272மெய்ப்பாட்டியல்

உள்ளப்பட்டநகை   என்றதனான்   "நகுதக்கனரே   நாடு   மீக்கூறுநர்
(புறம்-72) என்பது பகைவரைப்  பேதைமையுடையாராகக்  கருதிக்  கூறலின்
இதன்கண் அடங்குமென்க.
 

சூ. 254 :

இளிவே இழவே அசைவே வறுமை என

விளிவில் கொள்கை அழுகை நான்கே 

(4)
 

க - து :
 

இளிவு    முதலாய     நான்கு     பொருள்பற்றி    அழுகை
தோன்றுமென்கிறது.
 

பொருள் : இளிவு இல்லாத கோட்பாட்டினையுடைய அழுகையென்னும்
மெய்ப்பாட்டிற்குக்  காரணமாகிய  பொருள்   இழிவும்  இழவும்  அசைவும்
வறுமையும் என நான்குமாம் எனக்கூறுவர் புலவர்.
 

இழிவென்பது    எதுகை   நோக்கி   இளிவென    நின்றது.   அன்றி
இளிவென்பதும்   ஒரு   சொல்விழுக்காடு  எனினும்  அமையும்.  நான்கே
என்னும் ஏகாரம் ஈற்றசை. ஏனைய எண்ணுப் பொருளின.  என்ப  என்பது
அதிகாரத்தான் வந்தது. இவை நான்கும் இருபாலும் பற்றிவரும்.
 

1. இழிவாவது : இகழ்தற்குரிய    பண்பும்   செயலும்   நிலைமையும்
பற்றிவரும் இழிதகவு.
 

எ - டு :"கடல் கண்டன்ன"  என்னும்  அகப்பாடனுள்  நீ  மாணிழை
முன்கைக் குறுந்தொடி துடக்கிய  நெடுந்தொடர்  விடுத்தமையான்  தன்னை
இழிதகவு செய்ததாகக் கருதிய பரத்தை,
 

"தன்முகத்து எழுதெழில் சிதைய அழுதனள்" (அக-176)
 

என்றது தண்கண் அமைந்த இழிவுபற்றிப் பிறந்த அழுகை.
 

"கயமலருண்கண்ணாய்"   என்னும்   கலியுள்   "தானுற்ற   நோயுரைக்
கல்லான் பெயரும்மன் பன்னாளும்" எனத்  தலைவன்  இழிவந்தொழுகுதல்
காரணமாகச் "சேயேன்மன் யானுந்  துயருழத்தேன்" (கலி-37) எனத்  தோழி
கூறியது பிறரிழிவு காரணமாகப் பிறந்த அழுகையாம்.
 

2. இழவாவது :தாய், தந்தை, கணவன் முதலிய சுற்றத்தைப்  பிரிதலும்
பெறற்கரிய பொருளை இழத்தலுமாம்.
 

எ - டு :

"மெழுகும் ஆப்பி கண்கலுழ் நீரானே"
(புறம்-249)
 

என்பது தன்கண் தோன்றிய இழவு பற்றிப் பிறந்த அழுகை.