110களவியல்
சூ. 137 :

மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் 

துறந்த ஒழுக்கம் கிழவோற் கில்லை  

(45)
 

க - து :
  

 

களவுக்காலத்துத் தலைவனது   ஒழுகலாறு பற்றியதொரு தன்மை
கூறுகின்றது.
 

பொருள் : களவொழுக்கத்தின்கண்    தனக்குத் தீங்கு   பயப்பனவாக
நிகழும் தனது இராசிக்குரிய பொழுதும், நாள் மீனுக்குரிய பொழுதும் ஆகா
எனக் கூட்டத்தைத் துறந்து ஒழுகும் ஒழுக்கம் தலைமகற்கு இல்லை.
  

ஓரையும்   நாளும்   என வாளா  கூறியிருப்பினும் பின்னர் ஆற்றினது
அருமை    முதலியவற்றை   இதனொடு   மாட்டெறிழுந்து கூறலின் தீங்கு
பயப்பதாகும்.   ஓரையும்   நாளுமாகிய    பொழுதுகள்   இவை  என்பது
தெளியப்படும்.
 

சூ. 138 :

ஆற்றினது அருமையும் அழிவும் அச்சமும் 

ஊறும் உளப்பட அதனோ ரற்றே  

(46)
 
க - து :

 இதுவுமது.
 

பொருள் : குறியிடத்திற்குச்   செல்லும்  நெறியினது  அரிய நிலையும்,
அழிதகவிற்குரிய பிறநிலைகளும், காவல் மிகுதியான்  உளதாகும் அச்சமும்,
விலங்கு முதலியனவற்றான் நேரும் ஊறும் உட்பட  இவை எல்லாம் ஆகா
எனக்  கூட்டத்தைத்  தவிர்ந்து ஒழுகும்  ஒழுக்கம்   தலைவற்கு  இல்லை.
'துறந்த ஒழுக்கம் அதனோ ரற்றே' என வருவித்து முடித்துக் கொள்க.
 

இவ்விரண்டு சூத்திரத்தானும்  இயற்கை நிகழ்வுகளான் வரும் இடையூறு
கருதி   களவின்கண   கூட்டத்தைத்   துறந்து   ஒழுகுதல் தலைவன்கண்
இல்லையென       அவன்றன்      காமச்சிறப்பும்    காதற்கேண்மையும்
வலியுறுத்தப்பெற்றன.
 

சூ. 139 :
 

தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப
 

க - து :

களவின்கண்     தந்தை    தன்னையர்   பற்றியதொரு  மரபு
கூறுகின்றது.
 

பொருள் : தலைவியது    களவொழுக்கத்தை   அவள்    தந்தையும்
தமையன்மாரும் குறிப்பினான் உணர்ந்து கொள்ப.
 

அக்குறிப்பிற்கு ஏதுவாவார் நற்றாயும் செவிலியுமாவர்.
 

எ - டு :

"இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று 

தெருமந்து சாய்த்தார் தலை"
 

(கலி-39)
 

என வந்தமை காண்க.