194பொருளியல்

குரிய  கருவியாகிய  சொற்களைப்  புனையுங்காலும்  குறிப்பாற்  பொருள்
பயக்குஞ் சொற்களைப் பெருக அமைத்தலும் வெளிப்படைச் சொற்களுக்குக்
குறிப்புப் பொருளை ஏற்றி அமைத்தலும் செம்மை சான்ற இலக்கியங்களைச்
செய்யும் மரபாகும். அங்ஙனம்   வெளிப்படைச்   சொற்களும்    குறிப்புப்
பொருளை உள்ளடக்கி நிற்கும் முறைமையைத் தெரிந்து அதனைப் படைத்த
ஆசிரியன்   கருதிய   பொருளை   உணர்ந்து  கொள்ளும்   பாங்கினை
அறிவித்தலே இவ்வியலின் கோட்பாடாகும்.
 

செய்யுட்கண்   பொருளையும்,    சொல்லையும்    புனைந்து   கூறும்
முறைமையாவது  :  பருப்பொருளுக்கு  நுண்பொருளின்   தன்மையையும்,
நுண்பொருளுக்குப்  பருப்பொருளின்  இயல்பையும், உயிரில்  பொருளுக்கு
உயிர்ப்பொருளின் இயல்பையும், உயிர்ப்பொருளுக்கு  உயிரில்  பொருளின்
தன்மையையும்,   அஃறிணைப்   பொருளுக்கு   உயர்திணைப் பொருளின்
ஒழுக்கத்தையும்,  உயர்திணைப்  பொருட்டு   அஃறிணைப்    பொருளின்
செயல்களையும் ஏற்றிக்  கூறுதலும், இல்பொருளை  உள்பொருள் போலவும்
உள்பொருளை இல்பொருள் போலவும் புனைந்து கூறலும் அவை போல்வன
பிறவுமாம்.
 

செய்யுளைப்படைக்கும்  ஆசிரியன்   அங்ஙனம்   புனைந்துரைத்தற்குக்
காரணம்  சுவை (மெய்ப்பாடு) உணர்வும் ஒரு பொருளை ஒரு பொருளொடு
ஒப்புநோக்கிக் காணும் நுண்ணறிவும் பிறவுமாகும்.
 

இத்    தொன்னெறி   மரபினை   இக்கால   அறிஞர்   பெருமக்கள்
படைப்பிலக்கிய  நெறிமுறை   எனவும்,  இலக்கியக்  கோட்பாடு  எனவும்,
இலக்கிய உத்தி எனவும் கூறுவர்.
  

உரையாசிரியன்மார் இவ்வியலை  ஒழிபியல் என்றும் வழுவமைதி கூறும்
இயல்  என்றும்    கூறுவர். அவர்   கருத்து   ஒவ்வாமையை மேல்வரும்
சூத்திரங்களானும் உரை விளக்கங்களானும் ஓர்ந்தறிக.
 

சூ. 197 :

இசைதிரிந் திசைப்பினும் இயையும் மன்பொருளே

அசைதிரிந் திசையா என்மனார் புலவர்

(1)
 

க - து :

"தெரிபுவேறு  நிலையிலும்   குறிப்பிற்   றோன்றலும்  இருபாற்
றென்ப   பொருண்மை    நிலையே"    (சொல்-158)    எனச்
சொல்லதிகாரத்து  ஓதியவாறன்றி   அகப்பொருள்  மாந்தர்தம்
உரையாடற்கண்  பிறிதோராற்றான்  வேறுபட்டு  வரும்  எனச்
சொற்பொருள் அமைதி பற்றியதொரு பொதுமரபு கூறுகின்றது.