இதுவும், உழிஞையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம் முதலாகச் சொல்லப்பட்டன உழிஞைத் துறையாம். கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும் - பகைவரது தேயத்தைக் கொள்ளக் குறித்த கொற்றமும். [கொள்ளார் தன்னை இறையெனக் கொள்ளாரும் தன் ஆணையைக் கொள்ளாரும்;3] உதாரணம்"ஆனா ஈகை அடுபோர் அண்ணல்நின் யானையும் மலையின் தோன்றும் பெருமநின் தானையுங் கடலென முழங்கும் கூர்நுனை4 வேலும் மின்னின் விளங்கும் உலகத்து5 அரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின் புரைதீர்ந்து அன்றது புதுவதோ அன்றே தண்புனல் பூசல் அல்லது நொந்து களைக வாழி வளவ என்றுநின் முனைதரு பூசல் கனவினும் அறியாது புலிபுறங் காக்குங் குருளை போல மெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப் பெருவிறல் யாணர்த் தாகி அரிநர் கீழ்மடைக் கொண்ட வாளையும் உழவர் படைமிளிர்ந் திட்ட யாமையும் அறைநர் கரும்பில் கொண்டதேனும் பெருந்துறை நீர்தரு மகளிர் குற்ற குவளையும் வன்புலக் கேளிர்க்கு வருவிருந்து அயரும்6 மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி நிலவரை இழிதரும் பல்யாறு போலப் புலவர் எல்லாம் நின்நோக் கினரே நீயே, மருந்தில் கணிச்சி வருந்தவட் டித்துக் கூற்று வெகுண்டு அன்ன முன்பொடு மாற்றுஇரு வேந்தர் மண்நோக்கினையே." (புறம்.42) உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும் - நினைத்தது முடிக்கலாகும் வேந்தனது சிறப்பும். உதாரணம்"அடுநை ஆயினும் விடுநை ஆயினும் நீ அளந்து அறிதி7நின் புரைமை வார்கோல் செறியரிச் சிலம்பில் குறுந்தொடி மகளிர் பொலஞ்செய் கழங்கின் தெற்றி ஆடும் தண் ஆன் பொருநை வெண்மணல் சிதையக் கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய் நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும் கடிமரந் தடியும் ஒசை தன்னூர் நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப ஆங்கினிது இருந்த வேந்தனோடு ஈங்குநின் சிலைத்தார் முரசம் கறங்க மலைத்தனை என்பது நாணுத்தகவு உடைத்தே." (புறம்.36) இன்னும் 'உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்' என்றதனால் அகத்தரசனை அழித்தது கூறலும் கொள்க. உதாரணம்"இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி நிலமிசைப் புரளும் கையவெய் துயிர்த்து அலமரல் யானை உருமென முழங்கவும் பாலில் குழவி அலறவும் மகளிர் பூவில் வறுந்தலை முடிப்பவும் நீரில் வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும் இன்னாது அம்ம ஈங்கினிது8 இருத்தல் துன்னருந் துப்பின் வயமான் தோன்றல் அறவை ஆயின் நினதெனத் திறத்தல் மறவை ஆயின் போரொடு திறத்தல் அறவையும் மறவையும் அல்லை யாகத்9 திறவா தடைத்த திண்ணிலைக் கதவின் நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் நாணுத்தகவு உடைத்திது காணுங் காலே." (புறம்.44) தொல் எயிற்று இவர்தலும்10 - தொல் எயிலின்கண் பரத்தலும். உதாரணம்"புல்லார் புகழொடு போக்கொழியப் பொங்கினனாய்ப் பல்லார் மருளப் படைபரப்பி - ஒல்லார் நிறத்திறுத்த வாள்தானை நேரார் மதிலின் புறத்திறுத்தான் பூங்கழலி னான்." (புறப்.உழிஞை.10) தோலது பெருக்கமும் - தோற்படையினது பெருமையும். உதாரணம்"நின்ற புகழொழிய நில்லா உயிரோம்பி இன்று நாம் வைகல் இழிவாகும் - வென்றொளிரும் பாண்டில் நிரைதோல் பணியார் பகைஅரணம் வேண்டில் எளிதென்றான் வேந்து." (புறப்.உழிஞை.12) அகத்தோன் செல்வமும் - அகத்தரசனது செல்வமும். உதாரணம்"அளிதோ தானே பாரியது பறம்பே நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும் உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே ஒன்றே, சிறியிலை11வெதிரின் நெல்விளை யும்மே இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம் ஊழ்க் கும்மே மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே நான்கே, அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே வான்கண் அற்றவன் மலையே வானத்து மீன்கண் அற்றதன் சுனையே ஆங்கு மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும் தாளில் கொள்ளலிர் வாளில் தாரலன். யானறி குவனது கொள்ளும் ஆறே சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி விரைஒலி கூந்தல்நும் விறலியர் பின்வர ஆடினிர் பாடினிர் செலினே நாடும் குன்றும் ஒருங்கீ யும்மே." (புறம்.109) அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும் - அன்றியும் பகைத்த புறத்தரசன் வருந்திய பக்கமும்12. உதாரணம்"நஞ்சுடை வாலெயிற்று ஐந்தலை சுமந்த வேக வெந்திறல் நாகம் புக்கென விசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப் பெருமலை விடரகத் துரும்எறிந் தாங்குப் புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்வேல் சினங்கெழு தானைச் செம்பியன் மருக கராஅங் கலித்த குண்டுகண் அகழி இடங்கருங் குட்டத் துடன்தொக் கோடி யாமங் கொள்பவர் கடர்நிழற் கதூஉங் கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச் செம்புறழ் புரிசைச் செம்மல் மூதூர் வம்பணி யானை வேந்தகத்து உண்மையின் நல்லஎன் னாது சிதைத்தல் வல்லையால் நெடுந்தகை செருவத் தானே." (புறம்.37) திறற்பட ஒருதான் மண்டிய குறுமையும் - வலிபட ஒரு தானாகிச் சென்ற குற்றுழிஞையும். உதாரணம்"கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டுக் குடுமி களைந்தநுதல் வேம்பின்13ஒண்டளிர் நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மலைந்து குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன் யார்கொல் வாழ்க அவன்14 கண்ணி தார்பூண்டு தாலி களைந்தன்றும் இலனே பால்விட்டு அயினியும் இன்றயின் றனனே வயின்வயின் உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை அழுந்தப் பற்றி அகல்விசும்பு ஆர்ப்பெழக் கவிழ்ந்துநிலஞ் சேர அட்டதை மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே." (புறம்.77) உடன்றோர் வருபகை பேணார் ஆரெயில்15 - வெகுண்டு வருகின்ற படையைப் பேணார் ஆரெயில் உழிஞையும். உதாரணம்"மயிற்கணத்து அன்னார் மகிழ்தேறல் ஊட்டக் கயிற்கழலார் கண்கனல் பூப்ப - எயிற்கண்ணார் வீயப்போர் செய்தாலும் வென்றி அரிதரோ மாயப்போர் மன்னன் மதில்." (புறப்.உழிஞை.11) உளப்பட சொல்லப்பட்ட நாலிரு வகைத்து 16 - உட்படக் கூறப்பட்ட எட்டு வகைத்து. பதினெட்டு, இருபத்தொன்பது என்பார் மதம் விலக்கியமை தோன்றப் பெயர்த்துந் தொகை கூறினார். இது கூறியது கூறலன்று; தொகை. (10)
(பாடம்) 1. தொல் எயிற்கு இவர்தலும் தோலின். 2.திறப்பட 3.தன்னை இகழ்ந்தோரையும் தான் இகழ்ந்தோரையும் கொள்ளார் என்ப. (நச்சி.) (பாடம்) 4. கடலின் ஒலிக்கும் வைந்நுதி. 5. ஞாலத்து. (பாடம்) 6. அமரும். 7. தறிவை. (பாடம்) 8. ஈண்டினி. 9.யாகித். 10.இவர்தலும் விருப்பஞ் செய்தலும். (நச்சி.). (பாடம்) 11. செறியிலை. 11. அணங்கிய பக்கமும் - வருத்திய கூறலும்.(நச்சி.) (பாடம்) 12. களைந்த வேம்பின், 13. வாழகவண், 14. வாரெயில். 15.முற்கூரிய தொகையே யன்றி ஈண்டுந் தொகை கூறினார், அந்நாலிரண்டுமேயன்றி அவை போல்வனவும் நாலிரண்டு துறை தோன்றும் என்றற்கு. அவை புறத்து வேந்தன் தன் துணையாகிய அரசனையாயினும். தன் படைத் தலைவரையாயினும் ஏவி அகத்து வேந்தற்குத் துணையாகிய அரசரது முழுமுதலரண் முற்றலும் அவன் அதனைக் காவல் கோடலும் நிகழ்ந்த இடத்தும் இவ்விரு நான்கு வகையும் இருவர்க்கும் உளவாதலாம்.(தொல். புறம். - 67)(நச்சி.)
|