களவியல்

89இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டங் காணுங் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே.

இனி, இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், காமப் புணர்ச்சிக்கு இலக்கண வகையாற் குறியிடுதலை உணர்த்துதல் நுதலிற்று , என்பது சூத்திரம்.

(இதன் பொருள்) இன்பமும் பொருளு.............காணுங் காலை என்பது இன்பமும் பொருளும் அறனும் என்று சொல்லப்பட்டு, அன்பொடு புணர்ந்த நடுவண் ஐந்திணையிடத்து நிகழும் காமக் கூட்டத்தினை ஆராயுங்காலத்து என்றவாறு ;

அன்பொடு புணர்ந்த ஐந்திணை என்றதனால் கைக்கிளை பெருந்திணையை ஒழித்து நின்ற முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் எனக் கொள்ளப்படும். அவை அன்பொடு புணர்ந்த வாறு என்னை யெனின் , கைக்கிளை பெருந்திணையைப் போலாமை, ஒத்த அன்பினராகிப் புணர்தலும் பிரிதலும் இருத்தலும் ஊடலும் இரங்கலும் நிகழ்த்துப ஆகலானும், அவை நிகழுங்கால் அத் திணைக்கு உறுப்பாகிய இடமும் காலமும் கருப்பொருளும் துணையாகி நிகழுமாகலானும், இவை அன்பொடு புணர்ந்தன என்க.அஃதேல், ஐந்திணைப் புறத்தவாகிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை என்பனவும் அன்பொடு புணர்ந்தனவாம் எனின், அவை அன்புடையார் பலர் கூடி நிகழ்த்துபவையாகலின், அன்பொடு புணர்ந்தனவாம்.

"அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை."

(குறள் - 76 )

என்பதனாலும் கொள்க.

இனி, இவ்வைந்திணையும் இன்பமும் பொருளும் அறமும் ஆயினவாறு. என்னையெனின் புணர்தல் முதலாகிய ஐந்து பொருளும் இன்பந் தருதலின் இன்பமாயின, முல்லை முதலாகிய ஐந்திணைக்கும் உறுப்பாகிய நிலமும் காலமும் கருப்பொருளும் இவற்றின் புறத்தாகிய வெட்சி வஞ்சி உழிஞை தும்பை என்பனவும் வாகையுள் ஒரு கூறும் பொருளாகலானும் புணர்தல் முதலாகிய உரிப்பொருளான் வருவதொரு கேடின்மையானும், பொருளாயின. இவ்வொழுக்கங்கள் அறத்தின்வழி நிகழ்தலானும், பாலையாகிய வாகைப்படலத்துள் அறநிலை கூறுதலானும், இவை அறமாயின. அஃதேல், கைக்கிளை பெருந்திணையும் இவற்றின் புறமாகிய பாடாண்பாட்டும் காஞ்சியும் அறமுதலாகிய மூன்றுமன்றி அன்பொடு புணர்தல் வேண்டுமெனின், காஞ்சி அன்பொடு புணராமையும் பாடாண்பாட்டும் அன்பொடு புணர்தல் ஒரு தலையன்மையும் அவ்வோத்தினுள் கண்டுகொள்க. ஏனையிரண்டும் அன்பொடு புணராமை மேற்சொல்லப்பட்டன. இனி அவை அறனும் பொருளுமாய் இன்பமாகா; அஃதேல், அறனும் பொருளும் ஆகாமையும் வேண்டுமெனின் குலனுங் குணனுங் கல்வியும் உடையராகிய அந்தணர் என விசேடித்தவழி ஏனையோர்க்கு இம் மூன்று பொருளும் இயைதல் வேண்டுமென்னும் நியமம் இன்மையின் ஏற்றவழிக் கொள்ளப்படும்.

இனி, ஐந்திணைமருங்கிற் காமக்கூட்டம் என்பது புணர்தல் முதலாகிய உரிப்பொருளும், அந் நிலமும் காலமும் கருப்பொருளும், களவினும் கற்பினும் வருதலின், அவை ஒரோவொன்று இருவகைப்படும். அவற்றுள், புணர்ச்சியாகிய இருவகையினும் களவாகிய காமக்கூட்டம் எனக் கொள்க.

இன்னும் அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக்கூட்டம் என்றதனால் எல்லா நிலத்தினும் காமக்கூட்டம் நிகழப்பெறும் என்று கொள்க. அவ்வாறாதல் சான்றோர் செய்யுளகத்துக் காண்க.

மறையோர் தேஎத்....யோரியல்பே என்பது -மறையோரிடத்தோதப் பட்ட மணம் எட்டனுள்ளும் துறையமை நல்யாழினை யுடையராகிய துணைமையோர் நெறி என்றவாறு.

மறையோர் என்றது அந்தணரை. தேஎம் என்றது அவரதாகிய நூலை. மணம் எட்டாவன: பிரமம் , பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்திருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என்பன. பிரமமாவது கன்னியை அணிகலன் அணிந்து பிரமசாரியாயிருப்பானொருவனுக்குத் தானமாகக் கொடுப்பது. பிரசாபத்தியமாவது, மகட்கோடற்குரிய கோத்திரத்தார் மகள் வேண்டியவழி இருமுதுகுரவரும் இயைந்து கொடுப்பது. ஆரிடமாவது, ஒன்றானும் இரண்டானும் ஆவும் ஆனேறும் வாங்கிக்கொடுப்பது. தெய்வமாவது, வேள்விக்கு ஆசிரியராய் நின்றார் பலருள்ளும் ஒருவர்க்கு வேள்வித்தீ முன்னர்க் கொடுப்பது. காந்திருவமாவது ஒத்த இருவர் தாமே கூடுங்கூட்டம். அசுரமாவது வில்லேற்றினானாதல் திரிபன்றி யெய்தானாதல் கோடற்குரியனெனக் கூறியவழி அது செய்தார்க்குக் கொடுத்தல். இராக்கதமாவது தலைமகள் தன்னினும் தமரினும் பெறாது வலிதிற்கொள்வது. பைசாசமாவது, களித்தார் மாட்டுந் துயின்றார்மாட்டுங் கூடுதல்.

"அறன்நிலை ஒப்பே பொருள்கோள் தெய்வம்
யாழோர் கூட்டம் அரும்பொருள் வினையே
இராக்கதம் பேய்நிலை என்றிக் கூறிய
மறையோர் மன்றல் எட்டவை அவற்றுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் புணர்ப்பினதன்
பொருண்மை என்மனார் புலமை யோரே."


என்பதனாலுங் கொள்க துறையமை நல்யாழ்த் துணைமையோர் சார்வாழ் கந்திருவர். அவர் இருவராகித் திரிதலின் துணைமையோர் என்றார். துணையன்பாவது அவர் ஒழுகலாறோடொத்து மக்கண்மாட்டு நிகழ்வது. ஈண்டுக் காமக் கூட்டமென ஓதப்பட்டது மணவிகற்பமாகிய எட்டனுள்ளுங் கந்திருவமென்றவாறு. மாலைசூட்டல் யாதனுள் அடங்குமெனின் அதுவும் ஒத்த அன்பினராய் நிகழ்தலிற் கந்திருவப்பாற்படும்.

அறனும் பொருளும் இன்பமும் என்னாது, இன்பமும் பொருளும் அறனும் என்றது என்னை எனின், பலவகை உயிர்கட்கும் வரும் இன்பம் இருவகைப்படும். அவையாவன, போகம் நுகர்தலும் வீடுபெறுதலும் என. அவற்றுள் வீடுபேறு துறவறத்தில் நின்றார்க்கல்லது எய்தல் அரிதாதற்று, போக நுகர்தல் மனையறத்தார்க்கெய்துவது. அவரெய்தும் இன்பமும் அவ்வின்பத்திற்குக் காரணமாகிய பொருளும் அப் பொருட்குக் காரணமாகிய அறனும் எனக் காரிய காரணம் நோக்கி வைத்தார் என்க.

இதனாற்சொல்லியது ஈண்டுக் களவென்றோதப்படுகின்ற 1ஒழுக்கம் அறம்பயவாத புறநெறியன்று; வேதவிதியாகிய தந்திரம் என விகற்பமாகிய நெறி கூறியவாறு.


1. "களவொழுக்கம் பொதுவாகலின் நான்கு வருணத்தார்க்கும் ஆயர் முதலியோர்க்கும் உரித்து. மாலை சூட்டுதலும் இதன்பாற்படும். வில்லேற்றுதல் முதலியன பெரும்பான்மை அரசர்க்குரிய; அவற்றுள் ஏறு தழுவுதல் ஆயர்க்கே சிறந்தது . இராக்கதம் அந்தணர் ஒழிந்தோர்க்கு உரித்து. வலிதில் பற்றிப் புணர்தலின் அரசர்க்கு இது பெருவரவிற்றன்று. பேய் இழிந்தோர்க்கே உரித்து. கந்தருவரின் மக்கள் சிறிது திரிபுடைமையிற் சேட்படை முதலியன உளவாமென்றுணர்க, அறத்தினாற் பொருளாக்கி அப்பொருளான் இன்ப நுகர்தற் சிறப்பானும் அதனான் இல்லறங் கூறலானும் இன்பம் முற்கூறினார் . அறனும் இன்பமும் பொருளாற் பெறப்படுதலின் அதனை இடைவைத்தார். போகமும் வீடும் என இரண்டும் சிறத்தலிற் போகம் ஈண்டுக் கூறி வீடு பெறுதற்குக் காரணம் முற்கூறினார். ஒழிந்த மணம் கைக்கிளையும் பெருந்திணையுமாய் அடங்குதலின் இதனை அன்பொடு" என்றார் (நச்சி.)