களவியல்

137அம்பலும் அலருங் களவுவெளிப் படுத்தலின்
அங்கதன் முதல்வன் கிழவ னாகும்.

என்றது, களவு வெளிப்படுப்பார் அவர்1 என்பது உணர்த்துதல் நுதலிற்று.

அம்பல் என்பது முகிழ்த்தல், அஃது ஒருவரொருவர் முகக்குறிப்பினாற் றோற்றுவித்தல். அலராவது சொல்லுதல். அதனானே இவை இரண்டும் களவினை வெளிப்படுத்தலின் அதற்குக் காரணமாவான் தலைவன் என்றவாறு என்னை, அவனையறிந்துழியல்லது இவை நிகழாமையின் தலைவி வேறுபாட்டான் ஆகாதோ எனின், ஆண்டு எற்றினான் ஆயிற்று என ஐயம் நிகழ்தலல்லது துணிவு பிறவாதாம் என்று கொள்க.

(49)

1. இருவர்