செய்யுளியல்

475பாட்டிடை வைத்த குறிப்பி னானும்1
பாவின் றெழுந்த கிளவி யானும்
பொருள்மர பில்லாப்2 பொய்ம்மொழி யானும்
பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும்என்று
உரைவகை நடையே நான்கென மொழிப.
என் - னின். உரை பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

பாட்டிடைவைத்த குறிப்பாவது - பாட்டினிடை வைக்கப்பட்ட பொருட்குறிப்பினானும் உரையாம் என்றவாறு.

பலசொல் தொடர்ந்து பொருள்காட்டுவனவற்றுள் ஓசைதழீ இயவற்றைப் பாட்டென்றார். ஓசையின்றிச் செய்யுட் டன்மைத்தாய் வருவது நூலெனப்பட்டது.

அவ்வகையுமன்றி வரும் உரைத்திறன் ஈண்டு உரையெனப்பட்டது.

அவையாமாறு:

"ஊர்க்கால் நிவந்த பொதும்பருள் " என்னுங் குறிஞ்சிக்கலியுள்,

" இவளைச் சொல்லாடிக் காண்பேன் தகைத்து. "

(கலித்.)

என்றது உரைக்குறிப்பு.

`ஒரூஉ, கொடியியல் நல்லார்'

என்னும் மருதக்கலியுள்.

"கடியர்3 தமக் கியார்சொலத் தக்கார்4 மற்று ".

(கலித்.)

என்றது மது.

சிலப்பதிகாரத்து ஆய்ச்சியர் குரவையுள்.

"கயலெழுதிய இமயநெற்றியின்
அயலெழுதிய புலியும் வில்லும்
நாவலந்தண் பொழின்மன்னர்
ஏவல்கேட்பப் பார்அரசாண்ட
மாலைவெண்குடைப் பாண்டியன் கோயிலுட்
காலைமுரசம் கனைகுரல் இயம்புமாதலின்
நெய்ம்முறை நமக்கின்றாகுமென
ஐயைதன் மகளைக்கூஉய்க்
கடைகயிறு மத்துங்கொண்
டிடைமுதுமகள் வந்துதோன்றுமன். "

(சிலப், ஆய்ச்சியர் குரவை.)

என்றது மது.

பாவின்றெழுந்த கிளவியானும் என்பது - பாக்களை யொழியத் தோற்றிய சொல்வகையானும் உரையாம் என்றவாறு.

அஃதாவது, வழக்கின்கண் ஒரு பொருளைக் குறித்து வினவுவாருஞ் செப்புவாருங் கூறுங் கூற்று.

அதுவும் இலக்கணம் பிழையாமற் கூறவேண்டுதலானும் ஒரு பொருளைக் குறித்துச் செய்யப்படுதலானுஞ் செய்யுளாம். இதனைக்குறித்தன்றே `செப்பும் வினாவும் வழா அலோம்பல் ' (தொல். கிளவியாக்கம்) என்பது முதலாகக் கூறப்பட்ட இலக்கணமெல்லாம் என்று கொள்க.

பொருள் மரபில்லாப் பொய்ம் மொழியானும் என்பது - பொருளியல்பில்லாப் பொய்மொழியானும் உரைவரும் என்றவாறு.

பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் என்பது - பொருளைப் பொருந்திய நகைவழிமொழியாய் வருகின்றது என்றவாறு.

நகைமொழியாவது - மேற்சொல்லப்பட்ட உரை பொருந்தாதென இகழ்ந்து கூறுதல். அவ்விகழ்ச்சியின் பின்னர்ப் பொருளுணர்த்தும் உரை பிறக்குமாதலின் பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் உரைவருமென்றார்.

என்று உரைவகை நடையே நான்கென மொழிப என்பது இவ்வகையினானவுரை நான்குவகைப்படும் என்றவாறு.

(163)

1. `பாட்டிடை வைத்த குறிப்பினானும் ' என்பது ஒரு பாட்டு இடையிடை கொண்டு நிற்குங் குறிப்பினான் வருவன வெனப்படும்; என்னை ? பாட்டுவருவது சிறுபான்மையாகலின். அவை தகடூர் யாத்திரைபோல்வன. (தொல். பொருள்.485. பேரா.)

2. (பாடம்)பொருளொடு புணராப்
3. கடிய.
4. தக்கரா.