களவியல்111
சூ. 140 : 

தாய்அறி வுறுதல் செவிலியொ டொக்கும் 

(48)
 
க - து :
 

நற்றாய் தலைவி யொழுக்கத்தை அறியுமாறு கூறுகின்றது.
 

பொருள் :தலைவியது களவொழுக்கத்தை நற்றாய் அறிந்துகொள்ளுதல்
செவிலி அறிந்து கோடலொடு ஒக்கும்.
 

"தாய்க்கும்    வரையார்   உணர்வுடம்  படினே' என்றதனான் ஈண்டுச்
செவிலியொடு   ஒக்கும்  என்றார். அங்ஙனம் மதியுடம்பட்டு உணராதவழிச்
செவிலி அறத்தொடு நிற்றலான் உணரும் என்பது இதன் பயனாம்.
 

எ - டு :

"எனவாங்கு, அறத்தொடு நின்றேனைக் கண்டு திறம்பட 

என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்" 

(கலி-39)
 

என்பதனாற் கண்டு கொள்க.
 

சூ. 141 : 

அம்பலும் அலரும் களவுவெளிப் படுத்தலின் 

அங்கதன் முதல்வன் கிழவ னாகும் 

(49)
 
க - து : 
 

களவொழுக்கம்   புறத்தார்க்குப்   புலப்படுமாறும்    அதற்குக்
காரணம் ஆமாறும் கூறுகின்றது.
 

பொருள் : அயலவர்  நிகழ்த்தும்   அம்பலும்   தூற்றும்    அலரும்
தலைவியது   களவொழுக்கத்தைப்   பிறரறியப்   புலப்படுத்தும்.   அவை
அங்ஙனம் புலப்படுத்தலான் அதற்குக் காரணமாவான் தலைவனாவான்.
 

இரவுக்குறிக்கண்ணும்   பகற்குறிக்கண்ணும்   வந்து      செல்வானைக்
காண்டலான் களவு புலப்பாடாகும் என்க.
 

எ - டு :

"நீர்ஒலித் தன்ன பேஎர் 

அலர்நமக் கொழிய அழப்பிரிந் தோரே". 

(அகம்-211)
 

என்பதனான் தலைவன் காரணமாதல் அறிக.
 

சூ. 142 : 

வெளிப்பட வரைதல் படாமை வரைதல்என்று 

ஆயிரண் டென்ப வரைத லாறே 

(50)
 
க - து :

களவின்    முடிபாகிய   வரைதல்     பற்றியதொரு முறைமை
கூறுகின்றது.
 

பொருள் : களவொழுக்கம்   புறத்தார்க்கும்   வெளிப்பாடான பின்னர்
வரைந்து கோடலும் வெளிப்படாததற்கு   முன்னர் வரைந்து கோடலும் என
வரைதல் பற்றிய முறைமை இருவகைப்படுமென்று கூறுவர் நூலோர்.