184கற்பியல்

பார்ப்பான்   பிறப்பொழுக்கங்   குன்றக்   கெடும்"  என்பதனான்  அறிக.
[செந்தண்மை  பூண்டொழுகும் அந்தணர் வேறு; இவர்  வேறு.  அந்தணர்,
மறையோர்,  ஐயர்,  பார்ப்பார் என்போர்  செய்தொழில் வேற்றுமையானும்
குறிக்கோளானும் வேறு வேறாவர். இவர் நாற்பலருள் முதலாமவர் ஆதலின்
இப்  பெயர்களை   ஒருபொருட்   கிளவிபோலப்  புலவோர்  வழங்குவர்.
வழங்கினும்   இடம்   நோக்கிச்  சிறப்புப்  பொருள்  கொண்டு  தெளிதல்
மாணாக்கர் கடனாகும்.
 

சூ. 180 :

எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும்

புல்லிய மகிழ்ச்சிப் பொருள வென்ப

(37)
 

க - து : 

வாயிலுரை பற்றியதொரு மரபு கூறுகின்றது.
 

பொருள் :   தலைவன்   தலைவியாகிய   இருவரிடத்தும்  பார்ப்பார்
முதலாய வாயிலோர்  கூறும் வாயிலுரையெல்லாம்  அவர்க்குப் பொருந்திய
மகிழ்ச்சி  தரும் பொருளினவாகும்  எனக் கூறுவர்  புலவர்.  தலைமக்கட்கு
மகிழ்ச்சி   தருவனவற்றையே   வாயிலார்  வாயிலாக  உரைப்பர்  என்பது
கருத்து.
 

சூ. 181 :

அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றின்

சிறைப்புறங் குறித்தன்று என்மனார் புலவர்

(38)
 

க - து : 

மேலதற்கொரு புறனடை கூறுகின்றது.
 

பொருள் :  மேற்கூறிய  வாயிலுரைகள் அன்பின்  நீங்கிய கிளவியாகத்
தோன்றின்  அதுகேட்போர் சிறைப்புறத்தாராகக் கருதியதாகும் எனக்கூறுவர்
புலவர்.
 

தலைமக்கள் சிறைப்புறமாக இருக்குமிடத்துச் சிறுபான்மை அன்பிலாரைப்
போலக் கடிந்துரைத்தலும் உண்டு என்பது கருத்து.
 

சூ. 182 :

தற்புகழ் கிளவி கிழவன்முற் கிளத்தல்

எத்திறத் தானும் கிழத்திக் கில்லை

முற்பட வகுத்த இரண்டலங் கடையே

(39)
 

க - து : 

தலைவிக்குத்  தற்புகழ்ச்சி   குற்றமாகாத   இடங்கள்    இவை
என்கின்றது.
 

பொருள் :  தலைமகன்   முன்னர்த்  தன்னைப்   புகழ்ந்து   கூறுதல்
தலைவிக்கு   எத்தகைய  நிலையினும்  இல்லை. அங்ஙன   இல்லையாதல்
முன்னர்  அகத்திணையியலுள்  வகுத்துஓதிய  இரண்டு இடங்கள் அல்லாத
விடத்து.