மெய்ப்பாட்டியல்

267முட்டுவயிற் கழறல் முனிவுமெய்ந் நிறுத்தல்
அச்சத்தின் அகறல் அவன்புணர்வு மறுத்தல்
தூதுமுனி வின்மை துஞ்சிச் சேர்தல்
காதல் கைம்மிகல் கட்டுரை யின்மையென்
1றாயிரு நான்கே அழிவில் கூட்டம்.

என் - னின் மேற் கூறப்பட்டன வெல்லாம் மனனழிவு நிகழ்ந்தவழி நிகழ்வனவாதலின். இவை மனன் அழியாதவழி நிகழ்வன என உணர்த்துதல் நுதலிற்று.

முட்டுவயிற் கழறல் என்பது - களவு இடையீடுபட்டுழியதற்கு வருந்தாது இவ்வாறாகி நின்றதென அவனைக் கழறியுரைத்தல் என்றவாறு.

முனிவு மெய்ந்நிறுத்தல் என்பது - வெறுப்பினைப் பிறர்க்குப் புலனாகாமல் மெய்யின் கண்ணே நிறுத்தல்.

அச்சத்தி னகறல் என்பது - இவ்வொழுக்கம் பிறர்க்குப் புலனாம் எனக் கூட்டத்தின் அகன்றொழுகல்.

அவன்புணர்வு மறுத்தல் என்பது - இது தலைமகன் புணர்ச்சிக்கண் வாராக்காலத்துத்தானும் மனனழியாது நிற்கும் நிலை.

தூதுமுனி வின்மை என்பது - தூதுவிட்ட வழி வெறாமை.

துஞ்சிச் சேர்தல் என்பது - கவற்சியான் உறங்காமையன்றி யுரிமைபூண்டமையான் உறக்கம் நிகழ்தல்.

காதல் கைம்மிகல் என்பது - அவ்வழியும் அன்பின்மையின்றிக் காதல் கைமிக்கு வருதல்.

கட்டுரை யின்மை என்பது - கூற்று நிகழ்த்துதலன்றியுள்ளக் கருத்தினை மறைத்தமர்ந்திருத்தல்.

இவை நடுவணைந்திணைக் குரிய. இவற்றிற்குச் செய்யுள் களவியலுட் காட்டப்பட்டது. வரைந்தோதாமையான்.

(28)


1. என்று ஆயிரு நான்கே அழிவில் கூட்டம் - என்றெண்ணப்பட்ட மெய்ப்பா டெட்டும் பின் அழியாத கூட்டத்திற்கு ஏதுவாம் என்றவாறு. அஃதாவது வரைந்தெய்துங் கூட்டம் என உணர்க. (தொல். பொருள்.271.பேரா.)