மெய்ப்பாட்டியல்

251புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை1 சாலா மருட்கை நான்கே .

என்-னின். இது மருட்கை யாமாறும் அதன் பொருண்மையும் உணர்த்துதல் நுதலிற்று.

புதுமை முதலாகச் சொல்லப்பட்ட நான்கினானும் மருட்கைபிறக்கும் என்றவாறு.

மதிமை சாலா மருட்கை என்றமையால் அறவுடையார் இப்பொருட் கண் வியவார் என்று கொள்க .

புதுமையாவது - யாதொன்றானும் எவ்விடத்தினும் எக்காலத்தினுந் தோன்றாததோர் பொருள்தோன்றியவழி வியத்தல் , அது கந்திருவர் அந்தரம் போவதுகண்டு வியத்தல் போல்வன .

பெருமை யென்பது - பண்டு கண்ட பொருள்கள் போலாத பொருள்கள் அவ்வளவிற் பெருத்தன கண்டு வியத்தல் . அவை மலையும் யானையும் செல்வமும் முன்கண்ட அளவின் மிக்கன கண்டவழி வியப்பு வரும் .

சிறுமை என்பது - பிறவும் நுண்ணியன கண்டு வியத்தல் . அது ' கடுகின்கட் பல துளை ' போல்வன .

ஆக்கம் என்பது - ஒன்றன் பரிணாமங்கண்டு வியத்தல் . அது தன்னளவின்றி நன்னிலஞ் சார்பாகத் தோன்று மரமுதலாயின . ஆகியவழி வியத்தலும் , நல்கூர்ந்தான் யாதொன்று மிலாதான் ஆக்கமுற்றானாயின் , அதற்குக் காரண முணராதான் அது கண்டு வியத்தலும் , இளையான் வீரங் கண்டு வியத்தலுமாம் . பிறவும் உலகத்து வியக்கத்தகுவன எல்லாம் இவற்றின்பாற் படுத்திக் கொள்க .

' இருந்தவேந்தன் ' என்னும் அகப்பாட்டினுள் ,

".............. பெருந்தேர்யானும்
ஏறியதறிந்தன் றல்லது வந்த வாறு2
நனியறிந்தன்றோ இலனே தாஅய்3
முயற்பறழ் உகளும் முல்லையம் புறவிற்
கவைக்கதிர் வரகின் சீறூர் ஆங்கண்
மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ
இழிமின் என்ற4 நின் மொழிமருண் டிசினே . "

(அகம். 384)
என்றது வியந்தவாறு .

" பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்
ஒருமுலை இழந்தாளோர் திருமா பத்தினிக்
கமரர்க் கரசன் தமர்வந் தீண்டியவள்
காதற் கொழுநனைக் காட்டி அவளொடெம்5
கட் புலங் காண விட்புலம் போயது6
இறும்பூது போலும் அஃதறிந்தருள்7 நீயென . "

(சிலப்.பதிகம்)
என்றது புதுமை

(7)


1. ' மதிமை சாலா மருட்கை ' யென்பது அறிவினை உலக வழக்கினுள் நின்றவாறு நில்லாமல் திரிந்து வேறுபடுத்து வருவதென்றவாறு (தொல், பொருள், .. பேரா)
2. (பாடம்)ஏறியதல்லது வந்தவாறு
3. தாவும்
4. இழிமின் இல் என்ற
5. அவளொடு
6. போகியது
7. போலும் அஃதறிந்தருள்