என்றது மேற் றலைவற்குந் தலைவிக்குந் தோழிக்குமுரிய கிளவியெல்லாங்கூறி இனிச் செவிலிக்குரிய கிளவி யுணர்த்துதல் நுதலிற்று.
களவலராதல் முதலாகச் சொல்லப்பட்ட பதின்மூன்று கிளவியும் அத்தன்மைய பிற கிளவியும் களவுகாலத்துச் செவிலியின் மேலன என்றவாறு. இவற்றுள் தோழியை வினாதலென வேறொரு கிளவியாக ஓதினாராயினும் அதன் முன்பு நிகழும் கிளவியெல்லாம் அவளை வினாதற்குக் காரணமாதலின் அவை யீண்டுப் பதின்மூன்றென வெண்ணப் பட்டன வென்க.
களவள ராயினும் என்பது - தலைவன் ஒழுகலாறு புறத்தார்க்குப் புலனாகி அலர் தூற்றப்பட்ட விடத்துத் தோழியை வினாவும் என்றவாறு.
காம மேற் படுப்பினும் என்பது - தலைவிமாட்டுளதாகிய வேட்கை அளவிறப்பினும் தோழியை வினாவும் என்றவாறு.
"மணியில்4 திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில்5 திகழ்வதொன் றுண்டு."
(குறள். 1273)
அளவு மிகத் தோன்றினும் என்பது - பெதும்பைப் பருவத்தளாகிய தலைவி புணர்ச்சியாற் கதிர்த்து வீங்குகின்ற முலையும் புதிதுற்ற கவினுங் கண்டவிடத்துந் தோழியை வினாவும் என்றவாறு.
"கண்நிறைந்த காரிகைக் காம்பேர் தோட்பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை6 பெரிது.
[குறள். 1272]
தலைப்பெய்து காணினும் என்பது - தலைவனோடு தலைவியைத் தலைப்பெய்து காணினும் வினாவும் என்றவாறு.
பெய்தென்பதனைப் பெயவெனத் திரிக்க.
" ... ... ... ... ... ... ...
மிடையூர் பிழியக் கண்ட னென் ".
[அகம். 158]
என வரும்.
7கட்டினும் என்பது - கட்டுவைப்பித்த வழியும் அவர்சொற் கேட்டுத் தோழியை வினாவும் என்றவாறு.
கழங்கினும் என்பது - கழங்கு வைத்துழியும் அவர்சொற் கேட்டுத் தோழியை வினாவும் என்றவாறு.
வெறியென விருவிரு மொட்டிய திறத்தாற் செய்திக்கண்ணும் என்பது செவிலியும் நற்றாயும் பொருந்திய பக்கத்துக் கண்டு வெறியாடுவா மென்றவழித் தலைவி யெய்திக்கண்ணுந் தோழியை வினாவும் என்றவாறு.
ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும் என்பது - வெறியாடிய சென்றவழி அதற்கழிவுறுமிடத்து வரினும் என்றவாறு.
அஃதாவது: `கடவுட் கற்சுனை ' எனத் தொடங்கும் நற்றிணைப் பாட்டில்.
"நின்னணங் கன்மை அறிந்தும் அண்ணாந்து
கார்நறுங் கடம்பின் கண்ணிசூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவு ளாயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே ".
[நற்றிணை 34]
எனத் தோழி கூறுதல். அவ்வாறு கூறியவழியுங் காரணமென்னையென வினாவும்.
காதல் கைம்மிகக் கனவி னரற்றலும் என்பது - காதன் மிகுதியால் தலைவனை யுள்ளிக் கனவின்கண் அரற்றுதற்கண்ணும் வினாவும்.
தோழியை வினாதலும் என்பது - இவை நிமித்தாமாகத் தோழியை வினாதலும் என்றவாறு. எனவே களவலராதல் முதற் கனவினரற்ற வீறாக ஓதிப வொன்பது கிளவியும் தோழியை வினாதற்பகுதி. அவை நிகழாதவழி வினாதலில்லை. அதனால் தோழியை வினாதலென ஒரு கிளவியாக எண்ணற்க.
தெய்வம் வாழ்த்தலும் என்பது - இவ்வாறு பட்டதெனத் தோழி யுரைத்தவழி யிதனை நற்றாய்க்கும் தந்தைக்கும் கூறலாற்றாதான் தெய்வத்தை வேண்டிக்கோடல்.
போக்குடன் அறிந்தபின்...நிற்றற் கண்னும் என்பது - தலைவனுடன் போயினான் என்று அறிந்தவழித் தானுந் தோழியோடு. கெழுமி இல்லத்தின்கணிறுத்தற் கண்ணும் என்றவாறு.
"பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே."
(குறுந். 15)
பிரிவி னெச்சத்து மகணெஞ்சு வலிப்பினும் என்பது - தலைவன் வரையாது பிரிந்தவழி யொழிந்த தலைமகள் அலராகுதலுமின்றி வேறுபாடுமின்றி ஒரு மனைப்பட்டிருந்த வுள்ளக் கருத்தை யறிந்தவழியும் என்றவாறு. வலித்தல் என்பது தெளிதல்.
இருபாற் குடிப்பொரு ளியல்பின்கண்ணும் என்பது - தலைவன் குடிமை தன் குடிமையோ டொக்குமென வாராய்தற் கண்ணும் என்றவாறு.
குடியென்னாது பொருள் என்றதனால் பொருளுங் குணமும் ஆயப்பெறு மென்றவாறு.
அன்னவை பிறவும் என்றதனான்.
" நாற்றம் பெற்று நிலைப்புக் காண்டல்
உண்டியிற் குறைதல் உடம்புநனி சுருங்கல்
கண் துயில் மறுத்தல் கோலஞ்செய் யாமை ".
முதலாயின கொள்க. இவையும் வினாதற்கேதுவாம். இவற்றிற் கெல்லாஞ் செய்யுள் வந்தவழிக் காண்க.
(25)
(பாடம்) 1. காமமெய்ப்படுப்பினும்.
2. கைமிகக்.
3. அன்னஇம்.
4. மணியுள்.
5. அணியுள்.
(பாடம்) 6. மாமை.
7. கட்டுவிச்சியும் வேலனும் தாம்பார்த்த கட்டினானும், கழங்கினானும் தெய்வத்திற்குச் சிறப்புச் செய்யாக்கால் இம்மையில் தீராதென்று கூறுதலின் அவ்விருவருந் தம்மின் ஒத்த திறம் பற்றியதனையே செய்யுஞ் செய்தியிடத்தும் : ` திறம் ' என்றவதனான் அவர் வேறு வேறாகவும் கூறப்படும்.
(தொல். கள. 24. நச்சி)