செய்யுளியல்

398அஃதொழித் தொன்றின் எதுகை ஆகும்.

என்-னின் எதுகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

அடிதொறும் முதலெழுத்தொன்றாமல் இரண்டாமெழுத்து ஒன்றின் எதுகை யாகும் என்றவாறு.

அஃதேல் முதலெழுத்தும் ஒன்றி இரண்டாமெழுத்தும் ஒன்றில்யாதாகு மெனின். முந்துற்ற மோனையாற் பெயரிட்டு வழங்கப்படும் என்க.

உதாரணம்

" அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையாற்
கடியவே கனங்குழா அய் காடென்றார் அக்காட்டுள்
துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவும் உரைத்தனரே."

(கலித். 11)
எனவரும்.
(87)