'உரிமை' என்றும் அவை தலைவியினின்றும் தன்னைப் பிரிப்பனவாதலின் 'அஞ்சவந்த' என்றும் கூறினார். எ - டு : வந்துழிக் கண்டுகொள்க. |
இதற்கு அஞ்சும்படியாகத் தலைவி மாட்டுளதாகிய கற்புரிமை என்பார் சிலர். கற்பு குலமகளிர்க்குரிய இயற்கைக் குணமாகலானும் அதுபற்றிய செயல்கள் உவத்தற்குரியனவன்றி அஞ்சத்தக்கன அல்லவாகலானும் அவர்கருத்து ஒவ்வாமையறிக. |
4) நன்னெறிப்படரும் தொன்னலந் பொருளினும் என்பது : நன்னெறிக்கண் செலுத்தும் தொன்மை நலஞ்சான்ற பொருண்மையைக் கருதுமிடத்தும் என்றவாறு. |
என்றது : கல்வியிற்பிரிவைக் கருதுதற் கண்ணும் என்றவாறு. பொதுப்படக்கூறியவதனான் பகைதணி வினையாகிய தூது பற்றிய பிரிவைக் கருதுதலும் கொள்க. எ - டு : வந்துழிக் கண்டு கொள்க. |
5) பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇக் குற்றஞ் சான்ற பொருளெடுத்துரைப்பினும் என்பது : தலைவியையே மனைக் கிழத்தியாகப் பெற்ற விடத்து அவளை அப்பெருமைக்கண் நிறுத்திக் களவின்கண் குற்றஞ் சான்றவையாக நிகழ்ந்தவற்றை எடுத்துரைக்குமிடத்தும் என்றவாறு. |
'குற்றஞ் சான்ற பொருள்' என்றது ஆற்றதுதீமை யஞ்சாது ஒழுகியமையும் இடையீடுபட்டு வருந்தியமையும் உடன்போக்கின்கண் நிகழ்ந்தவையும் அவை போல்வன பிறவுமாம். |
எ - டு :வந்துழிக் கண்டு கொள்க. |
|
6) நாமக்காலத்து உண்டெனத் தோழி ஏமுறு கடவுள் ஏத்தியமருங்கினும் என்பது ; களவின்கண் தலைவன் வருந்தொழிற் கருமை கருதிய காலத்தும்; ஆற்றூறு அஞ்சிய காலத்தும் ஆற்றியிருந்தமைக்குக் காரணமாகியதொரு கடவுள் உண்டு எனக்கூறித் தோழி அத் தெய்வத்தை ஏத்தியவிடத்துத தலைவன் வதுவை நிகழுந்துணையும் அங்ஙனம் காத்து மனையற வாழ்வை நல்கிய அத்தெய்வம் இனியும் காத்தளிக்கும் எனத்தானும ஏத்துதற்கண்ணும் என்றவாறு. |
எ - டு :வந்துழிக் கண்டு கொள்க. |
|
7) அல்லல் தீர ஆர்வமொடளைஇச் சொல்லுறு பொருளின் கண்ணும் என்பது : களவுக் காலத்துத் தலைவி தானுற்ற துயரெல்லாம் நீங்கப் பெருகிய அன்பொடு அளாவித் தலைவி சொல்லும் பொருண்மையிடத்தும் என்றவாறு. |