கற்பியல்189

ஏனையவர்   என    ஐம்பாற்கும்  முதனிலையாக   வருதலின்    அஃது
முதனிலையளவாய்ப் பொதுப்பட நிற்கும் எனக் கோடலே நேரிதாகும்.
 

சூ. 193 :

யாறும் குளனும் காவும் ஆடிப்

பதியிகந்து நுகர்தலும் உரிய என்ப

(50)
 

க - து : 

எண்ணிய     பண்ணை[கற்-10]   எனக்   காமக்கிழத்தியர்க்கு
ஓதப்பட்ட விளையாட்டு நிகழுமாறு பற்றிய மரபு கூறுகின்றது.
 

பொருள் :  காமக்கிழத்தியர்  தாம்  உறையும்  இல்லையும், ஊரையும்
கடந்து  போய்த் தலைவனொடு  யாறும்  குளனும் காவும் புக்கு விளையாடி
நுகரும்  நுகர்ச்சிகளும்  அவர்க்கு  உரியவாகும்  எனக்  கூறுவர்  புலவர்.
நுகர்ச்சி பலவாதலின் 'உரிய' என்றார்.
 

பதி = உறையுமிடம். அஃது அவர்வாழும் இல்லத்தினையும் ஊரினையும்
ஒருங்குணர்த்தி   நின்றது.   பதியிகந்து   நுகர்தலும்  என்னும்   உம்மை
பதியிலிருந்து நுகர்தலேயன்றி என நிற்றலின் எச்ச உம்மையாம்.
 

எ - டு :

"பலரிவண் ஒவ்வாய் மகிழ்ந அதனால்

அலர்தொடங் கின்றால் ஊரே மலர

தொல்நிலை மருதத்துப் பெருந்துறை

நின்னொடு ஆடினள் தண்புனல் அதுவே"

(ஐங்-75)
 

இது புனலாட்டு நுகர்ந்தது.
 

'புனவளர் பூங்கொடி' என்னும் மருதக்கலியுள்(92)

"நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்

தேனிமிர் காவிற் புணர்ந்திருந் தாடுமார்

ஆனா விருப்போ டணியயர்ப காமற்கு

வேனில் விருந்தெதிர் கொண்டு"
 

எனவருவது பொழிலாட்டு நுகர்ந்தது.
 

சூ. 194 :

காமஞ் சான்ற கடைக்கோட் காலை

ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி

அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே

(51)
 

க - து :

கற்பொழுக்கமாகிய    இல்லற     வாழ்வின்     குறிக்கோள்
இது என்கின்றது.