செய்யுளியல்

537செய்யுள் மொழியால் சீர்புனைந் தியாப்பின்
அவ்வகை தானே அழகெனப் படுமே.1
என் - னின். நிறுத்தமுறையானே அழகென்னும் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று.

செய்யுட்குரிய சொல்லினாற் சீரைப்புணர்த்துத் தொடுப்பின் அவ்வகைப்பட்ட செய்யுள் அழகு எனப்படும் என்றவாறு.


உதாரணம்

"துணியிரும் பரப்பகங் குறைய வாங்கி
மணிகிளர் அடுக்கல் முற்றிய எழிலி
காலொடு மயங்கிய கனையிருள் நடுநாள்
யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப.
நெடுவரை மருங்கிற் பாம்பென இழிதருங்
கடுவரற் கலுழி நீந்தி
வல்லியம் வழங்குங் கல்லதர் நெறியே."

(யாப்.வி.ப.377)

எனவரும்.
(224)

1.அழகு செய்யுள்மொழி என்றது என்னை எனின் அது பெரும் பான்மையாற் கூறினான்.அம்மொழியானே இடைச்சங்கத்தாரும் கடைச் சங்கத்தாரும் இவ்விலக்கணத்தாற் செய்யுள் செய்தார்.இக்காலத்துச் செய்யினும் விலக்கின்றென்பது மற்று மூவடி முப்பது முதலாயின அம்மை எனப்படுமோ அழகெனப்படுமோ எனின் தாயபனுவல் இன்மையின் அம்மை எனப்படா என்பது.(தொல், பொருள்.548. பேரா.)