மெய்ப்பாட்டியல்
எ - டு :

"எல்லா இஃதொத்தன்" என்னும் குறிஞ்சிக்கலியுள்

பல்லார்நக் கெள்ளப் படுமடல் மாவேறி

மல்லலூர் ஆங்கண் படுமே நறுநுதல்

நல்காள் கண்மாறி விடினெனச் செல்வானாம்

எள்ளி நகினும் வரூஉம் இடையிடைக்

கள்வர் போல நோக்கினும் நோக்கும்

(கலி-61)
 

எனவரும். இதனுள்  எள்ளிநகினும்  வரூஉம்  எனத்தான்  எள்ளியவாறும்,
'பல்லார்நக்கெள்ள'   எனப்பிறர்   எள்ளியவாறும்    பற்றித்   தோழிக்கு
நகைதோன்றியவாறு கண்டுகொள்க.
 

2. இளமையாவது : அகவைசாலா  மழவுத்தன்மை. இது பண்பு  பற்றிய
செயல். இதுவும் இருபாலும் பற்றி வரும்.
 

எ - டு :

திறனல்ல யாங்கழற யாரை நகுமிம்

மகனல்லான் பெற்ற மகன்

(கலி-86)
 

இது தனது இளமைபற்றித் தோன்றிய நகை.
 

நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்
(அகம்-16)
 

இது பிறர் இளமை காரணமாகப் பிறந்த நகை.
 

3. பேதைமையாவது : விளைவறியா    வளமில்அறிவு.   கேட்டதனை
உய்த்துணராது மெய்யாகக் கோடல் என்பார் இளம்பூரணர். இதுவும்  பண்பு
பற்றிய செயலாம். இதுவும் இருபாலும் பற்றிவரும்.
 

எ - டு :

நகைநீ கேளாய் தோழி
(அகம்-248)
 

இது, தன்பேதைமை காரணமாகப் பிறந்த நகை.
 

 

நகையா கின்றே தோழி

மம்மர் நெஞ்சினன் தொழுதுநின் றதுவே
(அகம்-56)
 

இது, பிறர்பேதைமை காரணமாகத் தோன்றிய நகை.
 

4. மடனாவது :வெள்ளறிவு.   கொளுத்தக்    கொண்டு   கொண்டது
விடாமை என்பார் உரையாசிரியர். இதுவும்  பண்பு  பற்றியதாகும்.  இதுவும்
இருபாலும் பற்றிவரும்.
 

எ - டு :

குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண்

சிறக்கணித்தாள் போல நகும்

(குறள்-1095)
 

இது தனது மடப்பங் காரணமாகப் பிறந்த நகை.
 

நாம்நகை யுடையம் நெஞ்சே நம்மொடு

தான்வரு மென்ப தடமென் றோளி

(அகம்-121)
 

இது பிறர் மடப்பம் பற்றித் தோன்றிய நகை.