செய்யுளியல்

366நிரைமுதல் வெண்சீர் வந்துநிரை தட்டல்1
வரைநிலை இன்றே அவ்வடிக் கென்ப.
என்-னின். கலித்தளையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

மேற்சொல்லப்பட்ட அடி கலித்தளை தட்ட வழியே கொள்ளப்படுவது என உணர்த்தியவாறாம்.வெண்பா வுரிச்சீர் நிற்ப நிரைமுதல் வெண்சீர் வந்து அதன்கண் நிரையாய்த் தளைத்தல் கலியடிக்கு வரைநிலையில்லை என்றவாறு.

'நிரைதட்டல்' என்றதனால் பிறிதாகிவருஞ் சீர் முதலாகிய நிரையோடு தளைப்பினுங் கலித்தளையாம் எனக்கொள்க.

நிரைமுதல் வெண்சீர் என்பது உய்த்துணர்ந்து கொள்ளப்பட்டது.உதாரணம் மேற்காட்டிய அடிகளுட் காண்க.

(55)

1. (பாடம்) தட்பினும்.