அவ்வாற்றான் களவு கற்பென்னும் கைகோள்கட்கு உரியராகிய தலைவன் தலைவி முதலானோரும் புறத்திணைக் குரியாராக ஓதப்பெற்ற அந்தணர் முதலிய நாற்பாலாரும் குறுநில மன்னரும் படைத்தலைவர் முதலானோரும் பல்வேறு வினைகளைப் புரியும் வினை வல்லாரும் குற்றேவல் மாந்தரும் பிறரும் மேற்கொள்ளும் ஒழுகலாறு பற்றிய நிகழ்ச்சிகளைத் தொன்னூலோர் மரபினை மேற்கொண்டு, அவ்வத்திணைக்குரிய மாந்தர் கூற்றாகவும் தம்கூற்றாகவும் அமைந்த இலக்கணங்களையும் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நால்வகைச் சொற்களைக் கொண்டு அமைக்கப்பெறும் செய்யுள் பற்றிச் செய்யுளியலுள் கூறப்படும் முறைமையான் அச்செய்யுட்களின் பொருளை மாணாக்கர் திரிபுபடாமல் உணர்தல் வேண்டுதலின் அவை பற்றிய இலக்கணங்களைத் தொகுத்து ஓதுவாராய்த் தெரிபு வேறுநிலையலும் குறிப்பிற்றோன்றலுமாக நிகழுமெனப்பெற்ற இயற்சொல் முதலாய நால்வகைச் சொற்களும், மாத்திரை முதலாய உறுப்புக்களான் அமையும் அறுவகைச் செய்யுட்கண் குறிப்பிற்றோன்றலமைந்து வருமென்றும், அவை சொல்லதிகாரத்து ஓதிய இலக்கணத்தின் வேறுபட்டு அகமும் புறமுமாகிய பொருள்களை உணரநிற்கும் என்றும் கூறலின் இவ்வியல் பொருளியல் எனப்பெயர் பெறுவதாயிற்று. |
அஃதாவது இருதிணை ஐம்பாற் பொருள்களின் பண்பும் செயலுமாகியவற்றை உணர்த்தற்குச் சொல்லதிகாரத்துள் ஓதப்பெற்ற விதிகளான் ஆக்கமுற்றமைந்த சொற்கள், பொருளதிகாரத்துள் தலைவன் தலைவி முதலானோர் கூற்றுக்களுள் அமைந்து வருங்கால் அவை சொல்லிலக்கண நெறி பற்றியமைந்த பொருளினின்றும் வேறுபட்டுத் தலைவன் தலைவி முதலானோர் கருதிய பொருளைப் பயந்து நிற்குமென்றும் அங்ஙனம் பொருள் பயத்தற்கும் அச்சொற்களே கருவியாக உள்ளமையான் அப்பொருளும் அவற்றிற்குரிய பொருளே என்றும், பொருளதிகாரத்துள் சொற்பொருளையறியும் முறைமை கூறலின் பொருளியல் எனப்பட்டது என்றவாறு. |