"மெய்ப்பாடு என்ற  தொடர்,   உடம்பின்கண்   தோன்றுவது   என்று
பொருள் தருதல் நாட்டியக்கலைக்கு ஏற்புடையது. உடலானும்  உரையானும்
உள்ளத்துணர்வாகிய     நிலைபெறும்    மெய்ப்பாடு      தோன்றுதலின்
இயற்றமிழில் மெய்ப்பாடு    என்றதொடர்   பொருளைப்    புலப்படுப்பது
என்ற  பொருளதாகக்    கோடலே    ஏற்புடைத்து"   என்ற   விளக்கம்
பொருத்தமானது.
 

நூ. 1,2 :   பண்ணை   என்பது   விளையாட்டு.    விளையாட்டாவது
அறிவின்பப்பயன்   விளைக்கும்   ஆடலாகும்.   ஆடுதல்   செயலுறுதல்.
விளையாட்டுக்கு   மறுதலை     வீணாட்டு,    வெறியாட்டு,   களியாட்டு,
உண்டாட்டு என்பன உடம்பு பற்றியன.   பாராட்டு,   சீராட்டு,  கோதாட்டு
என்பன உரை பற்றியன.  கொண்டாட்டு,   திண்டாட்டு   என்பன உள்ளம்
பற்றியன.  உள்ளம்,  உரை,   உடல்   பற்றிச்  செயலுறுதலாம். ஆடல்கள்
தொகுதியாக அடங்கி  நிற்றலின் பண்ணை எனப்பட்டது. மற்றை வினைகள்
கெடவருதலின் விளையாட்டிற்குக்  கெடவரல்  என்பது  ஒரு குறியீடாயிற்று
என்ற விளக்கம் நுட்பமானது.
 

வீரம் முதலிய எட்டுக்குணங்களும் உறழும் நான்கனைச் சுவைக்கப்படும்
பொருள், சுவைஉணர்வு, அது மனத்தின்கட் பட்ட  குறிப்பு,  அஃது உடல்
வாயிலாக வெளிப்படும் சத்துவம் என்று பேராசிரியர் குறிப்பிடுகிறார். இவர்
சுவைப்பொருள்,   சுவைப்போன்,     சுவைப்போனது     சுவையுணர்வு,
சுவைத்தோன் வெளிப்படுத்தும் விறல்   என்கிறார்.   முப்பத்திரண்டனைப்
பதினாறாகவும், எட்டாகவும் சுருக்கிக்   கூறக்காரணம்   கூறும்வழித்  தாம்
நான்காகக் கொண்ட பகுப்பின் சிறப்பினைக் குறிப்பாக விளக்கியுள்ளார்.
 

கூத்து நூல் குறிப்பிடும்  குணம்  ஒன்பதும்,  பண்பும்  செயலும் பற்றிய
இழைகள்   நாற்பத்தெட்டும்   குறிப்பிடப்பட்டுள்ளன.    இவற்றுள்   சில
மெய்ப்பாட்டிற்குரிய பொருள்களாகத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. காட்சி
அளவையான் உணரும் நாடகச் சுவைகளாகிய வீரம், அச்சம் முதலியவற்றை
அடிப்படையாகக் கொண்டே   பெருமிதம்,   அச்சம்  முதலிய  எண்வகை
மெய்ப்பாடும் இயற்றமிழில் அமைவதால்   மெய்ப்பாடு  நாடகக்சுவையோடு
தொடர்புடையது   என்பது   இவ்வியல்   இருநூற்பாக்களால்   போதரும்
என்கின்றார்.
 

இவ்வியலுள்   எண்வகை    மெய்ப்பாடுகளையும்   புலப்படுத்துவதற்கு
அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாக வரும் முப்பத்திரண்டு  பொருள்களும்
அவை அல்லாத இடத்து முப்பத்திரண்டு