புறத்திணை இயல்

61படையியங்கு அரவம் பாக்கத்து விரிச்சி
புடைகெடப் போகியசெலவே புடைகெட
ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம்
முற்றின் ஆகிய புறத்துஇறை முற்றிய
ஊர்கொலை ஆகோள் பூசல் மாற்றே
நோயின்று உய்த்தல் நுவல்வழித் 1தோற்றம்
தந்துநிறை பாதீடு உண்டாட்டுக் கொடையென
வந்த ஈரேழ் வகையிற்று ஆகும்.

இது, வெட்சித் துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) படையியங்கு அரவம் முதலாகக் கொடை ஈறாகச் சொல்லப்பட்ட பதினான்கு துறையை உடைத்து வெட்சித்திணை.

வெட்சியென்பது அதிகாரத்தான் வந்தது. படை இயங்குஅரவம் - (நிரைகோடல் கருதிப்) படையெழும் அரவம்.

உதாரணம்

"நெடிபடு கானத்து நீள்வேல் மறவர்
அடிபடுத் தாரதர் செல்வான் - துடிபடுத்து
வெட்சி மலைய விரவார், மணிநிரைக்
கட்சியுள் காரி யெழும்2"

(புறப்.வெட்சி . 3)

பாக்கத்து விரிச்சி - (குறித்த பொருளின் பயன் அறிதற்குப்) பாக்கத்துக்கண் நற்சொல் ஆய்தல்.

உதாரணம்

"எழுவணி சீறூர் இருள்மாலை முன்றில்
குழுவினங் கைகூப்பி நிற்பத் - தொழுவில்
குடக்கள்ளுக் கொண்டுவா என்றாள் குனிவில்
தடக்கையாய் வென்றி தரும்."

(புறப்.வெட்சி.4)

புடை கெடப் போகிய செலவு - பக்கம் கெடப் போகிய செலவு.

பக்கங் கெடுதலாவது, மாற்றரசர் பக்கத்தாராகித் தம்மாட்டு ஒற்றொடுநிற்பார் அறியாமல் போதல். பக்கத்திலுள்ளாரைப் பக்கம் என்றார்.

உதாரணம்

"கூற்றினத்து அன்னார் கொடுவில் இடனேந்திப்
பாற்றினம் பின்படர முன்படர்ந்து - ஏற்றினம்
நின்ற நிலைகருதி ஏகினார் நீள்கழைய
குன்றங் கொடுவில் லவர்."

(புறப்.வெட்சி.5)

புடை கெட ஒற்றின் ஆகிய வேயே - மாற்றரசர் பக்கத்துள்ளார் அறியாதவகை ஒற்றரால் ஆகிய ஒற்றுதலும்.

ஒற்று என்பது எவ்விடத்தும் வேண்டுமாயினும், ஆதிவிளக்காக இவ்வோத்தின் முதற்கண் வைத்தாரென்று கொள்க.

உதாரணம்

"நிலையும் நிரையும் நிரைப்புறத்து நின்ற
சிலையுஞ் செருமுனையுள் வைகி - இலைபுனைந்த
கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோய் சென்றறிந்து
நள்ளிருட்கண் வந்தார் நமர்."

(புறப். வெட்சி.6)

வேய் புறம் முற்றின் ஆகிய புறத்து இறை (அவ்வாறு) வேய்க்கப்பட்ட இடத்தின் புறத்தினைச் சூழ்தலான் ஆகிய புறத்திருக்கை.

'வேய்' என்பது ஆகுபெயராய் அவ்விடத்தின்மேல் நின்றது.

உதாரணம்

"உய்ந்தொழிவார் ஈங்கில்லை ஊழிக்கண் தீயேபோல்
முந்தமருள் ஏற்றார் முரண்முருங்கத் - தந்தமின்3
ஒற்றினான் ஒற்றி உரவோர் குறும்பினைச்
சுற்றினார் போகாமற் சூழ்ந்து."

(புறப்.வெட்சி.7)

முற்றிய ஊர்கொலை - (அவ்வாறு) சூழப்பட்ட ஊரை அழித்தல்.

உதாரணம்

"இகலே துணையா எரிதவழச் சீறிப்
பகலே அரிதென்னார் புக்குப் -பகலே
தொலைவில்லார்4 வீழத் தொடுகழல் ஆர்ப்பக்
கொலைவில்லார்5 கொண்டார் குறும்பு.

(புறப்.வெட்சி.8)

ஆ கோள் - (ஆண்டுளதாகிய) நிரையைக் கோடல்.

உதாரணம்

"கொடுவரி கூடிக் குழூஉக்கொண் டனைத்தால்
நெடுவரை நீள்வேய் நரலும் - நடுவூர்க்
கணநிரை கைக்கொண்டு கையகலார் நின்ற
நிணநிரை வேலார் நிலை."

(புறப்.வெட்சி.9)

பூசல் மாற்று - (அவ்வாறு கொண்ட நிரையை மீட்டற்கு வந்தார் பொரும்) பூசல் மாற்றிப் பெயர்தல்.

உதாரணம்

"சூழ்ந்த நிரைபெயரச் சுற்றித் தலைக்கொண்டார்
வீழ்ந்தனர் வீழ்ந்தார் விடக்குணிய - தாழ்ந்த
குலவுக் கொடுஞ்சிலைக்கைக் கூற்றனையார் எய்த
புலவுக் கணைவழிபோய்ப் புள்."

(புறப்.வெட்சி.10)

நோய் இன்று உய்த்தல் - (அவ்வாறு கொண்ட நிரையை) வருந்தாமல் உய்த்தல்.

உதாரணம்

"செருப்பிடைச் சிறுபரல் அன்னன்6 கணைக்கால்
அவ்வயிற்று அகன்ற மார்பிற் பைங்கண்
குச்சின் நிரைத்தன்ன7 குரூஉமயிர் மோவாய்ச்
செவியிறந்து தாழ்தருங் கவுளன். வில்லோ
டியார்கொலோ அளியன் தானே தேரின்
ஊர்பெரிது இகந்தன்றும் இலனே அரணெனக்
காடுகைக் கொண்டன்றும் இலனே காலைப்
புல்லார் இனநிரை செல்புற நோக்கிக்
கையிற் சுட்டிப் பையென எண்ணிச்
சிலையின் மாற்றி யோனே அவைதாம்
மிகப்பல வாயினும் என்னாம் எனைத்தும்
வெண்கோள் தோன்றாக் குழிசியொடு
நாளுறை மத்தொலி கேளா தோனே."

(புறம்.257)

நுவல்வழித் தோற்றம் - தமர் கவன்று [சொல்லியவழித்] தோன்றுதல்.

உதாரணம்

"நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின்
பாசுவல் இட்ட புன்கால் பந்தர்ப்
புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்
ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்நின்று
நிரையொடு வரூஉம் என்னைக்
குழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே,"

(புறம்.262)

தந்து நிறை - (கொள்ளப்பட்ட நிரையைத்) தம்ஊரகத்துக் கொணர்ந்து நிறுத்தல்.

உதாரணம்

"தண்டா விருப்பினள் தன்னை தலைமலைந்த
வண்டார் கமழ்கண்ணி வாழ்கென்று - கண்டாள்
அணிநிரை வாள்முறுவல் அம்மா எயிற்றி
மணிநிரை மல்கிய மன்று."

(புறப்.வெட்சி.13)

பாதீடு - (அந்நிரையைக் ) கூறிடுதல்.

உதாரணம்

"ஒள்வாள் மலைந்தார்க்கும் உற்றாய்ந் துரைத்தார்க்கும்
புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும் - விள்வாரை
மாறட்ட வென்றி மறவர்தஞ் சீறூரில்
கூறிட்டார் கொண்ட நிரை."

(புறப்.வெட்சி.14)

உண்ட ஆட்டு - (நிரைபகுத்த மறவர்) களிப்பினால் அயரும் விளையாட்டு.

உதாரணம்

"இளிகொண்ட தீஞ்சொல் இளமா எயிற்றி
களிகொண்ட நோக்கம் கவற்றத் - தெளிகொண்ட
வெங்கண் மலிய விளிவதுகொல் வேற்றார்மேல்
செங்கண் மறவர் சினம்."

(புறப்.வெட்சி.15)

கொடை - (பகுத்தநிரையை வேண்டி இரப்பார்க்குக்) கொடுத்தல்.

உதாரணம்

"இளமா எயிற்றி இவைகாண் நின்ஐயர்
தலைநாளை வேட்டகத்துத் தந்தநல் ஆநிரைகள்
கொல்லன் துடியன் கொளைபுணர்சீர் வல்ல
நல்லியாழ்ப் பாணர்தம் முன்றில் நிறைந்தன.

முருந்தேர் இளநகை காணாய்நின் ஐயர்
கரந்தை அலறக் கவர்ந்த நிரைகள்8
கள்விலை யாட்டிநல் வேய்திரி கானவன்
புள்வாய்ப்பச் சொல்கணி9 முன்றில் நிறைந்தன.

கயமலர் உண்கணாய் காணாய்நின் ஐயர்
அயலூர் அலற எறிந்தநல் ஆக்கள்10
நயனின் மொழியர் நரைமுதிர் தாடி
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன."

(சிலப்-வேட்டுவவரி)

(பாடம்) 1. நுவலுழித்.

2. கலுழ்ம்.

(பாடம்) 3. தந்தமரின்.

4. தொலைவிலார்.

5. கொலைவிலார்.

(பாடம்) 6. அன்ன.

7. நிரைத்த.

(பாடம்) 8. இன நிரைகள்.

9. வாய்ப்புச் சொன்னகணி.

10. எறிந்த நிரைகள்.