீர்
கோடுயர் வெண்மணற் கொற்கையெம் ஊரிவற்றாற் குறையிலேமியாம்
ஆடுங் கழங்கும் அணிவிளக்கும் அம்மனையும்
பாடி யவைப்பனவும் பந்தாடப் படுவனவும் பனிநீர் முத்தம்."

அருமையின் அகற்சியும் என்பது - தலைவியைக் கிட்டுதற்கு அருமை கூறியகற்றுதல்.

உதாரணம்:-

"நெருநலும் முன்னா ளெல்லையும் ஒருசிறைப்
புதுவை யாகலின் அதற்கெய்த நாணி
நேரிறை வளைத்தோள்நின் தோழி செய்த
ஆருயிர் வருத்தங் களையா யோவென
எற்குறை யுறுதி ராயிற் சொற்குறை
எம்பதத் தெளியன் அல்லள் எமக்கோர்
கட்காண் கடவுள் அல்லளோ பெரும
வால்கோன் மிளகின் மலயங் கொழுங்கொடி
துஞ்சுபுலி வரிப்புறந் தைவரும்
மஞ்சுசூழ் மணிவரை மன்னவன் மகளே".


என வரும்.

அவளறி வுறுத்துப் பின்வாவென்றலும் என்பது - நின்னாற் காதலிக்கப்பட்டாட்குச் சென்று அறிவித்துப் பின்னர் என்மாட்டு வா என்றவாறு.

அவற்றுள் , நீயே சென்று அறிவி என்றதற்குச் செய்யுள்:-

"தன்னையுந் தான்நாணுஞ் சாயலாட் கீதுரைப்பின்
என்னையும் நாணப் படுங்கண்டாய் - என்னைய
வேயேர் மென் தோளிக்கு வேறாய் இனியொருநாள்
நீயே யுரைத்து விடு"


பின்வா வென்றற்குச் செய்யுள் :-

"நாள்வேங்கை பொன் விளையும் நன்மலை நன்னாட
கோள்வேங்கை போற்கொடியர் என்னையன்மார்12 - கோள் வேங்கை13
அன்னையால் நீயும்! அருந்தழையாம் ஏலாமைக்கு
என்னையோ நாளை எளிது"

(திணைமாலை. 2)

என வரும்.

பேதைமை யூட்டல் என்பது - தேரினும் அவள் அறிவாளொருத்தியல்லள் என்று தலைவற்குக் கூறல்.

உதாரணம்:-

"நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை
வெறும்புதல் போல் வேண்டாது வேண்டி14 - எறிந்துமுது
செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு
நொந்தினைய வல்லளோ நோக்கு."

(திணைமாலை.24)

இன்னும், பேதைமை யூட்டல் என்பதனால் தோழி தான் அறியாள் போலக் கூறுதலுங் கொள்க.

உதாரணம்:-

"புன்தலை மந்திக் கல்லா15 வன்பறழ்
குன்றுழை நண்ணிய முன்றில் போகாது
எரியகைந்து அன்ன வீததை இணர
வேங்கையம் படுசினைப் பொருந்திக் கைய16
தேம்பெய் தீம்பால் வௌவலிற் கொடிச்சி17
எழுதெழில் சிதைய அழுத கண்ணே
தேர்வண் சோழர் குடந்தை வாயில்
மாரியங்18 கிடங்கின் ஈரிய மலர்ந்த
பெயலுறு நீலம் போன்றன19 விரலே
பாஅய அவ்வயிறு அலைத்தலின்20ஆனாது
ஆடுமழை21 தவழுங் கோடுயர் பொதியின்
ஓங்கிருஞ் சிலம்பில் பூத்த
காந்தளங் கொழுமுகை போன்றன சிவந்தே".

(நற்றிணை.379)

என வரும்.

முன்னுறு புணர்ச்சி முறைநிறுத் துரைத்தலும் - முன்னுறு புணர்ச்சி முறையே நிறுத்துக கூறலும் என்றவாறு.

நிறுத்துக் கூறலாவது நீங்கவிடாது உடன்பட்டுக் கூறல். இன்னும், முன்பு கூடினாற் போலக் கூட அமையுமென்று கூறுதல். உதாரணம் வந்தவழிக் காண்க.

அஞ்சி அச்சுறுத்தலும் என்பது - தான் அச்சமுற்று அஞ்சின தன்மையைத் தலைவற்கு அறிவித்தலும் என்றவாறு. அது யாய் வருவனென்றானும் தமையன்மார் வருவ ரென்றானும் காவலர் வருவ ரென்றானும் கூறுதல்.

உதாரணம்:-

"யானை உழலும் அணிகிளர் நீள்வரைக்
கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்
ஏனலுள் ஐய22 வரவுமற் றென்னை கொல்
காணினும் காய்வர் எமர்".

(திணைமொழி.6)

என வரும்.

உரைத்துழிக் கூட்டமொடு என்பது - நின்னாற் காதலிக்கப்பட்டாள் யாவள் என வினாயவழி இத்தன்மையாள் எனச் சொல்லக்கேட்ட தோழி அவளும் நின் தன்மையாள் என இவனோடு கூட்டியுரைத்தலும் என்றவாறு.

ஒடு எண்ணின்கண் வந்தது.

உதாரணம்:-

"நெறிநீர் இருங்கழி நீலமுஞ் சூடாள்
பொறிமாண் வரியலவன் ஆட்டலும் ஆட்டாள்
திருநுதல் வேரரும்பச் சிந்தியா நின்றாள்
செறிநீர்த்தண் சேர்ப்பயா னென்சொல்லிச் சேர்கேன்".


என வரும்.

எஞ்சாது கிளந்த இருநான்கு கிளவியும் என்பது - ஒழியாது கூறிய எட்டுக் கூற்றும் என்றவாறு , முன்னைப் புணர்ச்சி முறையறிந்தாளாதலின் அவன் இரந்து பின்னின்றுழி ஈண்டுக் கூறிய எல்லாம் அவன் உள்ளக் கருத் தறியுந்துணையும் தழீஇக் கொண்டு கூறினல்லது ஒழித்தல் பொருளாகக் கூறாள் என்பது கொள்ளப்படும். இவை எட்டும் குறையுறவுணர்தலின் பகுதி.

வந்த கிழவனை மாயஞ் செப்பிப் பொறுத்த காரணங் குறித்த காலையும் என்பது - மாயம் சொல்லிவந்த கிழவனைத் தலைவி பொறுத்த காரணம் குறித்தகாலையும் தோழி கூற்று நிகழும் என்றவாறு.

அவ்வழித் தலைவன் குறிப்பும் தலைவி குறிப்பும் உணர்தலும் தலைவன் கேட்டதற்கு மாற்றம் கூறுதலும் உளவாம். மாயம் செப்பி வந்த கிழவன் என மாற்றுக. மாயம் செப்புதலாவது யானை போந்ததோ மான் போந்ததோ எனக் கூறல்.

"இரந்து குறையுறாது கிழவியுந் தோழியும்
ஒருங்குதலைப் பெய்த செவ்வி நோக்கிப்
பதியும் பெயரும் பிறவும் வினாஅய்ப்
புதுவோன் போலப் பொருந்துபு கிளந்து
மதியுடம்படுத்தற்கும் உரியன் என்ப".

(இறையனாரகப்.6)

என்பதனாற் குறையுறவுணர்தல் நிகழ்ந்துழி இது நிகழாதென்று கொள்க.

அதன்கட் குறிப்புணர்வதற்குச் செய்யுள்:-

"வேங்கை மலர23 வெறிகமழ் தண்சிலம்பின்
வாங்கமை மென்தோள் குறவர் மகளிராம்
சோர்ந்து குருதி24 ஒழுகமற் றிப்புறம்25
போந்ததில் ஐய26களிறு".

(திணைமொழி.8)

எனவும்,

"நெடுந்தேர் கடைஇத் தமியராய் நின்று
கடுங்களிறு காணீரோ என்றீர் - கொடுங்குழையார்
யானை அதருள்ளி நிற்பரோ தம்புனத்துள்
ஏனற் கிளிகடிகு வார்."


எனவும்,

"ஏனல் காவல் இவளும் அல்லள்
மான்வழி வருகுவன் இவனும் அல்லன்
நரந்தங் கண்ணி இவனோ டிவளிடைக்
கரந்த உள்ளமொடு கருதியது பிறிதே
நம்முன் நாணினர் போலத் தம்முள்
மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல
உள்ளத் துள்ளே மகிழ்ப
சொல்லும் ஆடுபகண் ணினானே".


எனவும்,

குறிப்புணர்ந்து இருவருமுள் வழி அவன் வரவுணர்தல்.

புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற் கண்ணும் என்பது - மேற்சொல்லப்பட்ட மூவகையானும் புணர்ச்சியுண்மை பொருந்தியபின் தலைவன்கண் தாழநிற்றற்கண்ணும் என்றவாறு.

அது நீ கருதியது முடிக்கற்பாலை எனவும் நீ இவளைப் பாதுகாத்தல் வேண்டுமெனவும் இவ்வகை கூறுதல்.

உதாரணம்:-

"... ... ... ... ...
அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த
உரவுவில் மேலசைத்த27 கையை ஓராங்கு
நிறைவளை முன்கையென் தோழியை28 நோக்கிப்
படுகளி பாயும் பசுங்குரல் ஏனல்
கடிதல் மறப்பித்தா யாயின் இனிநீ
நெடிதுள்ளல் ஓம்புதல் வேண்டும் இவனே
... ... ... ... ...
கடுமா கடவுறூஉங் கோல்போல் எனைத்தும்
கொடுமையிலை யாவது அறிந்து மடுப்பில்
வழைவளர் சாரல் வருடை நன்மான்29
குழவி வளர்ப்பவர் போலப் பாராட்டி
உழையிற் பிரியிற் பிரியும்30
இழையணி அல்குல் என் தோழியது கவினே"

(கலித்.50)

என வரும்.

குறைத்து அவட்படரினும் என்பது - மேல் தலைவன் புணர்ச்சியுண்மை யறிந்து தாழநின்ற தோழி தானுங் குறையுற்றுத் தலைவி மாட்டுச் செல்லுதற் கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு.

இக்கிளவி இரந்து பின்னின்ற தலைவன் உள்ளப்புணர்ச்சியுள் வழியும் குறையுற்று மெய்யுறுபுணர்ச்சி வேண்டித் தலைவி மாட்டுச் செல்லுங் காலத்தும் ஒக்கும்.

உதாரணம்:-

"வளைஅணி முன்கை வால்எயிற் றின்னகை31
இளையர் ஆடுந் தழையவிழ் கானற்
குறுந்துறை32 வினவி நின்ற
நெடுந்தேர் அண்ணலைக் 33 கண்டிகும் யாமே ".

( ஐங்குறு . 198 )

என வரும் ,

மறைந்து அவள் அருகத் தன்னொடும் அவளொடும் முன்னம் முன்தளைஇப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும் என்பது - மேல் தலைவன் மாட்டுத் தோழி குறைநயப்பிக்கச் சென்ற வழித் தோழி சொல்லும் குறிப்பு மொழிக்கு அவள் மறைந்து அரியளாகத் தன்னொடும் அவளொடும் குறிப்பினை முன்னர்த் தடுத்துக்கொண்டு வழிபட்டு முயலும் பலவேறு பக்கத்தின் கண்ணும் தோழி கூற்று நிகழும் என்றவாறு .

மறைத்தலாவது - தன் மனத்து நிகழ்ச்சியை ஒளித்தல் . அருகுதலாவது - இசைவிலாதாரைப்போல நிற்றல் . முன்ன முன்தளைதலாவது கூற்றினானன்றிக் குறிப்பினானுணர்தல் . முதன் முன்றளைஇ என்று பாடமாயின் , மனத்தினானும் மொழியினானும் உடம்பினானும் ஒருங்கே அளவி என்றுமாம் . பின்னிலை நிகழும் பல்வேறு மருங்காவது வழிபாடு கொடுவருங் கூற்றுவேறுபாடு . எனவே தலைவிக்குத் தழையும் கண்ணியும் கொண்டு ஒருவன் நம்புனத்தயல் வாராநின்றான் எனவும், அவன் என்மாட்டு ஒரு குறையுடையன்போலும் எனவும் , அருளுவார்க்கு இஃது இடமெனவும் , அவன் குறைமறுப்பின் மடலேறுவல் எனக் கூறிப் போந்தான் . பின்பு வரக்கண்டிலேன் எனவும் , இந் நிகரன கூறுதல் . அவை வருமாறு ;

"புனைபூந் தழைஅல்குல் பொன் அன்னாய் சாரல்
தினைகாத் திருந்தேம்யா மாக - வினைவாய்த்து
மாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத்
தாம்வினவல் உற்றதொன் றுண்டு ".

( ஐந்திணையைம் . 14 )

எனவும் ,

"நெய்யொடு மயக்கிய உழுத்து 34 நூற்றன்ன
வயலையஞ் சிலம்பின் தலையது
செயலையம் பகைத்தழை வாடும் அன்னாய் ".

( ஐங்குறு . 211 )

எனவும் ,

"இலை சூழ்செங் காந்தள் எரிவாய் மிகையவிழ்த்த ஈர்ந்தண் வாடை
கொலைவேல் நெடுங்கட் கொடிச்சி கதுப்புளருங் குன்ற நாடன்
உலைபடு வெந்நோய் உழக்குமால் அந்தோ
முலையிடை நேர்பவர் நேரும் இடனிது35 மொய்குழலே "


எனவும் ,

"புணர்துணையோ டாடும் பொறியலவன் நோக்கி
இணர்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி
உணர்வொழியப் போன ஒலிதிரை நீர்ச் சேர்ப்பன்
வணர்சுரியைம் பாலாய் வண்ணம் உணரேனால் "

( சிலப் . கானல் . 31 )

எனவும் ,

"தன்குறையீ தென்னானை தழைகொணருந் தண்சிலம்பன் 36
நின்குறை யென்னும் நினைப்பன்னாய்ப்37 பொன்குறையும்
நாள்வேங்கை நீழலும் நண்ணான் எவன்கொலோ
கோள்வேங்கை அன்னான் குறிப்பு".

( திணைமாலை . 31)

எனவும் ,

" ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன்
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றி 38
நன்னர் நெஞ்சம் நெகிழ்ந்த பின்றை
வரைமுதிர் தேனிற் போகி யோனே
ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ
வேறுபுல னல்நாட்டுப் பெய்த
ஏறுடை மழையிற் கலிழுமென் நெஞ்சே".

(குறுந்தொகை . 176)

எனவும் ,

"மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி
அம்மலைக் கிழவன் நம்நயந்39 தென்றும்
வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேறாய்
நீயுங் கண்டு நுமரோடும்40எண்ணி
அறிவறிந் தளவல் வேண்டு மறுதரற்கு
அரிய வாழி தோழி பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார்தம் ஒட்டியோர்41 திறத்தே".

(நற்றிணை . 32 )

எனவும் வரும் ,

நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தினும் என்பது - தலைவி குறை நயந்தமை பெற்றவழி அத் தலைவி நயம்பொருந்தும் இடத்தினுங் கூற்று நிகழும் என்றவாறு .

தலைமகள் குறைநயந்தமை தலைமகற்குக் கூறிய செய்யுள் : -

"நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி
நின்குறி வந்தனென் இயல்தேர்க் கொண்க
செல்கஞ் செலவியங் கொண்மோ வைகலும்42
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும் என்மகள் நுதலே ".

( குறுந் . 114)

எனவும் ,

"கடும்புலால் புன்னை கடியுந் துறைவ
படும்புலால்43 புள்கடிவான் புக்க - தடம்புல்ஆம்
தாழைமா ஞாழல் ததைந்துயர்ந்த தாழ்பொழில்44
ஏழைமான் நோக்கி இடம் "

( திணைமாலை 44 )

எனவும் வரும் .

இன்னும் நயம்புரி யிடத்தும் என்றதனால் களவொழுக்கம் நிகழா நின்றுழிக் கூறுங் கூற்றும் ஈண்டே கொள்க . அது தலைவன் வருமெனவும் வந்தா னெனவுங் கூறுதலும் தலைமகன் பகற்குறிக்கண் நீங்கிய வழிக் கூறுதலும் எனப் பலவாம் .

"கவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும்
பெயர்பட வியங்கிய45 இளையரும் ஒலிப்பர்
கடலாடு வியலிடைப் 46 பொலிந்த நறுந்தழைத்
திதலை யல்குல் நலம்பா ராட்டிய
வருமே தோழி வார்மணற் சேர்ப்பன்
இற்பட47 வாங்கிய முழவுமுதற் புன்னை
மாவரை மறைகம் வம்மதி பானாள்
பூவிரி கானல் புணர்குறி வந்துநம்
மெல்லிணர் நறும்பொழிற் காணாதவன்
அல்லல் அரும்படர் காண்கநாம் சிறிதே ".

( நற்றிணை . 307)

இது வருகின்றான் எனக் கூறியது.

" நிலவு மறைந்தன்று இருளும் பட்டன்று
ஓவத் தன்ன இடனுடை வரைப்பில்
பாவை அன்ன நப்புறம்48 காக்குஞ்
சிறந்த செல்வத்து அன்னையுந்49 துஞ்சினள்
கெடுத்துப்படு50 நன்கலம் எடுத்துக்கொண் டாங்கு
நன்மார்பு அடைய முயங்கி மென்மெலக்51
கண்டனம் வருகஞ் செல்மோ தோழி
கீழு மேலுங் காப்போர் நீத்த52
வறுந்தலைப்53 பெருங்களிறு54 போலத்
தமியன் வந்தோன் பனியலை நிலையே ".

( நற்றிணை. 182 )

இது வந்தான் எனக் கூறியது .

"நெய்தல் கூம்ப நிழல்குணக் கொழுகக்
கல்சேர் மண்டிலஞ் சிவந்து சினந்தணியப்
பல்பூங் கானலும் அல்கின் றன்றே55
இனமணி வலிப்பப் பொழுதுபடப் பூட்டி
மெய்ம்மலி காமத்து யாந்தொழுது ஒழியத்
தேருஞ் செல்புறம் மறையும் ஊரோடு
யாங்கா வதுகொல் தானே தேம்பட
ஊதுவண்டு56 இமிருங் கோதை மார்பின்
மின்னிவர்57 பெரும் பூண் கொண்கனொடு
இன்னகை மேவிநாம் ஆடிய பொழிலே".

( நற்றிணை . 18 )

இது பகற்குறிக்கண் தலைவன் நீங்கியவழிக் கூறியது .

எண்ணரும் பன்னகை கண்ணிய வகையினும் என்பது - எண்ணுதற்கு அரிய பல நகையாட்டுக்களைத் தலைவனிடம் குறித்த வகையுங் கூற்று நிகழும் என்றவாறு .

அஃது அலராகுமென்று கூறுதல் . இவ்வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாயினால் அவர் தூற்றி நகைப்பராகலின் நகையாயிற்று .

உதாரணம் :-

" நிறைஅரியர் மன்அளியர்58 என்னாது காமம்
மறைஇறந்து மன்று படும் ".

( குறள் . 1138)

"அன்னையும் அறிந்தனள் அலரு மாயின்று
நன்மலை நெடுநகர் புலம்புகொள உயிர்க்கும்
இன்னா வாடையும் மலையும்
நும்மூர்ச் செல்கம் எழுகமோ59 தெய்யோ ".

( ஐங்குறு 238 )

எனவும் வரும் .

புணர்ச்சி வேண்டினும் என்பது - மேற்சொல்லப்பட்ட பல்லாற்றானும் தலைவற்கறிவுறுத்தவழிப் பின்னும் புணர்ச்சி வேண்டினும் ஆண்டுத் தோழி கூற்று நிகழும் என்றவாறு.

"நெய்யால் எரிநுதுப்பேம் 60 என்றற்றாற் கௌவையாற்
காமம் நுதுப்பேம்61 எனல் . "

(குறள் 1148)

"இவளே , நின்சொற் கொண்ட என்சொல் தேறிப்
பசுநனை ஞாழற் பல்கிளை62 ஒருசிறைப்
புதுநல னிழந்த புலம்புமார் உடையள்
உதுக்காண் தெய்ய உள்ளல்வேண்டும்
நிலவும் இருளும் போலப் புலவுத்திரைக்
கடலுங் கானலுந் தோன்றும்
மடல்தாழ் பெண்ணையஞ் 63 சிறுநல் லூரே."

(குறுந் . 81 )

இது பின்னும் புணர்ச்சி வேண்டிய தலைவற்கு இடமுணர்த்தியது . இரவு வருவானைப் பகல் வாவென்றலும் பகல் வருவானை இரவு வாவென்றலுங் குறிபெயர்த்தலும் எல்லாம் ஈண்டே கொள்க .

"ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்தும் அன்று சிறுகான் யாறே
இரைதேர் வெண்குருகு அல்லது யாவதும்
துன்னல் போகின்றாற் பொழிலே யாம்எம்
கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்
ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே."

( குறுந் . 113)

இது பகற்குறி நோந்தது . ஆண்டுத் தலைவிக்குக் கூறுமாறு :-

"ஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடான்
சிறுகட் பெருங்களி றுவயப்புலி தாக்கித்
தொல்முரண் சோருந்64 துன்னருஞ் சோலை65
நடுநாள் வருதலும் வரூஉம்
வடுநா ணலமே தோழி நாமே."

( குறுந் . 88 )

என வரும் .

வேண்டாப் பிரிவினும் என்பது - புணர்ச்சி வேண்டாது பிரிவு வேண்டினும் என்றவாறு.

இது தலைவன் நெஞ்சினாற் பிரியானென்பதனான் வேண்டாப் பிரிவென்றர் . அதுதாளா .... வென்பது அலராகுமென்று அஞ்சி ஒருவழித் தணத்தலும் ஒன்று . அவ்வழித் தலைவிக்கு உரைத்தனவும் தலைவற் 66குரைத்தனவும் உளவாம் . அவை வருமாறு :-

" இறவுப்புறத் தன்ன பீணர்படு தடவுமுதற் 67
சுறவுக்கோட்டன்ன முள்ளிலைத் தாழை
பெருங்களிற் றுமருப்பின் அன்ன அரும்புமுதிர்பு
நன்மான் உழையின் 68 வேறுபடத் தோன்றி
விழவுக்களங் கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப
இனமணி நெடுந்தேர் பாகன் இயக்கச்
செலீஇய சேறி யாயின் இவளே
வருவை யாகிய சின்னாள்
வாழா ளாதல்நற் கறிந்தினை 69 சென்மே ".

( நற்றிணை 19)

இது , தலைவன் பிரிவு வேண்டியவழிக் கூறியது .

"சாரற் பலவின் கொழுந்துணர் நறும்பழம்
இருங்கல் விடரளை வீழ்ந்தென வெற்பிற்
பெருந்தேன் 70 இறாலொடு சிதறு 71 நாடன்
பேரமர் மழைக்கண் கலிழத்தன்
சீருடை நன்னாட்டுச் செல்லும் அன்னாய் . "

( ஐங்குற் . 214 )

இது தலைவிக்கு உரைத்தது.

"கானலம் பெருந்துறைக் கலிதிரை 72 திளைக்கும்
வானுயர் எறிமணல் 73 ஏறி ஆனாது
காண்கம் வம்மோ தோழி
செறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே."

(ஐங்குறு . 214 )

இது தலைவியை ஆற்றுவித்தது .


"இருள் திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல்
நிலவுக் குவித்தன்ன வெண்மண லொருசிறைக்
கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப
இன்னும் வாரார் வரூஉம்
பல்மீன் வேட்டத் தென்னையர் திமிலே . "

(குறுந் . 123 )

எனவும் வரும் .

வேளாண் பெருநெறி வேண்டியவிடத்தினும் என்பது - வேளாண்மையாவது உபகாரம் . பெருநெறியாவது உபகாரமாகிய பெருநெறி என்க. அதனைத் தோழி தலைவனை வேண்டிக் கோடற்கண்ணும் என்றவாறு .

"நெடுவேள் மார்பின் ஆரம் போலச்
செவ்வாய் வானந் தீண்டிமீன் அருந்தும்
பைங்காற் கொக்கின் நிரைபறை யுகப்ப
எல்லை பைப்பயக் கழிப்பிக் குடவயின்
கல்சேர்ந் தன்றே பல்கதிர் ஞாயிறு
மதரெழில் மழைக்கண் கலிழ இவளே
பெருநாண் அணிந்த சிறுமென் சாயல்
மாணலஞ் சிதைய ஏங்கி ஆனாது
அழல்தொடங் கினளே பெரும அதனாற்
கழச்சுறா வெறிந்த புட்டாள் அத்திரி 74
நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந் தசைஇ
வல்வில் இளையரொ டெல்லிச் செல்லாது
சேர்ந்தனை 75 செலினே சிதைகுவ துண்டோ
பெண்ணை ஓங்கிய வெண்மணல் படப்பை
அன்றில் அகவும் ஆங்கண்
சிறுகுரல் நெய்தலெம் பெருங்கழி 76 நாட்டே."

(அகம் . 120 )

என்பதும் .

" நிலாவின் இலங்கும் " என்னும் அகப்பாட்டினுள் ,
"சேர்ந்தனிர் 77 செல்குவி ராயின் யாமும்
எம்வரை அளவையிற் பெட்குவம்
நும்மொப் பதுவோ உரைத்திசின் எமக்கே 78 ".

(அகம் . 220 )

என்பதும் கொள்க .

இதனாற் பயன் இல்லறம் நடத்தல் வேண்டும் என்பது .

புணர்ந்துழி யுணர்ந்த அறிமடச் சிறப்பினும் என்பது - தலைவனொடு தலைவி புணர்ந்தவழி ஆண்டுப் பொருந்திய அறிவு மடம்பட்ட சிறப்பின் கண்ணும் என்றவாறு .

அஃதாவது அல்ல குறிப்படுதல் . அவ்வழியும் தோழி கூற்று நிகழும்.

"கொடுமுள் மடல்தாழைக் கூம்பவிழ்ந்த ஒண்பூ
இடையுள்79 இழுதொப்பத் தோன்றிப் -படையெலாந் 80
தெய்வம் கமழுந் தெளிகடல் தண்சேர்ப்பன்
செய்தான் தெளியாக் குறி".

(ஐந்திணையைம்-49)

"இடுமணல் எக்கர் அகன்காணல் சேர்ப்பன்
கடுமான் மணியரவம் என்று- கொடுங்குழை81
புள்ளரவங் கேட்டும் பெயர்ந்தாள் சிறுகுடியர்
உள்ளரவம் நாணுவார்82 என்று ".

( ஐந்திணையெழு . 57 )

"அம்ம வாழியோ அன்னைநம் படப்பை
மின்னேர் நுடங்கிடைச் சின்னிழ லாகிய
புன்னை மென்காய் பொருசினை அரிய
வாடுவளி தூக்கிய அசைவிற் கொல்லோ
தெண்ணீர்ப் பொய்கையுள் வீழ்ந்தென
எண்ணினை யுரைமோ உணர்குவல் யானே . "


என வரும்.

ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும் என்பது - ஓம்படுத்துதற் பொருட்பகுதிக்கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு.

அஃதாவது ஒருவழித் தணக்கும்வழி ஓம்படை கூறுதல்.

" பெருநன் றொன்றிற் 83 கேணாரும் உளரே
ஒருநன்84 றுடையா ளாயினும் புரிமாண்டு
புலவி தீர வளிமத85 யிலைகவர்
பாடமை யொழுகிய தண்ணறுஞ் சாரல்
மென்னடை மரையா துஞ்சும்
நன்மலை நாட நின்னல திலளே . "

(குறுந் .115)

எனவும்,

"எறிந்தெமர் தாமுழுத ஈர்ங்குரல் 86 ஏனல்
மறந்துங் கிளியினமும் வாரா - கறங்கருவி
மாமலை நாட மடமொழி தன்கேண்மை
நீ மறவல் நெஞ்சத்துக்87 கொண்டு ".

( ஐந்திணையைம் . 18 )

எனவும் வரும் .

இதனுள் கிளிகடிய யாம் வாரேம் நீ மறவா தொழிதல் வேண்டுமென்றவாறு .

செங்கடு மொழியாற் சிதைவுடைத்தாயினு மென்பு நெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைபு அன்புதலை யடுத்த வன்புறைக் கண்ணும் என்பது - செவ்விய கடிய சொல்லினானே , தலைவன் அன்பு சிதைவுடைத்தாயினும் என்புருகுமாறு பிரியப்பட்டவளிடத்துச் சென்று தலைவன் அன்புடைமையின் அளிப்பன் என ஆற்றுவித்த வற்புறுத்தற்கண்ணுந் தோழி கூற்று நிகழும் என்றவாறு .

செங்கடுமொழி என்றது - கொடிய கடுமொழியேயன்றி மனத்தினாள் இனியளாகிக் கூறும் கடுமொழி . அஃதாவது இயற்பழித்தல் . அவ்வாறு இயற்பழித்தவழித் தலைவன் அன்பு சிதைவுடைத்தாயினும் என்றவாறு . அன்புதலையடுத்த வன்புறை யாவது தலைவன் இன்றியமையான் என ஆற்றுவித்தல்.

இயற்பழித்தற்குச் செய்யுள் : -

" மாறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்
பைதல் ஒருதலை88 சேக்கு நாடன்நீடு
நோய்தந் தனனே தோழி
பசலை ஆர்ந்தன89 குவளையங் கண்ணே ".

( குறுந் . 13 )

வன்புறைக்குச் செய்யுள் : -

"மகிழ்நன் மார்பே வெய்யைஎன நீ
அழியல் வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று நாட்டிற் போகிய
ஒன்றுமொழிக் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே ".

(குறுந் . 73 )

"மெய்யில் தீரா மேவரு காமமொடு
எய்யாய் ஆயினும் உரைப்பல் தோழி
கொய்யா முன்னுங் குரல்வார்பு தினையே
அருவி ஆன்ற பைங்கால் தோறும்
இருவி தோன்றின பலவே நீயே
முருகுமுரண் கொள்ளுந் தேம்பாய் கண்ணிப்
பரியல் நாயொடு90 பன்மலைப் படரும்
வேட்டுவற் பெறலோ டமைந்தனை91 யாழவின்
பூக்கெழு92 தொடலை நுடங்க வெழுந்தெழுந்து
கிள்ளைத் தெள்விளி யிடையிடை பயிற்றி
ஆங்காங் கொழுகா யாயின் அன்னை
சிறுகிளி கடிதல் தேற்றாள் இவளெனப்
பிறர்த்தந்து நிறுக்குவ ளாயின்
உறற்கிரி தாகுமவன் மலர்ந்த மார்பே ".

(அகம் . 28 )

ஆற்றுவித்தற்குச் செய்யுள் : -

"குறுங்கை இரும்புலி கோள்வல் ஏற்றை
நெடும்புதற் கானத்து மடப்பிடி ஈன்ற
நடுங்குநடைக் குழவி கொளீஇய பலவின்93
பழந்தூங்கு கொழுநிழல் ஒளிக்கு நாடற்குக்
கொய்திடு தளிரின் வாடிநின்
மெய்பிறி தாகம் எவன்கொல் அன்னாய் ".

(ஐங்குறு 216 )

`அழியல் ஆயிழை அன்புபெரி 94 துடையன்
பழியும் அஞ்சும் பயமலை நாடன்
நில்லா மையே நிலையிற் றாகலின்
நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற்
கடப்பாட் டாளன் உடைப்பொருள் போலத்
தங்குதற்குரிய தன்று நின்
அங்கலும் மேனிப் பாஅய பசப்பே "

(குறுந் . 143)

எனவும் ,

"பெருங்கை இருங்களிறு ஐவனம் மாந்திக்
கருங்கால் மராம்பொழிற் பாசடைத் துஞ்சுஞ்
சுரும்பிமிர் சோலை மலைநாடன்
பொருந்தினார்க் கேமாப் புடைத்து ".

(ஐந்திணையெழு . 12 )

எனவும் வரும் .

ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும் .... வரைதல் வேண்டியும் என்பது - தலைவன் வருநெறியினது தீமையைத் தாங்கள் அறிவுற்றதனால் எய்திய கலக்கத்தாலும் காவற் கடுமை வரையிறந்ததனானும் குறியிடமும் காலமுமாகத் தாங்கள் வரைந்த நிலைமையை விலக்கித் தலைவி காதல் மிகுதல் உட்படப் பிறவுந் தலைவனது நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் மிகுதியும் நோக்கித் தலைவன்மாட்டுக் கிளக்குங் கிளவியோடே கூட அத்தன்மைத்தாகிய நிலவகையினானே வரைதல் வேண்டியும் தோழி கூறும் என்றவாறு .

அவற்றுள் ஆறின்னாமை கூறியதற்குச் செய்யுள் : -

" சாரற் புனத்த95 பெருங்குரற் சிறுதினைப்
பேரமர் மழைக்கண் கொடிச்சி கடியவுஞ்
சோலைச் சிறு கிளி உண்ணும் நாட
ஆரிருள் பெருகின வாரல்
கோட்டுமா வழங்குங் காட்டக நெறியே. "

( ஐங்குறு . 282)

காப்பு வரை யிறந்ததற்குச் செய்யுள் : -

"பல்லோர் துஞ்சு நன்என் யாமத்து
உரவுக்களிறு போல்வந் திரவுக்கதவ முயறல்
கேளேம் அல்லேங் கேட்டனம் பெறாம்
ஓரி முருங்கப் பீலீ96 சாய
நன்மயில் வலைப்பட் டாங்குயாம்
முயங்குதொறு முயங்கும் அறனில் யாயே".

( குறுந்.244 )

எனவும் ,

"கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஒங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்குஞ்
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே "

(குறுந் . 69 )

எனவும் வரும் ,

காதன் மிகுதி கூறியதற்குச் செய்யுள் : -

" வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே ."

( குறுந் . 18 )

பிறவும் என்றதனால் தலைவனைப் பழித்தலும் கொள்க .

" நெடுவரை மிசையது குறுங்கால் வருடை
தினைபாய் கிள்ளை வெருவும் 97 நாட
வல்லைமன் தம்ம பொய்த்தல் 98
வல்லாப மன்றநீ அல்லது செயலே."

( ஐங்குறு . 288 )

இது , தலைவனைப் பழித்தது .

"குன்றக் குறவன் காதல் மடமகள்
மென்தோட் கொடிச்சியைப் 99 பெறற்கரிது தில்லர்
பைம்புறப் படுகிளி யோப்பலவர் 100
புன்புல மயக்கத்து விளைந்தன தினையே ."

( ஐங்குறு . 260 )

இது , புனக்காவலினி இன்றென்றது .

" கொடிச்சி யின்குரல் கிளைசெத் 101 தடுக்கத்துப்
பைங்குரல் ஏனற் படர்தருங் கிளியெனக்
காவலுங் கடியுநர் போல்வர்
மாமலை நாட வரைந்தனை கொள்மே.


இது , குறவரியல்பு உணர்த்தி வரைக வென்றது .

" வெறிகமழ் வெற்பன் என் மெய்நீர்மை கொண்ட(து)
அறியாள்மற் றன்னோ 102 அணங்கணங்கிற் றென்று
மறியீர்த் துதிரந்தூய் 103 வேலற்றரீஇ
வெறியோ டலம்வரும் யாய் ."

( ஐந்திணையைம் . 20 )

இது , வெறி யச்சுறுத்தியது .

" இனமீ னிருங்கழி ஓதம் உலாவ 104
மணிநீர் பரிக்குந் 105 துறைவ தகுமோ
குணநீர்மை குன்றாக் கொடியன்னாள் பக்கம்
நினைநீர்மை இல்லா ஒழிவு . "

( திணைமொழி .44 )

இஃதருளல் வேண்டுமென்றது .

இன்னும் பிறவும் என்றதனால் தலைமகள் தன்னை யழிந்தமை கூறுதலுந் தலைவன்மாட்டு வருமிடையூறு அஞ்சுதலுங் கொள்க .


அது வருமாறு :

" ........................................
தன்எவ்வங் கூரினும் நீசெய்த அருளின்மை
என்னையு மறைத்தாள் 106 என்தோழி அதுகேட்டு
நின்னையான் பிறர்முன்னர்ப் பழிகூறல் தான் நாணி ".

(கலி.44)

இது தலைமகள் தன்னை அழிந்ததற்கண் வந்தது .

" கரைபொரு கான்யாற்றங் கல்லத ரெம்முள்ளி வருதிராயின்
அரையிருள் யாமத் தடுபுலியோ நும்மஞ்சி யகன்று போக
நரையுருமே றுங்கைவேல் அஞ்சுக நும்மை
வரையர மங்கையர் வவ்வுத லஞ்சுதும் வார லையோ."


இஃது அவனூறு அஞ்சுதற்கண் வந்தது .

நாடுமுதலாயின சுட்டித் தலைவன்மாட்டுத் தோன்றுங் கிளவியாவன - நீ இத்தன்மையாகிய நாட்டையுடையை ; இத்தன்மையாகிய நகரையுடையை ; இத்தன்மைத்தாகிய இல்லையுடையை ; இத்தன்மைத்தாகிய குடிப்பிறப்பையுடையை ; இத்தன்மைத்தாகிய சிறப்புடையை ; என அவற்றின் மிகுதிபடக் கூறுதல் , அவை வருமாறு : -

"கோழிலை வாழை " என்னும் நெடுந்தொகைப் பாட்டினுள்,
"குறியா வின்பம் எளிதின் நின்மலைப் 107
பல்வேறு விலங்கும் எய்து 108 நாட
குறித்த இன்பம் நினக்கெவன் அரிய ".


என நாடு சுட்டி வந்தது.

"காமங் கடப்ப உள்ளம் 109 இனைப்ப
யாம் வந்து காண்பதோ பருவ மாயின்
ஓங்கித் தோன்றும் உயர்வரைக்கு
யாங்கெனப் படுவது நும்மூர் தொய்யோ ".

(ஐங்குறு . 237 )

இஃது ஊர்பற்றி வந்தது.

` துணைபுணர்ந் தெழுதரும் ' என்னும் கலித்தொகைப் பாட்டினுள் ,

" கடிமலர்ப் புன்னைக்கீழ்க் காரிகை110 தோற்றாளைத்
தொடிநெகிழ்ந்த தோளளாத்111 துறப்பாயால் மற்றுநின்
குடிமைக்கட் பெரியதோர்112
குற்றமாய்க்113 கிடவாதோ."

இது, குடிமைபற்றி வந்தது.

"ஆய்மலர்ப் புன்னைக்கீழ் அணிநலந் தோற்றாளை
நோய்மலி நிலையளாத் துறப்பாயால் மற்றுநின்
வாய்மைக்கண் பெரியதோர் வஞ்சமாய்க் கிடவாதோ."

"திகழ்மலர்ப் புன்னைக்கீழ்த் திருநலந் தோற்றாளை
துகழ் மலர்க் கண்ணளாத் துறப்பாயால் மற்றுநின்
புகழ்மைக்கட் பெரியதோர் புகராகிக் கிடவாதோ."

(கலித் . 135)

" ... ... ... ... ... ... ... ... ... ... ...
தாமரைக் கண்ணியைத் தண்ணறுஞ் சாந்தினை
நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின்
மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉம்
அணங்கென அஞ்சுவர் சிறுகடி யோரே 114 "

( கலித் . 52)

பிறவு மன்ன.

ஐயச் செய்கைதாய்க் கெதிர்மறுத்துப் பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினும் என்பது தலைவிக்குப் பிறரோடு கூட்டமுண்டெனச் சொல்லி ஐயுற்றவழி அதனை மறுத்துத் தலைவி செய்த செய்கையைப் பொய்யென நீக்கிப் பிறிதோர் ஆற்றான் மெய்வளிக் கட்படுத்தினும் என்றவாறு .

அஃதாமாறு தலைவி குறிவழிச் செல்கின்றதனைக் காண்டல் .

" உரும்உரறு கருவிய 115 பெருமழை தலைஇப்
பெயலான் றவிந்த தூங்கிருள் நடுநாள்
மின்னுநிமிர்ந் தன்ன 116 கனங்குழை இமைப்பப்
பின்னுவிடு நெறியிற் கிளைஇய கூந்தலள்
வரையிழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி
மிடையூர் பிழியக் கண்டனென் இவளென
அலையல் வாழிவேண் டன்னைநம் படப்பைச்
சூருடைச் சிலம்பிற் சுடர்ப்பூ வேய்ந்து
தாம்வேண் 117 டுருவின் அணங்குமார் வருமே
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க்
கனவாண்டு மருட்டலும் உண்டே இவள்தான்
சுடரின்று தமியளும் பனிக்கும் வெருவர 118
மன்ற மராத்த கூகை குழறினும்
நெஞ்சழிந் 119 தரணஞ் சேரு மதன்றலைப் 119
புலிக்கணத் தன்ன நாய்தொடர் விட்டு
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல்
எந்தையும் இல்ல னாக 120
அஞ்சுவள் அல்லளோ இவளது செயலே ".

[ அகம்.158 ]

என வரும்,

" வேங்கை நறுமலர் வெற்பிடை யாம்கொய்து
மாந்தளிர் மேனி வியர்ப்பமற் - றாங்கெனைத்தும்
பாய்ந்தருவி ஆடினேம் ஆகப் பணிமொழிக்குச்
சேர்ந்தனவாஞ் சேயரிக்கண் தாம் ".

[ஐந்திணையைம் . 15 ]

என்பதும் அது .

அவள் விலங்குறினும் ..... தாயிடைப்புகுப்பினும் என்பது - தலைவி காப்பு மிகுதியானுங் காதன் மிகுதியானும் நொது மலர் வரைவினானும் தமர் வரைவு மறுத்தினானும் வேறுபட்ட வழி இஃது ஏற்றினான் ஆயிற்று எனச் செவிலி அறிவரை வினாஅய்க் குறிபார்க்கும் இடத்தினும் , அஃதன்றி வெறியாட்டிடத்தினும் , பிறர் வரைவு வந்துழியும் அவர் வரைவு மறுத்தவழியும் , முன்னினை வகையானாதல் அறத்தொடுநிலை வகையானாதல் இவ்விருவகையானுந் தலைவற்கும் தலைவிக்கும் தனக்குங் குலத்திற்கும் குற்றந் தீர்ந்த கிளவியைத் தாய்மாட்டுப் புகுத விடுத்தலும் என்றவாறு .

புகுதவிடுத்தலாவது நிரம்பச் சொல்லாது தோற்றுவாய் செய்தல் . அந்நால்வகைப் பொருளினும் நின்னிலைக் கிளவி வருமாறு : -

"பொய்படு பறியாக் கழங்கே மெய்யே
மணிவரைக் கட்சி மடமயில் ஆலும்
மலர்ந்த வள்ளியங் கானங் கிழவோன்
ஆண்டகை விறல்வேள் அல்லன் இவள்
பூண்தாங் கிளமுலை அணங்கி யோனே."

( ஐங்குறு . 250)

இது குறிபார்த்தவழிக் கூறியது , கழங்கு முன்னிலையாக .

"அம்ம வாழி தோழி பன்மலர்
நறுந்தண் சோலை நாடுகெழு நெடுந்தகை
குன்றம் பாடா னாயின்
என்பயஞ் செயுமோ வேலற்கு வெறியே ."121

( ஐங்குறு . 244 )

இது , தலைவியை முன்னிலையாகக் கூறியது .

" நெய்தல் நறுமலர்ச் செருந்தியொடு விரைஇக்
கைபுனை நறுந்தார் கமழு மார்பன்
அருந்திறற் கடவு ளல்லன்
பெருந்துறைக் கொண்டிவள் அணங்கி யோனே . "

( ஐங்குறு . 182 )

இது வேலனை முன்னிலையாகக் கூறியது.

" கடவுட் கற்சுனை122 அடைவிறந் தவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண்பூ உருகெழக் கட்டிப்
பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள் 123
அருவி இன்னியத் தாடு நாடன்
மார்புதர வந்த படர்மலி யருநோய்
நின்னணங் கன்மை யறிந்தும் அண்ணாந்து
கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவு ளாயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே ."

( நற்றிணை . 34 )

இது , முருகனை முன்னிலையாகக் கூறியது . பிறவுமன்ன .

"அன்னை வாழிவேண் டன்னை முழங்குகடல்
திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்குந்
தண்ணந் துறைவன் வந்தெனப்
பொன்னினுஞ் சிறந்தன்று கண்டிசின் நுதலே."

( ஐந்குறு . 105)

இது முன்னிலைப்பகுதி. நொதுமலர் வரைவுபற்றி வந்தது.

"குன்றக் குறவன் காதல் மடமகள்
அணிமயி லன்ன அசைநடைக் கொடிச்சியைப்
பெருவரை நாடன் வரையு மாகில்
தொடுத்தனம் 124 ஆயினா நன்றே
இன்னும் ஆனாது நண்ணுறு துயரே.125 "

( ஐங்குறு . 258 )

இஃது, அவன் வரைவு மறுத்துழிக் கூறியது .

இனி அறத்தொடுநிலைப் பகுதி எழுவகைப்படும் , அவை யாமாறு :

"எளித்தல் ஏத்தல் வேட்கை யுரைத்தல்
கூறுதல் உசாவுதல் 126 ஏதீடு தலைப்பாடு
உண்மை செப்புங் கிளவியொடு தொகைஇ
அவ்வெழு வகைய என்மனார்127 புலவர்."

(பொருளியல் 102 )

எனப் பொருளியனுட் கூறிய சூத்திரத்தானே கொள்க .

எளித்தல் என்பது - தலைவன் நம்மாட்டு எளியனென்று கூறுதல் . அதனது பயம் மகளுடைத்தாயர் தம்வழி ஒழுகுவார்க்கு மகட்கொடை வேண்டுவ ராதலான் , எளியனென்பது கூறி அறத்தொடு நிற்கப் பெறுமென்றவாறு .

"அன்னை அறியினும் அறிக அலர்வாய்128
அம்மென் சேரி 129 கேட்பினுங் கேட்க
பிறிதொன் றின்மை அறியக் கூறிக்
கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வ நோக்கிக்
கடுஞ்சூள் தருகுவல் நினக்கே130 கானல்
தொடலை ஆயமொடு கடலுடன் ஆடியுஞ்
சிற்றில் இழைத்துஞ் சிறுசோறு குவைஇயும்
வருந்திய வருத்தந் தீர யாம்சிறிது
இருந்தன மாக எய்த வந்து
தடமென் பணைத்தோள் மடநல் லீரே
எல்லும் எல்லின் றசைவுமிக131 உடையேன்
மெல்லிலைப் பரப்பின் விருந்துண் டியானுமிக்
கல்லென் சிறுகுடித் தங்கின்மற் றெவனோ
எனமொழிந் தனனே 132 ஒருவன் அவற்கண்டு
இறைஞ்சிய முகத்தெம் புறஞ்சேர்பு பொருந்தி
இவை நுமக் குரிய அல்ல இழிந்த
கொழுமீன் வல்சி என்றனம் இழுமென
நெடுங்கொடி நுடங்கு நாவாய் தோன்றுவ
காணா மோவெனக் காலிற் சிதையா
நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளும்
என்னே 133 குறித்த நோக்கமொடு நன்னுதால்
ஒழிகோ யானென அழிதகக் கூறி
யான்பெயர் 134 கென்ன நோக்கித் தான்தன்
நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி
நின்றோன் போலும் இன்றும்என் கட்கே . "

( அகம் . 110 )

என வரும் , அன்னை என்றது நற்றாயை ,

ஏத்தல் என்பது - தலைவனை உயர்த்துக் கூறுதல் , அது , மகளுடைத் தாயர் `தலைவன் உயர்ந்தான் ' என்றவழி மனமகிழ்வராகலின் , அவ்வாறு கூறப்பட்டது உயர்த்துக் கூறி அறத்தொடு நிற்கப்பெறும் என்றவாறு .

"அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள்
பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு
நனிபசந் தனளென வினவுதி அதன்திறம்
யானுந் தெற்றென உணரேன் மேனாள்
மலிபூஞ் சாரலென் தோழி மாரோடு
ஒலிசினை வேங்கை கொய்குவஞ் சென்றுழிப்
புலிபுலி என்னும் பூசல் தோன்ற
ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆயிதழ்
ஊசி போகிய சூழ்செய் மாலையன்
பக்கஞ் சேர்த்திய செச்சைக் கண்ணியன்
குயமண் டாகஞ் செஞ்சாந்து நீவி
வரிபுனை வில்லன் ஒருகணை தெரிந்து கொண்டு
யாதோ மற்றம் மாதிறம் படரென 135
வினவி நிற்றந் தோனே அவற்கண்டு
எம்முள் எம்முள் மெய்ம்மறை பொடுங்கி
நாணி நின்றனெ மாகப் பேணி
ஐவகை வகுத்த 136 கூந்தல் ஆய்நுதல்
மையீர் ஓதி மடவீர் நும்வாய்ப்
பொய்யும் உளவோ என்றனன் பையெனப்
பரிமுடுகு தவிர்த்த தேரன் எதிர்மறுத்து137
நின்மகள் உண்கண் பன்மா ணோக்கிச் 138
சென்றோன் மன்றஅக் குன்றுகிழ வோனே139
பகல்மாய் அந்திப் படுசுடர் அமையத்து
அவன்மறை தேஎம்140 நோக்கி மற்றிவன்
மகனே தோழி என்றனள்
அதனள141 வுண்டுகோள் மதிவல் லோர்த்தே 142."

( அகம் . 48 )

இதனுள் கழுநீர் மாலையன் , வெட்சிக்கண்ணியன் எனக் கூறினமையால் , அவன் நாட்டிற்கும் மலைக்குந் தலைவன் என்பது படவும் ஒருகணை தெரிந்துகொண்டு புலி யாதென்ற அவனது வீரியமுங் கூறி உயர்த்தவாறுங் காண்க .

வேட்கையுரைத்தலாவது - தலைவன்மாட்டுத் தலைவி வேட்கையும் தலைவிமாட்டுத் தலைவன் வேட்கையும் கூறுதல். வேட்கைகூறி அறத்தொடு நிற்கும் என்றவாறு .

"நின்மகளுண்கண் பன்மா ணோக்கிச் சென்றோன் " என்பது தலைவன் வேட்கை கூறியவாறாம் .

"அன்னாய் வாழிவேண் டன்னை என்தோழி
நனிநா ணுடையள் எனினும் 143 அஞ்சும்
ஒலிவெள்ளருவி யோங்குமலை நாடன்
மலர்ந்த மார்பிற் பாயல்
தவநனி வெய்ய 144 நோகோ யானே."

( ஐங்குறு . 215 )

இது , தலைவி வேட்கை கூறியது .

கூறுதலாவது - தலைவியைத் தலைவற்குக் கொடுக்கவேண்டு மென்பதுபடக் கூறுதல் .

உதாரணம் : -

"வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டிராய்க் 145
கோடாது நீர்கொடுப்பின் 146 அல்லது - வாடா
எழிலும் முலையும் இரண்டிற்று முந்நீர்ப்
பொழிலும் விலையாமோ போந்து".

( திணைமாலை . 15 )
என வரும் .

"கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி
அறியா வேலன் வெறியெனக் கூறும்
அதுமனங் கொள்குவை அன்னையிவள்
புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே . "

( ஐங்குறு . 243 )

எனவும் வரும் ,

உசாவுதல் என்பது - வெறியாட்டுங் கழங்கும் இட்டுரைத்துழி வேலனோடாதல் பிறரோடாதல் தோழி உசாவுதல் .

"முருகயர்ந்து வந்தமுதுவாய் வேல
சினவல் ஓம்புமதி வினவுவ துடையேன்
பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு
சிறுமறி தோன்றிய 147 வன்றுநுதல் நீவி
வணங்கினை 148 கொடுத்தி யாயின் அணங்கிய
விண்டேர் 149 மாமலைச் சிலம்பன்
தண்டா ரகலமும் உண்ணுமோ பலியே 150 ".

( குறுந் . 362)

இது , வேலனொடு உசாவுதல் .

"இன்றியாண் டையனோ தோழி குன்றத்துப்
பழங்குழி அகழ்ந்த கானவன் கிழங்கினோடு
உண்ணமை151 மதுத்துளி152 பெறூஉ நாடன்
அறிவுகாழ்க் கொள்ளும் அளவைச் செறிதொடி
எம்மில் வருகுவை நீயெனப்
பொம்மல் ஓதி நீவி யோனே. "

(குறுந். 379)

இது, செவிலி கேட்பத் தலைவியொடு தோழி உசாவியது. பிறவுமன்ன.

ஏதீடு தலைப்பாடு என்பது - யாதானுமோர் ஏதுவை இடையிட்டுக் கொண்டு தலைப்பட்டமை கூறுதல்.

உதாரணம் ;-

" காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்
... ... ... ... ... ... ... ...
அருமழை தரல்வேண்டில் தருகிற்கும் பெருமையளே ".

(கலித். 39)

இது, புனலிடை உதவினானெனத் தலைப்பாடு கூறியது.

"கள்ளி சுனைநீலஞ் சோபா லிகைசெயலை
அள்ளி அளகத்தின்153 மேலாய்ந்து - தெள்ளி
இதணாற்154 கடியோடுங்கா ஈர்ங்கடா யானை
உதணாற்155 கடிந்தான் உளன். "

(திணைமாலை நூற். 2)

இது, களிற்றிடை உதவினானெனத் தலைப்பாடு கூறியது.

"அன்னாய் வாழிவேண் டன்னை என்னை156
தானு மலைந்தான் எமக்குந்தழை யாயின
பொன்வீ மணிஅரும் பினவே
என்ன மரங்கொலவர் சார லவ்வே. "

(ஐங்குறு. 201)

இது, தழையும் கண்ணியுந் தந்தானென்பதுபடக் கூறியது.

உண்மை செப்பும் கிளவி யாவது - பட்டாங்கு கூறுதல்.



"அல்கண் மழை157 பொழிந்த அகன்கண் அருவி
ஆடுகழை அடுக்கத் திழிதரு நாடன்
பெருவரை அன்ன திருவிறல் வியன் மார்பு
முயங்காது கழிந்த நாளிவள்
மயங்கிதழ் மழைக்கண் கலிழும் அன்னாய்."

(ஐங்குறு. 220)

இவ்வகை யெல்லாம் தத்தங் குடிமைக் கேற்ற வழிக் கொள்க.

வரைவுடன் பட்டோர்க் கடாவல் வேண்டியும் என்பது - தமர் வரைவுடன் பட்டமையைத் தலைவற்கு உரைக்க வேண்டியும் என்றவாறு.

உதாரணம் வந்தவழிக் காண்க.

ஆங்கதன் றன்மையின் வன்புறை என்பது-அவ்வாறு வரைவுடம்பட்ட தன்மையினால் தலைவியை வற்புறுத்தற் கண்ணும் என்றவாறு.

"கூர்முள்158 முண்டகக் கூர்ம்பனி மாமலர்
நூலற முத்திற் காலொடு பாறித்
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை
யானுங் காதலென் யாயும் நனி வெய்யன்159
எந்தையுங் கொடீஇயர் வேண்டும்
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே. "

(குறுந். 51)

"அம்ம வாழி தோழி நம்மொடு
சிறுதினைக் காவ லனாகிப் பெரிதுநின்
மென்தோள் நெகிழவும் திருநுதல் பசப்பவும்
பொன்போல் விறற்கவின் தொலைத்து
குன்ற நாடற் கயர்ந்தனர் மணனே "

(ஐங்குறு. 230)

என வரும்.

பாங்குற வந்த நாலெட்டு வகையும் என்பது - பகுதிப்பட வந்த முப்பத்திரண்டு வகைப்பட்ட பொருண்மையும் என்றவாறு.

அவையாவன மேற் சொல்லப்பட்ட முன்னுற வுணர்தல் வகை குறையுற வுணர்தற்கண் பெருமையிற் பெயர்த்தல், உலகுரைத் தொழித்தல், அருமையினகற்றல், பின் வாவென்றல், பேதைமை யூட்டல், முன்னுறு புணர்ச்சி, முறைதிறுத் துரைத்தல். அஞ்சியச்சுறுத்தல். உரைத்துழிக் கூட்டம் எனச் சொல்லப் பட்ட எண்வகை மாயஞ் செப்பி வந்த கிழவனைப் பொறுத்த காரணம் குறித்தலாகிய இருவருமுள்வழி அவன்வர வுணர்தல், புணர்ந்தபின் அவன்வயின் வணங்கல் குறைநயப்பச் சேறல். குறைநயப்புவகை, நயந்தமை கூறல், அலராமென்றல், புணர்ச்சி வேண்டியவழிக் கூறல், பிரிவு வேண்டியவழிக் கூறல், வேளாண் பெருநெறி வேண்டிக்கூறல், அல்ல குறிப்பட்டவழிக் கூறல், ஓம்படைகூறல், இயற்பழித்து வற்புறுத்தல், ஆறின்னாமை கூறல், காப்பு மிகுதி கூறல், காதல் மிகுதி கூறல், அவன் வயிற் றோன்றிய கிளவி, ஐயச்செய்கை தாய்க்கெதிர் மறுத்தல், குறி பார்த்தல், விலக்கல், வெறிவிலக்கல், பிறன் வரைவு மறுப்பித்தல் அவன் வரைவுடம்படுத்தல், வரைவுடம்பட்டமை தலைவற்குக் கூறல், உடம்பட்டமை தலைவிக்குக் கூறி வற்புறுத்தல் என இவை

160தாங்கருஞ் சிறப்பிற் றோழி மேன என்பது - இவை முப்பத்திரண்டு பொருண்மையும் தலைவிக்கு இன்றியமையாத தோழி மேலன என்றவாறு.(24)

(24)

(பாடம்)1. பின்வர.
2. முதல்மூன்று அளைஇப்.
3. இடத்தும்.
4. அனைநிலை.
5. வேண்டியும். (பாடம்)
6. வேண்டியும்.
7. வன்பொறை.
8. வகையும்.
(பாடம்) 9. நிணச்சுற வுறுத்த உணங்கல்.
10. கொழும்பல்.
11. சேயிறாப்.
(பாடம்)12. என்னையர்.
13. வேங்கை.
14. வெட்டி.
15. கல்லார்.(பாடம்)
16. கைதைய.
17. கொச்சி.
18. மாதயங்.
19. போன்றல.
20. பாயறுவயறலைதவலி.
21. தேர் மழை.
22. ஏனலூழ் ஐயர்.
(பாடம்)23. மலரும்.
24. சோர்ந்த குருதி.
25. றிப்புனத்துள்.
26. போந்ததில் ஐயக்.
(பாடம்)27. மேலசை.
28. தோழிநெறி.
29. வரிவளை நள்மாண்.
30. பிரியுற்றுறையும்.
31. றமர்நகை.
32. சறுந்துறை.
33. அண்ணற்.
(பாடம்)34. உழுந்து.
35. மிடனே.
36. தன் சிலம்பின்.
37. யேநான் நினைப்பினும்.
38. பயிற்றியென்.
(பாடம்)39. நன்னயத்.
40. நுமரோடு.
41. ஒள்ளியோர்.
42. அல்கலும்.
43. அடும்புலால்.
44. பொழிலே.
45. இலங்கிய.
46. வியலணிப்.
47. நிறைபட.
(பாடம்)48. நிற்புறம்.
49. அனையும்.
50. பெறு.
51. மென்மேற்.
52. நீர்க்க.
53. வருந்தலைப்.
54. பெயர் களிறு.
55. பல்குற்றன்றே.
56. ஓதைவண்டு.
57. மின்னவிர்.
58. மன் எளியர்.
59. வெழுரே.
(பாடம்)60. எரிநுதுப்போம்.
61. காமநுதுப்போம்.
62. பல்சினை.
63. எம்.
64. சொல்லும்.
65. சாரல்.
66. தலைவிக்.
67. கடவுமுதற்.
68. நுளையின்.
(பாடம்)69. ஆதலறிந்தனை.
70. இறா அல்.
71. வெற்பிறஞ்சிதறு.
72. சலிதிரை.
73. நெடுமணல்.
74. புட்டிரளத்திரி.
75. சேந்தனை.
(பாடம்)76. பெருங்கறி.
77. சேர்நகர்.
78. நும்மொப்பது மேதரி தெமக்கே.
79. இடையில்.
80. புடையெல்லாம்.
81. கொடுங்குழையாள்.
82. கலிந்தாள் சிறுகுடியர் உள்ளாயம் நாணுப.
83. றாற்றின்.
84. யொருகன்.
85. வழிமதி.
(பாடம்)86. ஈன்குரல்.
87. நெஞ்சத்துட்.
88. ஒரு கலை .
89. ஆர்ந்தாங்.
(பாடம்)90. பரிபண் நாயொடு.
91. டமைந்தன.
92. தோட்கெழு.
93. பலவின்கொ.
94. அளிபு.
95. புறத்த.
(பாடம்)96. பலி.
97. நெருஉம்.
98. வல்லைமன்ற பொய்த்தல்.
99. கொட்புச் சிறையைப்.
100. ஒப்பலர் , ஒப்பலள்.
101. கிளிசெத் , கிளைசேர்த்.
(பாடம்)102. றன்னை.
103. மறியீர் தன்னோர்ந்தாய.
104. முதலாவ.
105. பரக்கும்.
106. மறைவித்தாள்.
107. னின்மனைப்.
108. எய்த.
109. கடவ உள்ளம்.
(பாடம்)110. அணிகலம்.
111. தாளழத்.
112. பேரினத்தாற்.
113. வஞ்சமா.
114. சிறுகுடி வாழ்நரே.
115. கருவியல்.
116. நிமிர்ந்த.
117. தான்வேண்.
118. வெருவுற.
119. சேருந் தன்றலைப்.
(பாடம்) 120. இல்லானாக.
121. வேலற்கண் . வெறியே .
122. கீதனை.
123. குறமகள்.
(பாடம்) 124. கொடுத்தனம்.
125. நன்னுதல் துயரே.
126. உசாதல்.
127. வகையுமென்மனார்.
128. வல்லவா.
129. இம்மென்சேரி.
130. நினக்குறு.
131. றிசையும்.
(பாடம்) 132. தன்றென.
133. என்னையே.
134. யாம்பெயர் தோறும்.
135. படர்கென.
136. அமர்த்த.
137. தவிர்ந்தோன் எதிர்மறுத்து.
138. ணோக்கிச்.
139. கிழவோன்.
(பாடம்)140. தேயம்.
141. வுண்டொர்கோன்.
142. சொன்மதிவல்.
143. வெனினு.
144. துஞ்சிய வெய்யள்.
145. கொண்டியாய்க்.
146. நீ கொடுப்பின்.
147. கொன்றிவள்.
(பாடம்) 148. யணங்கினை.
149. விண்தோய்.
150. முண்ணு மொப்பிவியே.
151. கண்ணமைதூமணி.
152. துணி.
153. அளகத்து.
154. யிதனாற்.
155. யதனாற்.
156. யென்னை கூறுதல்.
157. அலங்குமழை.
158. கூன்முள்.
159. நையுநனிவெய்யன்.
160. தாய்த் தாய்க் கொண்டுவருஞ் சிறப்பும் இருவர் துன்பமும் தான் உற்றாளாகக் கருதுஞ் சிறப்பும் உடைமையின் ` தாங்கருஞ் சிறப்பு ' என்றாள். (தொல். கள - 23 நச்சி.)