உவமையியல்

280பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினும்
மருளறு சிறப்பினஃ1 துவம மாகும்.

என்-னின். இதுவும் உவமைக்கண் வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

உவமிக்கும் பொருடன்னை யுவமமாக்கிக் கூறினும் மயக்கமற்ற சிறப்பு நிலைமையான் எய்தும் உவமையாகு மென்றவாறு.

ஒருசாராசிரியர் ரூபகம் சொல்லப்பட்டது உவமைபற்றி வருதலின் இஃது உவமையின் பாகுபாடு என்பது இவ்வாசிரியர் கருத்து.

"இரும்புமுகஞ் செறித்த ஏந்தெழில் மருப்பிற்
கருங்கை2யானை கொண்மூ வாக
நீண்மொழி மறவ ரெறிவன ருயர்த்த
வாண்மின் னாக வயங்குகடிப் பமைந்த
குருதிப் பல்லிய முரசுமுழக் காக
அரசராப் பனிக்கும்" அணங்குறு பொழுதின்
வெவ்விசைப் புரவி வீசுவளி யாக
விசைப்புறு வல்வில் வீங்குநாணுதைத்த
கனைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை
ஈரச் செறுவயிற் றேரேராக
விடியல் புக்கு நெடிய நீட்டிநின்
செருப்படை மிளிர்த்த திருத்துறு பைஞ்சால்
பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி
விழுத்தலை" சாய்த்த வெருவரு பைங்கூழ்ப்
பேஎ யெற்றிய பிணம்பிறங்கு பல்போர்க்
கானநரி யொடு கழுகுகளம் படுப்பப்
பூதங் காப்பப் பொருகளந் தழீஇப்
பாடுநர்க் கீந்த பீடுடை யாளன்."

(புறம் 369)

என வரும்.

"பாசடைப் பரப்பிற் பன்மல ரிடைநின்
றொருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை
அரச வன்னம் ஆங்கினி திருப்பக்
கரைநின் றாடும் ஒருமயில் தனக்குக்
கம்புட் சேவற் கனைகுரன் முழவாக்
கொம்பர் இருங்குயில் விளிப்பது காணாய்"

(மணிமே.4:8 :13)

என்பதும் அது. இவ்வாறு வருவனவெல்லாம் இச்சூத்திரத்தாற் கொள்க.

(9)


1. 'மருளறு சிறப்பின்' என்றதனான் அங்ஙனம் சிறப்பிக்குங்கால் மயக்கம் தீரச் சிறப்பித்தல் வேண்டும் . அஃது உலகினுள் உயர்ந்த தென்று ஒப்பமுடித்த பொருளினையும் சிறப்பித்தற்கு உவமம் செய்பவோ எனின் செய்யார் என்பது; என்னை? முகம் ஒக்கும் தாமரை என்றால் முகத்திற்கும் தாமரைக்கும் சிறப்புடைமை மயங்கிவாராது. பின்னும் முகத்திற்கே சிறப்பாம் என்பது கருத்து.(தொல்,பொருள்.281.பேரா.)

2. (பாடம்) பெருங்கை.

3.அரசர்ப் பணிக்கும்.

4.செவ்வியிற்

5.இருந்தலை.