சூ. 250 : | பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் |
| கண்ணிய புறனே நானான் கென்ப |
(1) |
சூ. 251 : | நாலிரண் டாகும் பாலுமா ருண்டே |
(2) |
குறிப்பு : பொருளியைபு கருதி இரண்டு சூத்திரங்களுக்கும் பொருள் ஒருங்கு கூறப்பெறுகின்றது. |
க - து : | நாடகநூலார் கூறும் சுவையினது விரியும் வகையும் தொகையும் இவை என்கின்றன. |
பொருள் : அவினயக் கூத்தும் பொருநர் கூத்தும் என இருதிறனாக நிகழும் நாடக வழக்கின்கண் அமைந்துள்ள சுவையினது விரிபொருள் முப்பத்திரண்டும் கட்புலனாதற்குப் பொருந்திய புறநிலையான் பதினாறு எனக் கூறுவர் நாடக நூலார். அவற்றைத் தொகுத்துக்காண அவை எட்டு என்னும் பகுதியாதலும் உண்டு. |
'பண்ணை' என்பது விளையாட்டு. விளையாட்டாவது அறிவின்பப் பயன் விளைக்கும் ஆடலாகும். வீணாட்டு என்பது இதன் எதிர்மறை. ஆடுதல் செயலுறுதல். நாவசைத்தலான் பேச்சு நிகழ்தலின் பேசுதலை உரையாட்டு என்பது வழக்கு. எனவே, உடம்பாலும் நாவாலும் ஒரு பொருள் விளையுமாறு நிகழும் ஆடல் விளையாட்டென்பது போதரும். |
வெறியாட்டு, களியாட்டு, உண்டாட்டு என்பவை உடம்பு பற்றியன. பாராட்டு, சீராட்டு, கோதாட்டு என்பன உரை பற்றியன. கொண்டாட்டு, திண்டாட்டு என்பவை உள்ளம் பற்றித் தோன்றி உடம்பானும் உரையானும் வெளிப்பாடாவன. ஈண்டு அவையாவும் தொகுதியாக அடங்கி நிற்றலின் பண்ணை எனப்பட்டது. பண்ணுதல் பண்ணையாயிற்று. |
"கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு" (உரி-21) என்பது உரியியற் சூத்திரம். அதனால் பண்ணை என்பது பெயர்ப் போலியாய் உரிச்சொல்லாக நிகழுமிடத்து அதன் பொருள் விளையாட்டென்பதாகும். |
மற்றைய வினைகள் கெடவருதலின் விளையாட்டிற்குக் 'கெடவரல்' என்பதும் ஒரு குறியீடாயிற்று. இதுவும் உரிச்சொல் நிலையில் இப்பொருளினதாகும். சிற்றில் இழைத்தல் முதலியவை கெடவரல் என்பதற்கு ஏற்கும். (இவை பெயர்வினைகட்கு அடியாக வருதற்கண் பொருள் வேறுபடும் என்பதை உரியியல் உரை நோக்கி அறிந்து கொள்க) |