இதுவுமது. முன்னிலைப் புறமொழியாகக் கூறுஞ் சொல் எல்லா வாயில்கட்கும் உரிய; பின்னிலை முயலுங்கால் தோன்றும் என்றவாறு. முன்னிலைப் புறமொழியாவது முன்னிலையாக நிற்பாரைக் குறித்துப் பிறனைக் கூறுமாறுபோலக் கூறுதல். "உண்கடன் வழிமொழிந் திரக்குங்கால் முகனுந்தாங் கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே றாகுதல் பண்டுமிவ் வுலகத் தியற்கை". (கலித். 22) என்றவழி அவ்வுரை தலைமகனை நோக்கியவாறு காண்க.(26)
|