180கற்பியல்

இளையராவார்  தலைமக்களின் நலம்  பேணி  மெய்ப்புகு  கருவியன்ன
அவரைக் காத்து  அவர் ஏவல் வழி  வினை புரிவோர். பெரும்பான்மையும்
இவர் தலைமக்களின்  தந்தைக்குக் காமக்கிழத்தியர் வழி வந்த மக்களாவார்.
சிறுபான்மை  பிறருமாவார் என்பது  மேல்வரும்  சூத்திரத்தான் புலனாகும்.
[மெய்புகு கருவி = கவசம்] இவர் கூற்றாக வரும்  செய்யுட்கள் வந்த வழிக்
கண்டு கொள்க.
 

சூ. 173 :

உழைக்குறுந் தொழிலும் காப்பும் உயர்ந்தோர்

நடக்கை யெல்லாம் அவர்கட் படுமே

(30)
 

க - து :

இளையோரது  பண்பும்,  செயலும்  காரணமாக அவரது சிறப்புக்
கூறுகின்றது.
 

பொருள் : உழையிருந்து   குற்றேவல்  புரிதலும்,  காவல்  புரிதலும்
உயர்ந்தோர் ஒழுக்கமாகிய நன்னடக்கையும் ஆகியவெல்லாம் இளையோர்க்
கண்ணவாய் விளங்கும்.
 

இளையராயினும்  பிழைபட  ஒழுகார்  என்பது  விளங்க  "உயர்ந்தோர்
நடக்கை  யெல்லாம்  அவர்கட்படும்"  என்றார். எடுத்துக்காட்டு  வந்துழிக்
கண்டுகொள்க.
 

சூ. 174 :

பின்முறை யாக்கிய பெரும்பொருள் வதுவைத்

தொன்முறை மனைவி எதிர்ப்பா டாயினும்

இன்னிழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினும்

இறந்த துணைய கிழவோன் ஆங்கண்

கலங்கலும் உரியன் என்மனார் புலவர்

(31)
 

க - து : 

தலைமகற்குரியதோ ரியல்பு கூறுகின்றது.
 

பொருள் :  தன்   குலமரபு   காரணமாகக்  கரணத்தொடு   மணந்து
கொள்ளப்பெற்ற  பின்முறை  மனைவியை  அம்மரபானே  தான்  முன்னர்
வரைந்து  கொண்ட  தொன்முறை மனைவி மங்கலப்  பொருள்களை ஏந்தி
வந்து  எதிர்  ஏற்றுக்கோடல் நிகழுமாயினும்,  இனிய   கலன்களையணிந்த
தன்புதல்வனை வாயிலாகக் கொண்டு அகமனைக்கண் புகுவானாயினும் அந்
நிலைமக்கண்  தனது குலமரபினையும் காமக்கிழத்தியரைப் பேணவேண்டிய
கடப்பாட்டினையும்   எண்ணிச்    செயலற்றவன்   போலத்    தலைவன்
மனங்கலங்குதற்கும் உரியன் எனக்கூறுவர் புலவர்.