இது, கண்டோர் கூற்று நிகழும் இடன் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்டலும், ஊரது சார்பும், செல்லும் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும் என்பது, காலமும் நெறியும் அச்சம் வருமாறு தோன்றி வழுவுதலினாகிய குற்றம் காட்டலும் ஊரது அணிமையும் செல்லும் தேயத்தின் சேய்மையும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய பக்கத்தினும் என்றவாறு. உதாரணம்"எம்ஊர் அல்லது ஊர்நணித்து இல்லை வெம்முரண் செல்வன் கதிரும் ஊழ்த்தனன் சேந்தனை சென்மோ பூந்தார் மார்ப இளையள் மெல்லியள் மடந்தை அரிய சேய பெருங்கல் ஆறே " (சிற்றட்டகம்) எனவரும்."புணர்ந்தோர் பாங்கில் புணர்ந்த நெஞ்சமொடு அழிந்துஎதிர் கூறி விடுப்பினும் என்பது, புணர்ந்து செல்கின்றோர் பக்கத்து விரும்பின நெஞ்சத்தோடு மனன் அழிந்து எதிர்மொழி கூறி விடுத்தற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம் "அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத்து ஒலிவல் ஈந்தின் உலவை யங்காட்டு3 ஆறுசெல் மாக்கள் சென்னி எறிந்த செம்மறுத் தலைய நெய்த்தோர் வாய வல்லியம் பெருந்தலைக் குருளை மாலை மரல்நோக்கும் 4இண்டிவர் ஈங்கைய சுரனே வையெயிற்று ஐயள் மடந்தை முன்னுற்று எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளங் காலொடு பட்ட மாரி மால்வரை மிளிர்க்கும் உருமினுங் கொடிதே" (நற் -2) எனவரும். ஆங்கு அத் தாய்நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினும் என்பது, ஆண்டுப் பின் சென்ற அச் செவிலித்தாயது நிலைமையைக் கண்டு போகாமல் தடுத்தற்கண்ணும் போகவிடுத்தற் கண்ணும் என்றவாறு. உதாரணம்"அறம்புரி அருமறை நவின்ற நாவின் திறம்புரி கொள்கை அந்தணிர் தொழுவலென்று ஒண்டொடி வினவும் பேதையம் பெண்டே கண்டனெம் அம்ம சுரத்திடை அவளே இன்றுணை இனிதுபா ராட்டக் குன்றுயர் பிறங்கல் மலையிறந் தோளே " (ஐங்குறு - 387) என வரும். இது செவிலி வினாஅயவழிக் கூறியது." பெயர்ந்து போகுதி பெருமூ தாட்டி சிலம்புகெழு சீறடி சிவப்ப இலங்குவேற் காளையோ டிறந்தனள் சுரனே. " இது தடுத்தற்கண் வந்தது. "நெருப்பவிர் கனலி உருப்புசினந் தணியக் கருங்கால் யாத்து வரிநிழல் இரீஇச் சிறுவகை யிறப்பிற் காண்குவை செறிதொடிப் பொன்னேர் மேனி மடந்தையொடு வென்வேல் விடலை முன்னிய சுரனே." (ஐங்குறு - 388) இது விடுத்தற்கண் வந்தது,சேய்நிலைக்கு அகன்றோர் செலவினும் வரவினும் என்பது, சேய்மைக்கண் அகன்றோர் செல்லுத்தற்கண்ணும் வரவின்கண்ணும் என்றவாறு. உதாரணம்" வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர் யார்கொல் அளியர் தாமே ஆரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்நெற் றொலிக்கும் வேய்பயில் அழுவம் முன்னி யோரே " (குறுந் - 7) என வரும்.'கண்டோர் மொழிதல் கண்டது என்ப' என்பது, இவ்விவ்விடங்களில் கண்டோர் சொல்லுதல் வழக்கிற் காணப்பட்டதென்ப என்றவாறு. (43)
1. கிளவியும் 2. நெஞ்சமோடு. (பாடம்) 3. அந்நாட் 4. மரனோக்கு.
|