உவமையியல்

275சிறப்பே1 நலனே காதல் வலியோடு
அந்நாற் பண்பும் நிலைக்கள மென்ப.

என்-னின், இதுவுமது.

மேற்சொல்லப்பட்ட உவமை தம்மின் உயர்ந்தவற்றோடு உவமிக்கப்பட்டனவேனும், சிறப்பாதல் நலனாதல் காதலாதல் வலியாதல் நிலைக்களனாக வரும் என்றவாறு. இவையிற்றைப்பற்றித் தோன்று மென்பது கருத்து.

"முரசுமுழங்கு தானை மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போலப்
பாடல் பற்றிய பயனுடை எழாஅல்"

(பொருநராற்.54-6)

எனச் சிறப்புப் பற்றி வந்தது.

"ஓவத் தன்ன வியனுடை வரைப்பின்"

(புறம்.251)

என்பது நலம்பற்றி வந்தது.

"கண்போல்வான் ஒருவ னுளன்"

என்பது காதல்பற்றி வந்தது.

"அரிமான் அன்ன அணங்குடைத் துப்பின்"

(பட்டினப்.218)

என்பது வலிபற்றி வந்தது.

பிறவு மிவ்வாறே படுத்துநோக்கிக் கண்டுகொள்க.

(4)


1.சிறப் பென்பது , உலகத்துள் இயல்புவகையானன்றி விகாரவகையாற் பெறும் சிறப்பு . காதல் என்பது அந்நலனும் ( அழகும் ) வலியும் இல்வழியும் உண்டாக்கி உரைப்பது . இவற்றை நிலைக்களம் எனவே இவைபற்றாது உவமம் பிறவாதென்பதாம் .

உயர்ந்த பொருளின் இழிந்த தெனப்பட்ட பொருள் யாதானும் இயைபில்லதொன்று கூறலாகாதனவும் , உவமையொடு முழுதும் ஒவ்வாமை மாத்திரையாகி அதனோடொக்கும் பொருண்மை உவமிக்கப்படும் பொருட்கண்ணும் உளவாகல் வேண்டும் எனவும் கூறி அவைதாமும் பிறர் கொடுப்பப் பெறுவனவும் , ஒரு பொருட்கண் தோன்றிய நன்மை பற்றியவும் , காதல் மிகுதியால் உளவாகக்கொண்டு உரைப்பனவும் , தன் தன்மையால் உளவாயின வலிபற்றினவும் என நான்காம் என்றவாறு . இவற்றுக்கெல்லாம் வினை பயன் மெய் உரு என்னும் நான்கும் தலைப்பெய்யும் என்பது .(தொல் . பொருள் . 279 . பேரா )