புறத்திணை இயல்

60வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந்து ஓம்பல் மேவற்று ஆகும்.

இது, வெட்சித் திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) வேந்துவிடு முனைஞர் வேற்றுப் புலக்களவின் ஆ தந்து ஓம்பல் மேவற்று ஆகும் - வேந்தனால் விடப்பட்ட முனைஊரகத்துள்ளார் வேற்று நாட்டின்கண் களவினானே ஆவைக்கொண்டு பெயர்ந்து பாதுகாக்கும் மேவலை உடைத்து.

ஓம்புதலாவது, மீளாமல் காத்தல், புறப்பொருட் பாகுபாடாகிய பொருளினும் அறத்தினும் பொருள் தேடுதற்குரிய நால்வகை வருணத்தாரினும் சிறப்புடையார் அரசராதலானும், அவர்க்கு மாற்றரசர் பால் திறைகொண்ட பொருள் மிகவும் சிறந்ததாகலானும், அப்பொருள் எய்துங்கால் அவரைப் போரில் வென்று கோடல் வேண்டுதலானும், போர்க்கு முந்துற நிரைகோடல் சிறந்ததாகலானும், இப்பொருள் முன் கூறப்பட்டது.

பன்னிரு படலத்துள் "தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென்று, அன்ன இருவகைத்தே வெட்சி,"என் இரண்டு கூறுபடக் கூறினாராயினும், முன்வருகின்ற வஞ்சி, உழிஞை, தும்பை முதலாயின எடுத்துச்செலவு. எயில்காத்தல், போர்செய்தல் என்பன அரசர்மேல் இயன்று வருதலின் வேந்துறு தொழில் ஒழித்து, தன்னுறு தொழில் எனத் தன் நாட்டும் பிறர் நாட்டும் களவின் ஆன்நிரை கோடலின் இவர் அரசரது ஆணையை நீங்கினாராவர். ஆதலால், அவர் அவ்வாறு கூறல் மிகைபடக் கூறலாம். அதனால், பன்னிருபடலத்துள் வெட்சிப்படலம் தொல்காப்பியர் கூறினாரென்றால் பொருந்தாது. என்னை ?

"ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை
மெய்ப்படக் கிளந்த வகைய தாகி
ஈரைங் குற்றமும் இன்றி நேரிதின்
முப்பத் திருவகை உத்தியொடு புணரின்
நூலென மொழிப நுணங்குமொழிப் புலவர்."

(தொல்.மரபு - 100)

எனவும்,

"சிதைவெனப் படும் அவை வசையற நாடின்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
பொருளில் கூறல் மயங்கக் கூறல்
கேட்டோர்க் கின்னா யாப்பிற் றாதல்
பழித்த மொழியான் இழுக்கக் கூறல்
தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல்
என்ன வகையினும் மனங்கோள் இன்மை
அன்ன பிறவும் அவற்றுவிரி வாகும்"

(தொல்.மரபு - 110)

எனவும் கூறிய ஆசிரியர் தாமே மாறுகொளக்கூறல், குன்றக்கூறல், மிகைபடக்கூறல், பொருளிலகூறல், மயங்கக்கூறல், தன்னானொரு பொருள் கருதிக்கூறல் என்னும் குற்றம் பயப்பக் கூறினாரென வருமாகலான்.

(60)