இஃது, ஏனை உவமம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஏனை உவமம் தான் உணர் வகைத்து - உள்ளுறை யொழிந்த உவமம் தான் உணரும் வகையான் வரும். தான் உணரும் வகையாவது, வண்ணத்தானாதல் வடிவானாதல் பயனானாதல் தொழிலானாதல் உவமிக்கப்படும் பொருளொடு எடுத்துக் கூறுதல். [ஏகாரம் ஈற்றசை] அது வருமாறு உவமவியலுட் கூறப்படும். இதனால் திணை உணருமாறு; "வளமலர் ததைந்த வண்டுபடு நறும்பொழில் முளைநிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல் குறிநீ செய்தனை யென்ப அலரே குரவ நீள்சினை உறையும் பருவ மாக்குயிற் கௌவையிற் பெரிதே." (ஐங்குறு. 369) இஃது ஊடற் பொருண்மைத்தேனும், வேனிற்காலத்து நிகழும் குயிற்குரலை உவமித்தலிற் பாலைத்திணையாயிற்று. குரவம் - குராமரம். "உரைத்திசிற் றோழியது புரைத்தோ அன்றே துருக்கங் கமழும் மென்தோள் துறப்ப என்றி இறீஇயர்என் உயிரே." (சிற்றட்டகம்) இது துருக்கம் என உவமை கூறுதலாற் குறிஞ்சியாயிற்று. (52)
|