அகத்திணை இயல்

52ஏனை உவமம் தானுணர் வகைத்தே.

இஃது, ஏனை உவமம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) ஏனை உவமம் தான் உணர் வகைத்து - உள்ளுறை யொழிந்த உவமம் தான் உணரும் வகையான் வரும்.

தான் உணரும் வகையாவது, வண்ணத்தானாதல் வடிவானாதல் பயனானாதல் தொழிலானாதல் உவமிக்கப்படும் பொருளொடு எடுத்துக் கூறுதல். [ஏகாரம் ஈற்றசை]

அது வருமாறு உவமவியலுட் கூறப்படும்.

இதனால் திணை உணருமாறு;

"வளமலர் ததைந்த வண்டுபடு நறும்பொழில்
முளைநிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல்
குறிநீ செய்தனை யென்ப அலரே
குரவ நீள்சினை உறையும்
பருவ மாக்குயிற் கௌவையிற் பெரிதே."

(ஐங்குறு. 369)

இஃது ஊடற் பொருண்மைத்தேனும், வேனிற்காலத்து நிகழும் குயிற்குரலை உவமித்தலிற் பாலைத்திணையாயிற்று. குரவம் - குராமரம்.

"உரைத்திசிற் றோழியது புரைத்தோ அன்றே
துருக்கங் கமழும் மென்தோள்
துறப்ப என்றி இறீஇயர்என் உயிரே."

(சிற்றட்டகம்)

இது துருக்கம் என உவமை கூறுதலாற் குறிஞ்சியாயிற்று.

(52)