பொருளியல்

225இறைச்சி1 தானே உரிப்புறத்2 ததுவே.

என் - எனின். இறைச்சிப் பொருளாமா றுணர்த்திற்று.

இறைச்சிப் பொருளென்பது உரிப்பொருளின் புறத்தாகித் தோன்றும் பொருள் என்றவாறு.

அஃதாவது கருப்பொருளாகிய நாட்டிற்கும் ஊர்க்குந் துறைக்கும் அடையாகி வருவது.

"நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே".

(குறுந். 3)

என்றவழி நாட்டிற்கு அடையாகி வந்த குறிஞ்சிப்பூவுந் தேனும் இறைச்சிப் பொருள் என்று கொள்க.
(33)

1. இறைச்சிதானே-கருப்பொருட்கு நேயந்தான், பொருட் புறத்ததுவே - கூறவேண்டுவதோர் பொருளின் புறத்தே புலப்பட்டு அதற்கு உபகாரப்படும் பொருட்டன்மையுடையதாம். (தொல். பொருள். 229. நச்சி.)

2. பொருட்புறத்.