அகத்திணை இயல்

14திணைமயக் குறுதலும் கடிநிலை இலவே
நிலனொருங்கு மயங்குதல் இல்லென மொழிப
புலன்நன் குணர்ந்த புலமை யோரே.

இது, மேல் அதிகரிக்கப்பட்ட நிலத்தினானும் காலத்தினானும் ஆகிய திணை மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) திணைமயக்குறுதலும் கடிநிலை இல - ஒரு திணைக்கு உரிய முதற்பொருள் மற்றோர் திணைக்குரிய முதற்பொருளோடு சேரநிற்றலும் கடியப்படாது1 நிலன் ஒருங்கு மயங்குதல் இல் என மொழிப - ஆண்டு நிலன் சேரநிற்றல் இல்லை என்று சொல்லுவர், புலன் நன்கு உணர்ந்த புலமையோர் - புலன் நன்கு உணர்ந்த புலமையோர்.

எனவே, காலம் மயங்கும் என்றவாறாயிற்று. அதற்குச் செய்யுள்;

"தொல்ஊழி தடுமாறித் தொகல்வேண்டும் 2பருவத்தான்
பல்வயின் உயிரெல்லாம் படைத்தான்கட் பெயர்ப்பான்போல்
எல்லுறு தெறுகதிர் மடங்கித்தன் கதிர்மாய
நல்லற நெறிநிறீஇ உலகாண்ட அரசன்பின்
அல்லது மலைந்திருந் தறநெறி நிறுக்கல்லா
மெல்லியான் பருவம்போல் மயங்கிருள் தலைவர
எல்லைக்கு வரம்பாய இடும்பைகூர் மருள்மாலை;

பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல்
தூவறத் துறந்தனன் துறைவனென் றவன்திறம்
நோய்தெற உழப்பார்கண் இமிழ்தியோ எம்போலக்
காதல்செய் தகன்றாரை உடையையோ நீ;

மன்றிரும் பெண்ணை மடல்சேர் அன்றில்
நன்றறை கொன்றனர் அவரெனக் கலங்கிய
என்துயர் அறிந்தனை நரறியோ எம்போல
இன்துணைப் பிரிந்தாரை உடையையோ நீ;

பனியிருள் சூழ்தரப் பைதலஞ் சிறுகுழல்
இனிவரின் உயருமன் பழியெனக் கலங்கிய
தனியவர் இடும்பைகண் டினைதியோ எம்போல
இனியசெய் தகன்றாரை உடையையோ நீ;
எனவாங்கு,

அழிந்தயல் அறிந்த எவ்வம் மேற்படப்
பெரும்பே துறுதல் களைமதி பெரும
வருந்திய செல்லல்தீர் திறனறி ஒருவன்
மருந்தறை கோடலிற் கொடிதே யாழநின்
அருந்தியோர் நெஞ்சம் அழிந்துக விடினே"

(கலி - நெய்.12)

எனவரும்,

[முதல் ஏகாரம் அசைநிலை. இரண்டாம் ஏகாரம் ஈற்றசை.]

(14)

1. ஒரு நிலமே மயங்குமாறாயிற்று. உரிப்பொருள் மயக்குறுதல் என்னாது திணை மயக்குறுதலும் என்றார். ஓர் உரிப் பொருளோடு ஓர் உரிப்பொருள் மயங்குதலும், ஓர் உரிப்பொருள் நிற்றற்கு உரிய இடத்து ஓர் உரிப்பொருள் வந்து மயங்குதலும், இவ்வாறே காலம் மயங்குதலும் கருப்பொருள் மயங்குதலும் பெறுமென்றற்கு; திணையென்றது அம் மூன்றனையுங் கொண்டே நிற்றலின்.

2.(பாடம்) 2. பருவத்தாற்.