களவியல்

136தாய் அறிவுறுதல் செவிலியோ டொக்கும்.

என்றது, நற்றாய்க்கு உரியதொரு மரபுணர்த்துதல் நுதலிற்று.

நற்றாய் களவொழுக்கம் அறிவுறுத்தல் செவிலியோ டொக்கும் என்றவாறு. செவிலி கவலுந்துணைக் கவலுத லல்லது தந்தையையும் தன்னையன்மாரையும்போல வெகுடலிலள் என்றவாறு. அவர் வெகுள்வரோ எனின்,

"காமர் கடும்புனல் " எனத்தொடங்கும் கலித்தொகைப் பாட்டினுள்,

"அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட
என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்".

(கவித்.39)

எனத் தாய் வெகுளாமை காணப்பட்டது.

"அவரும் தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து
ஒருபக லெல்லாம் உருத்தெழுந் தாறி".

(கலித்.39)

என்றதனான் வெகுட்சி பெற்றாம்.

(48)