மெய்ப்பாட்டியல்

1. நகையாவது முறுவலித்தல். அஃது புன்முறுவலும்  நன்முறுவலும் என
இருதிறப்படும்.  நகையெனினும்   மூரல்  எனினும்  ஒக்கும்.  (வன்முறுவல்
வெகுளிபற்றிப் பிறத்தலின் அதனை வேறாகக் கொள்க)
 

2. அழுகையாவது அவலித்தல். அது கண்கலுழ்தலும், துயர் உறுதலுமாக
நிகழும். தனக்குற்ற இடர்  காரணமாக  வரும்  அழுகை  நொந்தழுதலாம்.
பிறர்க்குற்ற இடர் காரணமாக வரும் அழுகை இரங்கியழுதலாம்.
 

அழுகை, அவலம், இரக்கம், துயரம் என்பவை ஈண்டு  ஒத்த பொருளில்
வரும். பெருமிதம் பற்றி வரும் உவகைக்கலுழ்ச்சி அழுகையாகாதென்றறிக.
 

3. இளிவரலாவது இழிவுறுதல்.  இகழ்வுறுதல்  எனினும்  ஒக்கும்.  அது
கொள்ளுதற் கொவ்வாக் குறையும் மனக்குறையும் பற்றிவரும் துன்பமாம்.
 

4. மருட்கையாவது வியப்புறுதல். அஃது  ஆராய்ச்சிமுட்டுப் பாடுற்றவழி எய்தும் அறிவு இயங்காநிலையாகும்.
 

5. அச்சமாவது  பருவரலிடும்பை நேருங்கொல்  என எண்ணி  உள்ளம்
மெலிதலாம். பயம் என்பது உலகவழக்கு.
 

6. பெருமிதமாவது  வீறு.  அஃது  அறிவும்  ஆற்றலும்  மிக்க  விடத்
தெய்தும் மனநிலை (பெரும்மிதம்-பெருமிதம், மிதம்-அளவு)  வீரம்  என்பர்
உரையாசிரியன்மார். பெருமிதத்திற்குக் காரணமான  பொருள்களுள் தறுகண்
என்பது மட்டுமே வீரம் எனற்குத் தகுமாதலின்  வீரம் வேறு;  வீறு  வேறு
என அறிக.
 

7. வெகுளியாவது  சினத்தல்.  சீற்றம்   எனினும்   ஒக்கும்.  இச்சொல்,
வேகும்-உள்-இ. என்னும் உரியடிகளாற் பிறந்த பெயராகும்.
 

8. உவகையாவது  உவத்தல்.  அஃதாவது  இனிமையொடு  திளைக்கும்
உள்ளக்களிப்பு. மகிழ்வெனினும் ஒக்கும்.
 

இனி, இவற்றை இங்ஙனம் நிரல்படவைத்தமைக்கு ஒருவாறு அமைதி
கூறும்.
 

உணர்தற்கு   எளியதும்  யாவர்க்கும்  ஒப்பதும்பற்றி  நகை  முதற்கண்
வைக்கப்பட்டது. அவ்வாறே அமைந்து நகைக்கு  மறுதலையாக  வருதலின்
அழுகை அதன்பின் வைக்கப்பட்டது.