செய்யுளியல்

இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின். செய்யுளியலென்னும் பெயர்த்து. செய்யுளிலக்கணம் உணர்த்தினமையாற் பெற்றபெயர். மேலுணர்த்தப்பட்ட பொருண்மை யெல்லாவற்றிற்கும் இஃதிடமாதலின் அவற்றின்பிற் கூறப்பட்டது.

310மாத்திரை யெழுத்தியல் அசைவகை எனாஅ
யாத்த சீரே அடியாப் பெனாஅ
மரபே தூக்கே தொடைவகை எனாஅ
நோக்கே பாவே அளவியல் எனாஅ
திணையே கைகோள்1 பொருள்வகை எனாஅ
கேட்போர் களனே காலவகை எனாஅ
பயனே மெய்ப்பா டெச்சவகை எனாஅ
முன்னம் பொருளே துறைவகை எனாஅ
மாட்டே வண்ணமோ டியாப்பியல் வகையின்
ஆறு தலையிட்ட அந்நா லைந்தும்
அம்மை அழகு தொன்மை தோலை
விருந்தே இயைபே புலனே இழைபெனாஅப்
பொருந்தக் கூறிய எட்டொடுந் தொகைஇ
நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென
வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே.

என்பது சூத்திரம்.

இதன் றலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், செய்யுளுறுப் பெல்லாந்2 தொகுத்துணர்த்துதல் நுதலிற்று.

மாத்திரை முதலாகச் சொல்லப்பட்ட முப்பத்து நான்குஞ் செய்யுட்கு உறுப்பென்றவாறு.

பிற்கூறிய எட்டும் மேற்கூறிய இருபத்தாறினோடும் ஒருநிகரன அன்மையின், வேறுதொகை கொடுக்கப்பட்டது. அவையாமாறு தத்தஞ் சூத்திரத்துட் காட்டுதும்.

(1)

1. (பாடம்)கூற்றுவகை.

2. முற்கூறிய எழுவகை ஒத்தும் வழக்கிற்கும் செய்யுட்கும் பொது என்பதூஉம், இது செய்யுட்கே உரித்தென்பதூஉம் பெற்றாம். மற்றிதனை யாப்பதிகாரம் என வேறோர் அதிகாரமாக்கி உரைப்பாரும் உளர். அங்ஙனம் கூறின் வழக்கதிகாரம் எனவும் வேறுவேண்டுமெனமறுக்க.அல்லதூஉம் எழுத்தும் சொல்லும் பொருளும் என மூன்றற்கு மூன்றதிகாரமாக்கி அதிகாரம் ஒன்றற்கு ஒன்பது ஒத்தாகத் தந்திரம் செய்ததனோடு மாறுகோளாம்.இதனை வேறு அதிகாரம் என்பார்க்கென்பது.(தொல்.பொருள்.313.பேரா)