112களவியல்

கரணமொடுபுணர   வரைந்துகொள்ளும்   வரைவு   யாவரும்   அறிய
வெளிப்பட வரைந்து கோடலும்,  புணர்ந்துடன்  போகிய காலைப் பிறர்க்கு
வெளிப்பாடாகாமல் வரைந்து   கோடலும்  என இருவகைப்படும் என்பதும்
இதற்கு உரையாகக் கொள்க.
 

எ - டு :

"தகைமிகு தொகைவகை அறியும் சான்றவர் இனமாக 

வேய்புரை மென்றோள் பசலையும் அம்பலும் 

மாயப் புணர்ச்சியும் எல்லாம் உடன்நீங்க 

சேய்உயர் வெற்பனும் வந்தனன் 

பூவெழில் உண்கணும் பொலிகமா இனியே" 

(கலி-39)
 

இது களவு வெளிப்பட்ட பின் வரைவு நிகழ்ந்தமை கூறிற்று.
 

கொல்லைப் புனத்த அகில்சுமந்து கற்பாய்ந்து 

வானின் அருவி ததும்பக் கவினிய 

நாடன் நயனுடையன் என்பதனான் நீப்பினும் 

வாடல் மறந்தன தோள் 

(ஐந்-எழு-2)
 

இது வெளிப்படாமல் வரைவு நிகழ்ந்தது.
 

"எம்மனை முந்துறத் தருமோ 

தன்மனை உய்க்குமோ யாதவன் குறிப்பே"
 

இது   கொண்டுதலைக்   கழிந்தவிடத்துக் கொடுப்போரின்றியும் கரணம்
நிகழ்ந்தமையின் அதுவும் வெளிப்படாமல் வரைந்ததாம்.
 

சூ. 143 :

வெளிப்படை தானே கற்பினொ டொப்பினும் 

ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக 

வரையாது பிரிதல் கிழவோற் கில்லை 

(51)
 
க - து : 
 

களவின் நிகழ்தற்கு ஆகாத பிரிவுகள் இவை என்கின்றது.
 

பொருள் : களவு வெளிப்பாடு   புறத்தார்க்குப் புலனாயவழி அவர்தாம்
கிழவனும்    கிழத்தியுமாதல்    யாவர்க்கும்     தெளிவாதலின் அந்நிலை
கற்பினொடொப்பதாகும். ஒப்பினும்  கரணமொடு   புணரவரைந்து இல்லறக்
கிழமை பூண்டல்லது மேற்கூறிய பிரிவுகளுள்  ஓதல்,  பகை, தூது என்னும்
மூன்று பொருளும் பற்றிப் பிரிந்து செல்லுதல் தலைவனுக்கு மரபாதலில்லை.
 

இம்மூன்று   பொருள்   பற்றிக்  களவுக் காலத்துப் பிரிதல் மரபில்லை.
எனவே ஏனைப் பொருள்  பற்றியும்   காவல்  பற்றியும்  துணை பற்றியும்
பிரிதல் உண்டென்பது புலனாம்.  எடுத்துக்  காட்டுக்கள் மேற்கூறியவற்றுள்
கண்டுகொள்க.
 

களவியல் உரை முற்றியது.