மெய்ப்பாட்டியல்

271கண்ணினுஞ்1 செவியினுந் திண்ணிதின் உணரும்
உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின்
நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே .

என்-னின் . இது அதிகாரப்புறனடை .

ஈண்டுச் சொல்லப்பட்ட நல்ல நயத்தினையுடைய மெய்ப்பாடெல்லாம் ஆராயுங்காற் கண்ணானுஞ் செவியானும் விளங்க உணரும் அறிவுடைமாந்தர்க் கல்லது கருதல் அரிது என்றவாறு .

(27)


1 . மனத்து நிகழ்ந்த மெய்ப்பாட்டினைக் கண்ணானும் செவியானும் உணர்தல் என்பது என்னை எனின் , மெய்ப்பாடு பிறந்தவழி உள்ளம்பற்றி முகம் வேறுபடுதலும் உரைவேறுபடுதலும் உடைமையின் அவை கண்ணானும் செவியானும் உணர்ந்து கோடல் அவ்வத்துறை போயினாரது ஆற்றலென்பது கருத்து . ( தொல் . பொருள் . 275 . பேரா . )

மெய்ப்பாட்டியல் முற்றிற்று