மெய்ப்பாட்டியல்

மார்வகம் மிடைத்தல் வயிறுகிள யுளைத்தல்

கடிக்கடி நொடித்தல் கணைக்கணை கடுத்தல்

ஏணிநோக் கிறுத்தல் இடைக்கிடை சுளித்தல்

மாணிமீக் கொடுத்தல் மோதிநீக் கிருத்தல்

கால்குழை குழைத்தல் கைதழை தழைத்தல்

நச்சுறல் வங்குறல் சொங்குறல் மூச்சை

நோயுறல் பேயுறல் சாவுற லென்ன

பற்பல மெய்யும் பற்பல இழையே" என்பனவாம்.
 

இவற்றுள்  முற்கூறியவை  பெரும்பான்மையும்  பண்பு  பற்றியனவாயும்
பிற்கூறியவை  செயல்   பற்றியனவாயும்  அமைந்திருத்தலைக்  காணலாம்.
இவை யாவும்  நாட்டியக்  கூத்திற்குரிய  சுவைப்பொருள்  பற்றியனவாகும்.
இவற்றுள்   சில    மெய்ப்பாட்டிற்குரிய   பொருளாகத்   தொல்காப்பியம்
கூறுவதனை மேற்காணலாம்.
 

செய்யுளுறுப்பாகிய  மெய்ப்பாடு   பற்றிய   இலக்கணங்கூற  முற்பட்ட
ஆசிரியர்   நாடக   நூலார்  கூறும்  சுவையினை  ஈண்டுச்  சுட்டுதற்குக்
காரணம்  என்னையெனின்?   நகை   முதலாய   மெய்ப்பாடுகள்  எட்டும்
காட்சிஅளவையாகிய நாடகச்  சுவைகளோடு  தொடர்புடையவையாகலானும்
நாடகச் சுவைகளாகிய வீரம், அச்சம்,  வியப்பு,  இழிவு,  காமம்,  அவலம்.
நகை,  வெகுளி   என்பவற்றை  அடிப்படையாகக்  கொண்டே,  முறையே
பெருமிதம்,  அச்சம்,   மருட்கை,  இளிவரல்,   உவகை,  அழுகை,  நகை,
வெகுளி  என்னும்  மெய்ப்பாடுகள்  அமைக்கப்பட்டன  என்பது  புலனாக
வேண்டுதலானும்   நாடகத்   தமிழுக்குரிய   சுவைகளே   இயற்றமிழாகிய
செய்யுட்கண்    பொருள்    புலப்பாடு    செய்யும்   மெய்ப்பாடென்னும்
உறுப்பாக அமைகின்றன என்பதை உணர்த்த வேண்டுதலானும் என்க.
 

மற்றுப் புறத்திணை  ஒழுகலாற்றிற்குரிய  அந்தணர்,  அரசர்  முதலாய
உறுப்பினரையும்  அகத்திணை   ஒழுகலாற்றிற்குரிய  தலைவன்,  தலைவி,
தோழி முதலாய உறுப்பினரையும் அமைத்துச்  செய்யுள் செய்யும் புலவோர்
தம்    கூற்றாகவும்     அவ்வுறுப்பினர்     கூற்றாகவும்    செய்யுளைப்
புனைந்துரைக்குமிடத்துப் பொருளை விளக்கும்  திணையுணர்  வகையாகிய
உள்ளுறையுவமமும் ஏனையுவமமும் தோன்றி வருமாறு பற்றி உவமவியலுள்;
ஒருவன் ஒரு பொருளை உவமவாயிலாக விளக்க முற்படுதற்குக் காரணத்தை
இருவகைப்படுத்துக்   கூறுவார்   ஆசிரியர்.   ஒன்று   அப்பொருளிடத்து
அமைந்துள்ள   நிலைமை;     மற்றொன்று    அப்பொருளைப்   பற்றித்
தன்னுள்ளத்து   எழும்   உணர்வு;   இவற்றுள்  பொருளிடத்தமைந்துள்ள
நிலையைச்