கோடல்" காதல் கைம்மிகல் இரண்டன் எடுத்துக்காட்டுக்களும் ஏறத்தாழ ஒரு நிலையிலேயே உள்ளன. காதல் கைம்மிகலுக்குரிய இரண்டாம் எடுத்துக்காட்டே போதுமானது. |
கட்டுரை இன்மை என்பதற்கு இவரும் வாய்வாளாதிருத்தல் என்று உரைகூறி எடுத்துக்காட்டில் தலைவி தலைவனைக் 'களவனும், கடவனும், புணைவனும் அவனே' என்று குறிப்பிட்ட செய்தியை எடுத்துக்காட்டுகிறார். கட்டுரையின்மைக்கு இப்பாடல் பொருத்தமாவதற்குப் போதிய விளக்கந்தரப்படல் வேண்டும். ஒருவர் வினாயதற்கு விடை கூறாதிருத்தலும் ஒரு வகைவிடையாதலின் அதன் கண்ணும் மெய்ப்பாடு புலப்படும். மெய்ப்பாடு இளிவரலே. |
நூ. 24 : புணர்ந்துழி உண்மைப்பொழுது மறுப்பாக்கம் - உரைவலிந்துரை. எடுத்துக்காட்டும் இல்லை. இதற்குக்கூறும் மறுப்பும் மனங்கொள்ளத்தக்கதாக இல்லை. அன்புதொக நிற்றற்கு இவர் கூறும் பொருள் இல்லது காய்தலின்கண் அடங்கும். |
அன்புதொக நிற்றல்-தொகுதல்-மறைதல் என்கிறார். இதற்குப் பேராசிரியர் வரைந்த உரையை மறுக்குமிடத்து அருள் மிக உடைமை அன்பு தொக நிற்றல் ஒருவாற்றான் கூறியது கூறல் என்கிறார். அருள்மிக உடைமையின் காரணம் அன்பு தொக நிற்றல் எனவே இவை காரியமும் காரணமுமான வெவ்வேறு நிலையின. புலவியாற் கூறும் பொருள் இல்லது காய்தலில் அடங்கும். காய்தல் - பொய்க் கோபம் கொள்ளுதல். |
நூ. 25 : உருவுக்கும் திருவுக்கும் இவர் உரையில் வேறுபாடு புலப்பட்டிலது. அன்பு பொதுப்பண்பாயினும் இல்லறத்தார்க்கு மிக இன்றியமையாதது என்பதுபற்றி வாழ்க்கைத்துணைநலம், புதல்வரைப் பெறுதல் என்பவனவற்றை அடுத்து அன்புடைமை இடம் பெற்றுள்ளது. எனவே, இல்லறத்தார்க்கு அது மிக இன்றியமையாதது என்பது பெறப்படுகிறது. மேலும் அருள் அன்பீன் குழவியாகலானும் அன்பினைக் குறிப்பிட வேண்டியது இன்றியமையாதது. திரு - திருப்தி. இல்லறத்தார்க்கு இன்றயமையாத பண்பு. அஃது இருவர்க்கும் ஒப்ப நிகழவேண்டிய இன்றியமையாமையை இவர் நெகிழ்த்த காரணம் புலப்படவில்லை. |
நூ. 26 : நூற்பாவின் சொற்றொடர்அமைப்புக் குடிமை, இன்புறல், ஏழைமை, மறப்பு என்று இணைத்துக் கோடற்கு ஏற்றதாக உளதா என்பது ஆராயத்தக்கது. இளம்பூரணரை ஒட்டிக் குடிமையின்புறல் என்று ஒன்றாகக் கொள்ளப்பட்டுளது. |